ஞாயிறு, 22 டிசம்பர், 2019

BBC : குடியுரிமை திருத்த சட்டம்: ஆதரவாக களமிறங்கிய 1000 கல்வியாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள்

தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு
எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்து, போராட்டக்காரர்களின் உயிரிழப்பு, கைதுகள் உள்ளிட்டவை நிகழ்ந்துவரும் சூழலில், 1000 அறிவுஜீவிகள் அந்த சட்டத்துக்கு ஆதரவளித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "புகலிடம் கோரும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச மக்களின் வெகுநாள் கோரிக்கை இந்த சட்டத் திருத்தம் மூலம் நிறைவேறி உள்ளது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மறந்துபோன
சிறுபான்மையினருக்காக எழுந்து நின்று, இந்தியாவின் நாகரீகத்தை நிலை நிறுத்தியதற்காகவும், மத ரீதியிலான துன்புறுத்தல்களைச் சந்தித்தவர்களுக்குப் புகலிடம் அளிப்பதற்காகவும் நாடாளுமன்றத்தைப் பாராட்டுகிறோம் இந்தக் கூட்டறிக்கையில் சென்னை ஐஐடி-யை சேர்ந்த பல பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
நாட்டில் வேண்டுமென்றே பயத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி, வன்முறைக்கு வழிநடத்துகின்றனர். இவற்றை மிகுந்த வேதனையுடன் கவனிக்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த அறிக்கையில், மாநிலங்களவை உறுப்பினர் சுவபன் தாஸ்குப்தா, ஷில்லாங் ஐ.ஐ.எம். தலைவர் சிஷிர் பஜோரியா, நாளந்தா பல்கலைக்கழக துணைவேந்தர் சுனைனா சிங், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக டீன் அய்னுல் ஹசன் உள்ளிட்டோரும் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த சட்டத் திருத்தமானது, இந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த அகமதியாக்கள், பலூச்சிகள் அல்லது வேறு பிரிவுகள் மற்றும் இனங்கள் இந்தியாவில் குடியுரிமை கோருவதைத் தடுக்கவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்து, போராட்டக்காரர்களின் உயிரிழப்பு, கைதுகள் உள்ளிட்டவை நிகழ்ந்துவரும் சூழலில் மூன்று கோடிக்கும் மேலான இந்தியக் குடும்பங்களை நாடும் பிரசார இயக்கம் ஒன்றை நடத்த இந்திய அரசுக்கு தலைமை வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விளக்க சிறப்பு பிரசார இயக்கம் ஒன்றை நடத்த பாஜக முடிவு செய்துள்ளதாகவும், இதன்போது மூன்று கோடிக்கும் மேலான குடும்பத்தினரை பாஜகவினர் தொடர்பு கொள்வார்கள் என்றும் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பூபேந்தர் யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

மின்னம்பலம் : குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்களுக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளது.
மூன்று கோடி குடும்பங்கள், 1,000 பேரணிகள்: பாஜகவின் திட்டம்!குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், வடகிழக்கு மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இலங்கைத் தமிழர்களுக்கான குடியுரிமை குறித்து எதுவும் சொல்லப்படவில்லை என்றும் நாடு முழுவதும் 10 நாட்களைக் கடந்து தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவ்வளவு எதிர்ப்புக்கு மத்தியிலும் சட்டத்தைத் திரும்பப் பெற மறுத்த மத்திய அரசு, போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், மக்களையும் மாணவர்களையும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்துவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா, மூத்த தலைவர்களுடன் நேற்று (டிசம்பர் 21) ஆலோசனை மேற்கொண்டார். அதில், எதிர்க்கட்சிகளுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பாஜக பொதுச் செயலாளர் பூபேந்தர் யாதவ் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாஜக சார்பில் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளோம். அடுத்த 10 நாட்களுக்கு நாடு முழுவதும் மூன்று கோடி குடும்பங்களை நேரடியாகச் சந்தித்து இந்தச் சட்டம் தொடர்பாக விளக்கம் அளிக்கவுள்ளோம். சட்டத்தை விளக்கி 250க்கும் மேற்பட்ட இடங்களில் பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தவுள்ளோம். 1,000 இடங்களில் பேரணி நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பின் மூலம் குடியுரிமைச் சட்டத்தின் உண்மைகளையும் எதிர்க்கட்சிகளின் பொய்களையும் மக்களிடம் கொண்டு செல்வோம்” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: