வெள்ளி, 27 டிசம்பர், 2019

வாக்குப் பெட்டி எரிப்பு, கடத்தல்: உக்கிரத்தில் உள்ளாட்சித் தேர்தல்!

வாக்குப் பெட்டி எரிப்பு, கடத்தல்: உக்கிரத்தில் உள்ளாட்சித் தேர்தல்!மின்னம்பலம் : முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாலை 5 மணியோடு நிறைவடைந்தது.
ஊரகப் பகுதிகளுக்கான முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு இன்று (டிசம்பர் 27) காலை 7 மணிக்குத் துவங்கியது. வாக்குப் பதிவு ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே பல வாக்குச் சாவடிகளில் வாக்குச் சீட்டு தொடர்பாக குழப்பங்கள் எழுந்தன. அந்த இடங்களில் சிறிது நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டு மீண்டும் தொடரப்பட்டது. மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு நேரம் முடிந்தாலும் வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்குப் பெட்டிகள் அனைத்தும் மூடி சீல் வைக்கப்பட்டன. பிறகு அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அருகேயுள்ள பாப்பரம்பாக்கம் வாக்குச் சாவடி மையத்தில் ஏற்பட்ட தகராறில் வாக்குப் பெட்டியை வெளியே எடுத்துவந்த சில நபர்கள், அதற்கு தீவைத்து விட்டு தப்பியோடினர். இதனால் பாப்பரம்பாக்கம் வாக்குச் சாவடி அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருவள்ளூர் ஆட்சியர், “பாப்பரம்பாக்கம் பகுதியில் வாக்குப் பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டதால் 2 வாக்குச்சாவடி மையங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறும்” என்று கூறினார்.

இதுபோலவே மணவாளன் நகர் அடுத்த ஒண்டிக்குப்பத்தில் கள்ள ஓட்டு போட முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. அவர்களை காவல் துறையினர் அறிவுறுத்தியும் யாரும் கலைந்து செல்லாததால் கூட்டத்தை தடியடி நடத்தி கலைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகேயுள்ள முள்ளிப்பட்டியில் வாக்குச் சாவடியின் பின்புற கதவை உடைத்த மர்ம நபர், பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரை தள்ளிவிட்டு வாக்குப் பெட்டியைத் திருடிச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த வாக்குப் பெட்டியை சீல் உடைக்கப்படுவதற்கு முன்பே காவல் துறையினர் மீட்டனர். இதுதொடர்பான விசாரணையில், மதுபோதையில் அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர், வாக்குப் பெட்டியை தூக்கிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
நாகை மாவட்டத்திலுள்ள வீரன்குடிகாடு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்ற சத்யசீலன் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாக கல்லூரி படிக்கும் மோகனை காவல் துறையினர் கைது செய்தனர்

கருத்துகள் இல்லை: