திங்கள், 23 டிசம்பர், 2019

ஓட்டுப்போட்டால் பொங்கல் பரிசு: எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் விதி மீறல் ...

ஓட்டுப்போட்டால் பொங்கல் பரிசு: எம்.ஆர்.விஜயபாஸ்கர்மின்னம்பலம் :.. வாக்களித்த பிறகு பொங்கல் பரிசை வாங்கிக்கொள்ளலாம் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கு ரூ.1,000 பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு கடந்த 20ஆம் தேதி தொடங்க இருந்தது. எனினும், உள்ளாட்சித் தேர்தல் வரும் நேரத்தில் அரசு பணத்திலிருந்து பொங்கல் பரிசை அளித்து வாக்கு சேகரிக்க நினைக்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் நடக்கும் 27 மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு பொங்கல் பரிசு வழங்கப்படவுள்ளது.

இந்த நிலையில் கரூரில் நேற்று (டிசம்பர் 22) நடந்த உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “கடந்த வருடம் பொங்கலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.1,000 கொடுத்தார். அதைக் கொடுக்கக் கூடாது என்று திமுக சொன்னது. இப்போது, இரண்டு நாட்களுக்கு முன்னரே ரூ.1,000 கொடுக்கச் சொல்லி உத்தரவு போட்டுவிட்டோம். அதைக் கொடுக்கக் கூடாது என்று திமுக சொல்கிறது. முன்பு பொங்கல் பரிசை வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டிருக்கலாம். இப்போது, ஓட்டைப் போட்டுவிட்டு பொங்கல் பரிசை வாங்கிக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
மேலும், “மக்களின் வரிப்பணத்தை எடுத்துக் கொடுக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்கிறார். அரசாங்கம் என்று இருந்தால் மக்களின் வரிப்பணத்தை எடுத்துதான் கொடுக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
ஓட்டுப் போட்டுவிட்டு ரூ.1,000 பொங்கல் பரிசை வாங்கிக் கொள்ளலாம் என்று அமைச்சர் சொல்வது ஏதோ, ஓட்டுக்குப் பணம் தருவது போல இருப்பதாக விமர்சிக்கிறார்கள் எதிர்க்கட்சிகள்.

கருத்துகள் இல்லை: