புதன், 9 அக்டோபர், 2019

தமிழ் மரபு அறக்கட்டளையை முடக்க சதி ?.. பின்னணியில் எந்த சக்திகள்?


Subashini Thf : பேராசிரியர் டாக்டர்.கண்ணன் மற்றும் இந்த சட்ட நடவடிக்கை எடுக்கும் குழுவினருக்கு எனது நன்றி.
-டாக்டர் க. சுபாஷினி
அனைவருக்கும் வணக்கம்
தற்போது இணைய வெளியில் தமிழ் மரபு அறக்கட்டளையை முடக்கும் நோக்கில் பல்வேறு வகையான அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இது மிகவும் கண்டனத்திற்கு உரியதாகும்.
ஓலைச்சுவடிகள் தொடர்பாக என் மீதும், டாக்டர் சுபாஷிணி மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை அறிஞர்கள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது. இந்நிலையில் எமது அமைப்பின் மீது வழக்கு தொடரப் போவதாக சில பேர் இணையதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வழக்குகளை நாங்கள் வரவேற்கின்றோம்.
இத்தனை ஆண்டுகாலம் எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி தமிழ் வளர்ச்சிக்கு மட்டுமே உழைத்து வருகின்ற எங்களுக்கு இந்த போலி நபர்கள் எழுதி இருக்கின்ற அநீதிக்கு நீதி கிடைக்கும் வகையில் இந்த வழக்கை எதிர்கொள்வோம்.
மேலும் இத்தனை ஆண்டு காலம் எங்களது ஆய்வுகள் பரந்துபட்ட வெளியில் கவனிக்கப்பட்டு வந்தாலும், கடந்த சில நாட்களாக பெரும் வெளிச்சத்தை பெற்றிருக்கிறது என்பதற்கு இந்த பரபரப்பான அவதூறுகளை சாட்சி. இந்த அவதூறுகள் தமிழ் மரபு அறக்கட்டளை பணிகளை மக்கள் மத்தியில் கொண்டு போய் தமிழ் மரபு செல்வங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொள்ள பயன்படுத்திக்கொள்வோம்.

இந்நிலையில் தனி பெண்மணியாக (single woman) தமிழுக்காக உழைத்து வருகின்ற டாக்டர் சுபாஷினி அவர்கள் மீது அருவருக்கத்தக்க வகையில் அவதூறு பரப்புகின்றனர். என் மீதும் இதுபோன்ற அவதூறுகள் தொடர்கின்றன. இதனால் தனிப்பட்ட வகையில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். இந்த தாக்குதல்கள் தொடங்கி குறைந்த காலமே ஆகும் என்றாலும் தனிப்பட்ட முறையில் எங்கள் மனதில் இவை நீண்டகாலம் நிலைத்திருக்கும். அவதூறு பரப்பிய குற்றவாளிகள் தார்மீகமாக இதற்கு மன்னிப்பு கேட்க மாட்டார்கள் என்பது எங்களுக்கு தெரியும். எனினும் எங்களது பணியில் தமிழ் மரபு அறக்கட்டளை மற்றும் அறிஞர் குடும்பத்தினர் தொடர்ந்து பயணிப்போம்.
இந்த அவதூறுகளை எதிர்கொள்கின்ற வகையில் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
தமிழ் மரபு அறக்கட்டளை நிர்வாகிகள் டாக்டர் சுபாஷினி. டாக்டர் கண்ணன் நாராயணன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆர்வத்தோடு பணியாற்றுகின்ற அறிஞர்கள் ஆகியோரின் மீதான தனி மனித தாக்குதளை தமிழ் மரபு அறக்கட்டளையின் தோற்றுனர்களில் ஒருவர் மற்றும் அறக்கட்டளையின் துணைத்தலைவர் என்கின்ற முறையில் இந்த பிரச்சினைக்கான நடவடிக்கைகள் அனைத்தும் அமையும்.
வழக்குகளை சந்திப்பதற்கு எனது தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்த குழு அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும்.
தமிழ் மரபு அறக்கட்டளை தொடர்பான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் தலைமையில் 5 பேர் கொண்ட வழக்கறிஞர் குழு அமைக்கப்பட்டுள்ளது. எந்தவிதமான கட்டணமும் இன்றி வழக்காட முன்வந்துள்ள குழுவினருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த பெரும் அவதூறு சதியின் பின்னே இருக்கின்ற அத்தனை நபர்கள் மீதும் தேவையான குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த அவதூறு குற்ற செயல்களுக்கு பின்னணியாக இயங்குகின்ற பெரும் நபர்கள் யார் என்பதை நாங்கள் அமைக்கவுள்ள சர்வதேச அறிஞர்கள் குழு விசாரணை மேற்கொண்டு சர்வதேச தமிழ் அமைப்புகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உலகத் தமிழ் அமைப்புகளின் கவனத்துக்கு கொண்டு சென்று இந்த அவதூறு குற்றங்களுக்கு பின்னே உள்ளவர்களின் மீது உறுதியான நடவடிக்கைகளை எடுக்கப்படும்.
எமது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு மரபு அமைப்பாக கருதப்படுவதால் இந்த அமைப்பின் தலைவர்கள் மீது நிகழ்த்தப்படும் இந்த தனிமனித தாக்குதல்கள் குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடமும் பண்பாட்டு தளத்தில் இயங்குகின்ற மனித உரிமை அமைப்புகளிடமும் முறையீடு செய்து சர்வதேச கவனத்தை கோருவோம்.
டாக்டர் சுபாஷினி அவர்கள் தமிழக அரசின் உயரிய விருதான மொழி இயல் விருதை பெற்றவர். அந்த வகையில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்வோம்.
அவதூறு சதிகளை செய்தவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் முறையாகத் தொகுக்கப்பட்டுவிட்டன. இதற்காகவே இத்தனை நாள் காத்திருந்தோம். எனவே, சட்ட நடவடிக்கைகள் தொடங்கி விட்ட காரணத்தினால் இந்த அவதூறு குற்றச் செயலுக்கு பின்னே உள்ளவர்கள் யாரும் தப்ப முடியாது என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ் பகைவர்களை எதிர்க்க துப்பில்லாமல், தமிழ் அறிஞர்களை குறி வைக்கும் இந்தக் கூட்டத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
சட்ட நடவடிக்கைகள் தொடங்கி விட்டதை இதன் மூலம் அறிவிக்கின்றோம்.
இவன்
முனைவர் நா.கண்ணன்
நிறுவனர் மற்றும் துணைத் தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை
மற்றும் நடவடிக்கை ஒருங்கிணைப்பு குழுவினர்
அக்டோபர் 9
நேரம்: 15:25

கருத்துகள் இல்லை: