திங்கள், 23 டிசம்பர், 2019

அஸ்ஸாமில் தடுப்புக் காவல் முகாம் .. ஏழு கால்பந்து மைதான அளவில்.. - வேகமெடுக்கும் மத்திய அரசு

assam Detention Campassam peoplevikatan.com - மலையரசு : இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள வேளையில், பட்டியலில் இல்லாதவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களைத் தங்கவைக்க, மெகா தடுப்பு மையம் கட்டப்பட்டுவருகிறது. ஆகஸ்ட் 31-ம் தேதி, தேசிய குடியுரிமைத் தீர்ப்பாயம் வெளியிட்ட தேசிய குடியுரிமைப் பதிவேட்டில், அஸ்ஸாமில் 60 ஆண்டுகளாக வசித்துவந்த 19 லட்சம் பேரின் பெயர்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்தப் பதிவேட்டின் இறுதிப் பதிப்பில், சுமுகமான தீர்வு கிடைக்கும் என்று நம்பியிருந்த அஸ்ஸாம் மாநில மக்கள் பலருக்கும் இது, தலையில் இடி விழுந்ததைப் போல ஆகியுள்ளது. தேயிலைத் தொழிலாளர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், பூர்வகுடிகள் என எந்தப் பாகுபாடுமின்றி, அனைத்து தரப்பினர் பெயர்களையும் பட்டியலிலிருந்து தூக்கியிருக்கிறது, தேசிய குடியுரிமைத் தீர்ப்பாயம். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள வேளையில், பட்டியலில் இல்லாதவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளவர்களைத் தங்கவைக்க, `மெகா' தடுப்பு மையம் கட்டப்பட்டுவருவது, அம்மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களுக்காகத் தடுப்பு மையங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவில் அப்படிப்பட்ட மையம் எதுவும் இல்லாத நிலையில், முதல் தடுப்பு மையமாக இந்த மையம் உருவாகிவருகிறது. இவ்வாறு அஸ்ஸாமில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 19 லட்சம் பேர் என்பது, புதுச்சேரி, கோவா, அருணாசலப் பிரதேசம், மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் மக்கள்தொகையைவிட அதிகம். இவ்வளவு பேருக்கான தடுப்பு மையமாக இல்லாமல், தற்போது 3,000 பேர் ஒரே இடத்தில் வசிக்கும் வகையில் இந்த `மெகா' தடுப்பு மையம் உருவாக்கப்பட்டுவருகிறது.



அஸ்ஸாமின் முக்கிய நகரமான கௌகாத்தி நகரின் மேற்கே உள்ள கோல்பாரா மாவட்டத்தின் மத்தியா பகுதியில்தான் இந்த தடுப்பு மையத்தின் பணிகள் வேகமெடுத்துள்ளன. ஏழு கால்பந்து மைதான அளவில்... அதாவது 2.5 ஹெக்டேர் பரப்பளவில் கட்டப்பட்டுவரும் இந்தத் தடுப்பு மையத்தில், மொத்தம் 15 நான்கு மாடிக் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. தேசிய குடியுரிமைப் பதிவேட்டின் இறுதிப் பதிப்பு வருவதற்கு முன்பாகவே இந்த கட்டடப்பணி தொடங்கப்பட்டதாகக் கூறப்படும் வேளையில்... அஸ்ஸாம் மாநிலம் மழை, வெள்ளத்தால் கடும் பாதிப்பைச் சந்தித்தது. அதனால், இந்த கட்டடப்பணி சிறிது தாமதமானது எனக் கூறியுள்ளனர், அந்தப் பகுதிவாசிகள்.




assam Detention Camp
Reuters
மழையால் கட்டுமானப் பணி தாமதமான போதிலும், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் இந்த வளாகம் தயாராக இருக்கும் என்று அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் இதில், ஒரு மருத்துவமனை, ஒரு ஆடிட்டோரியம், ஒரு பொதுச் சமையலறை, 180 கழிப்பறைகள் மற்றும் சலவை அறைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். தடுப்பு மையத்துக்கு வெளியே ஒரு தொடக்கப் பள்ளியும் இருக்கும்.
``10 ஏக்கர் பரப்பளவில், காவல் கோபுரங்கள் உட்பட முழுக்க அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்கப்போகும் இந்த மையம், ஜெயில் போல் இல்லாமல், `ஹாஸ்டல் டைப்'பில் அறைகள், ஒவ்வோர் அறையிலும் நான்கு முதல் ஐந்து பேர் வரை தங்கும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லாமல், மிகப்பெரிய சுற்றுச்சுவரும் கட்டப்பட்டுவருகிறது. குழந்தைகள், தாய்மார்களுக்கு சிறப்பு வசதி மையங்களும் இங்கேயே ஏற்படுத்தப்படும்'' என்று விவரிக்கிறார், அங்குள்ள அதிகாரி ஒருவர்.




``நாங்கள், தினமும் 11 மணி நேரம் வேலைபார்க்கிறோம். காலை 7 மணிக்கெல்லாம் தொடங்கிவிடுகிறோம். விரைவாக முடிப்பதற்காக, 300-க்கும் மேற்பட்டவர்கள் இங்கு வேலை செய்துவருகிறோம்" என அங்கு பணிபுரிகிறவர்கள் கூறியுள்ளனர்.
தீர்ப்பாயத்தின் இறுதிப் பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. வீரப்பதக்கம் பெற்ற முன்னாள் ராணுவ வீரர் முகம்மது சனாவுல்லா, தெற்கு அபயாபூரி எம்.எல்.ஏ அனந்தகுமார் மாலோவின் பெயர்கள்கூட விடுபட்டுள்ளனவாம். பட்டியலில் பெயர் நீக்கப்பட்டோர் மீண்டும் விண்ணப்பிக்க, 120 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.


assam Detention Camp


assam Detention Camp
Reuters
நடுவர் தீர்ப்பாயத்தில் அவர்களுடைய கோரிக்கை நிராகரிக்கப் பட்டால், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், காலக்கெடு முடிவதற்குள் தங்களின் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்கள், இந்தியாவின் முதல் மற்றும் முழுமையான தடுப்புக்காவல் மையமான இதற்குக் கொண்டுசெல்லப்பட உள்ளார்கள். அஸ்ஸாம் போலீஸ் ஹவுஸிங் கார்ப்பரேஷன் கண்காணிப்பில் கட்டப்பட்டுவரும் இந்த மையம்போல், 10 மையங்களை அஸ்ஸாமில் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: