ஞாயிறு, 6 அக்டோபர், 2019

கொள்ளை போகும் ரயில்வே .. மோடி முடிவு

மோடி முடிவு: கொள்ளை போகும் ரயில்வே!மின்னம்பலம்: சுப குணராஜன் : இந்தியாவின் மிகப்பெரும் பொதுத் துறை நிறுவனம் இந்திய ரயில்வேயாகவே இருக்க முடியும். அதன் ‘மதிப்பை’ அந்த நிறுவனத்தின் வரவு செலவு கணக்கில் காட்டப்படும் மூலதனம் (Capital) என்பதைக்கொண்டு தீர்மானிக்க முடியாது. அது, ஆவணக்கணக்கு மட்டுமே (Book Value). அசலான மதிப்பீடு அதைப் போன்று பல நூறு மடங்கு அதிகமாகவே இருக்கும். ஏனெனில் அதன் சொத்து மதிப்பு என்பது நிலம் என்ற வகையில் மட்டும் மிக மிகப் பெரியது. தனியாகக் கணக்கிட்டால் இந்தியாவின் ஒரு சிறிய மாநிலத்தின் நில அளவைவிடக் கூடுதலாக இருக்கும். அந்த நிலத்தின் சந்தை மதிப்பும் அளவிட முடியாதது. உத்தேசமான கணக்கில் பல நூறு லட்சம் கோடிகள் என மதிப்பிடலாம்.
மோடி அரசின் ‘சாதனைகள்’ ஒன்றையொன்று மிஞ்சியபடியே உள்ளது. அந்தச் சாதனைகளின் சிகரமாக இருக்கப்போவது, இந்திய ரயில்வே துறை தனியார்மயமாக்கலாகவே இருக்கும். ஏற்கெனவே தொய்ந்து, துவண்டு கிடக்கும் இந்தியப் பொருளாதாரம், இந்த அரசின் மறுசீராக்கம் என்ற பெயரில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பொருளாதாரத்தைச் சீர்குலையச் செய்வதன் காரணம் என்ன? இந்த சங்பரிவார அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எப்படிப் புரிந்து கொள்வது?

இதை இந்துத்துவப் பொருளாதாரக் கொள்கையென விளக்குகிறார் பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக் அவர்கள். இந்தச் சங்கிப் பொருளாதாரம் முதலீட்டிய விதிகளின்படி செயல்படுத்தப்படவில்லை என்பதே முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் குற்றச்சாட்டு. அப்படியானால் இதனை “பனியா முதலீட்டியம்” எனச் சொல்லலாமெனத் தோன்றுகிறது. ஒரு தேச அரசின் பொருளாதாரக் கொள்கை, அரசை திவாலாக்கி, குறிப்பிட்ட சில பனியா முதலாளிகளை வளப்படுத்துகிறது என்பதை வேறெப்படிப் புரிந்துகொள்வது?
இந்திய ரயில்வே, உலகிலேயே மிகப் பெரிய ரயில்வே நிறுவனங்களில் ஒன்று. ஏகப்பட்ட தடங்களைக்கொண்ட மாபெரும் நிறுவனம். மிகச் சமீப காலம் வரை , அதாவது லல்லு பிரசாத் யாதவ் போன்றவர்களால் லாபகரமாக நடத்தப்பட முடியுமென நிரூபிக்கப்பட்ட ஒரு நிறுவனம். எனவே, அதைக் கபளீகரம் செய்வதை எவ்வளவு சாமர்த்தியமாகச் செய்ய வேண்டுமென்பதை மோடியின் குஜராத் பனியா ஆலோசகர்கள் தெளிவாகத் திட்டமிட்டிருக்கிறார்கள். முதலில் இந்திய ரயில்வேயின் சொத்து மதிப்பு, அதை நேரடியாகத் தனியாருக்கு பங்கு என்ற முறையில் (Disinvestment) விற்க அனுமதிக்காது. இரண்டாவது அதன் மதிப்பின் அடிப்படையில் விற்றால், அவ்வளவு முதலீடு செய்ய உடனடியாக ஒருவரும் முன்வர மாட்டார்கள். மூன்றாவது அந்த அளவு முதலீடு செய்தால் முதலுக்கான லாபம் ஒருபோதும் கிடைக்காது. அப்படியானால் என்ன செய்வது?

மோடியின் பனியா ஆலோசகர்கள் இரண்டு வகையான திட்டங்களை வகுத்தளித்துள்ளனர். முதல் திட்டம், ஏற்கெனவே இருக்கும் ரயில்வே துறை சார்ந்த பொதுத் துறை நிறுவனமான ஐஆர்சிடிசி (Indian Railway Catering and Ticketing Corporation) மூலமாக, ரயில்வேயின் முதல்ரக சொகுசு ரயில்களை (Luxury trains like Tejas, Rajadhani etc) இயக்குவது. அதாவது, அரசின் நேரடிக் கட்டுப்பாடு இல்லாமல் நடத்துவது. அந்த நிறுவனத்துக்கான பங்குகளைச் சந்தையில் வெளியிட்டு முதலீடு பெறுதல். இந்தத் திட்டத்தின் கீழ் புதுடெல்லி – லக்னோ மற்றும் மும்பை – அகமதாபாத் ‘தேஜஸ் ரயில்கள்’ அக்டோபர் 4 முதல் இயங்கத் தொடங்கியுள்ளது. அதேபோல ஐஆர்சிடிசியின் பங்குகள் செப்டம்பர் 30 முதல் மும்பை பங்குச் சந்தையின் புழக்கத்துக்கு வந்து விட்டது. இந்தத் திட்டம் வெற்றிபெற்றால், படிப்படியாக அந்த நிறுவனம் நடத்தும் ரயில்களின் எண்ணிக்கையைக் கூட்டி ஒருநாளில் லாபகரமான அனைத்துத் தடங்களையும் அதன் கீழ் கொண்டுவந்து விடுவது, பின்னர் ஒரு சுபயோக சுபநாளில், இந்திய அரசின் கடன் சுமையை தீர்க்க, ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பங்குகளை நூறு சதவிகிதம் சந்தையில் விற்று விடுவது. சந்தையை நிர்வகிப்பதும் கட்டுப்படுத்துவதும் பனியாக்கள் என்பது ஊரறிந்த சங்கதிதானே.
முதல் திட்டம் கொஞ்சம் நீண்ட காலத் திட்டமென யாரோ ஒரு பனியா மூளை உணர்ந்துவிட்டது. அதனால்தான் இரண்டாவது திட்டம். இது நேரடியாக முதலடிக்கும் வேலை. அதாவது தோலிருக்கச் சுளை விழுங்கும் வேலை. இது எப்படி? இந்தியாவின் பிரதான நகரங்களான புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை , பெங்களூரு, செகந்திரபாத் தொடங்கி கோவை, மதுரை வரையான 14 வழித்தடங்கள் மற்றும் மும்பை, கொல்கத்தா, சென்னை, செகந்திராபாத் நகரங்களின் புறவழி ரயில் தடங்களையும் (Suburban) தனியார் நடத்த அனுமதிப்பது. கவனம். இங்கு சொத்து விற்பனையோ, பங்கு விற்பனையோ இல்லை. முதலீட்டாளர்கள் புதிய ரயில்களை அறிமுகப்படுத்தி நடத்தலாம் அல்லது ஏற்கெனவே இருக்கும் ரயில்களை குத்தகைக்கு அல்லது வாடகைக்கு எடுத்து நடத்துவார்கள். கட்டண நிர்ணயம் அவர்கள் விருப்பம். அதற்காக அவர்கள் செலுத்த வேண்டியது ஒரு தொகை மட்டுமே (Haulage Charges). முதலீடு, வெறும் நடத்தும் செலவு மட்டுமே (Running Cost). இந்த வாடகைப் பணத்தை அரசு நிர்ணயம் செய்யும். பனியாக்களின் அரசு, பனியா முதலாளிகளுக்காக.

இதற்கான கொள்கை முடிவு ஏற்கெனவே எடுக்கப்பட்டு விட்டது. இந்துத்துவ ஆர்எஸ்எஸ் திட்டங்களையும், பனியா முதலீட்டிய திட்டங்களையும் அமலாக்கம் செய்வதில் மோடியும் அமித் ஷாவும் எவ்வளவு தீவிரமானவர்கள் என்பதை இன்னொரு முறை விளக்க வேண்டியதில்லை. இந்தத் திட்டத்தின்படியான மாபெரும் கொள்ளை, ரயில்வே சொத்துகள். லட்சோப லட்சம் கோடிப் பொதுச் சொத்து இலவச முதலீடாகத் தனியார் லாபத்துக்காகப் பயன்படும். ஒரு வாய்ப்பான நேரத்தில் அந்தச் சொத்துகள் அனைத்தையும் நெடுநாள் வாடகைத் தீர்வை (Long Term Rental Lease) போன்ற ஏமாற்றுத் திட்டங்கள் வழியாக முற்றிலுமாகத் தனியார் வசமாகிவிடும். ஒருநாளில் இந்திய ரயில்வே, ‘ரிலையன்ஸ் இந்தியா ரயில்வே’யாகவோ அல்லது ‘அதானி இந்தியா ரயில்வே’யாகவோ ஆவது உறுதி

கருத்துகள் இல்லை: