திங்கள், 23 டிசம்பர், 2019

பேரணி அல்ல போர் அணி ... 10 லட்சம் பேர் கலந்துகொண்டதாக செய்தி நிறுவனங்கள் நேரடி காட்சி ..


தினகரன் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் பேரணி தொடங்கியது: லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சிகள் பேரணி தொடங்கியது. குடியுரிமை திருத்த  சட்டத்தை எதிர்த்து நாடு  முழுவதும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என்று  போராட்டத்தில் குதித்துள்ளனர். தினந்தோறும் வெவ்வேறு  வடிவத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் திராவிடர் கழகம், காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை  சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய  ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து  கொண்டனர். இந்த கூட்டத்தில் இஸ்லாமியர்-ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைத்த பாஜக- அதிமுக அரசுகளை கண்டித்து, சென்னையில், “குடியுரிமைத் திருத்தச்  சட்டத்தை  எதிர்த்து வருகிற 23ம் தேதி(திங்கட்கிழமை) மாபெரும் பேரணி” நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று சென்னையில் மாபெரும் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பேரணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை  நடைபெறும் பேரணியல், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி,  மதிமுக பொது செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர்  கே.எம்.காதர் மொய்தீன், விடுதலை  சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் .ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள்  தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர் மற்றும் திமுக  தோழமை கட்சி தலைவர்கள் உள்ளிட்ட  லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகில் இருந்து தொடங்கி பேரணி, புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில்  முடிவடைகிறது. அங்கு தலைவர்கள் கண்டன உரையாற்றுகின்றனர்

கருத்துகள் இல்லை: