செவ்வாய், 8 அக்டோபர், 2019

தேவர்களை புறம் தள்ளுவோம். அசுரர்களை கொண்டாடுவோம்.. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி தீபாவளி .

சுமதி விஜயகுமார் : சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி சிறப்பாக
கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அதாவது இராவணன் (அசுரன் ) வதம் செய்யப்பட்டதற்காக. இன்னும் சில நாட்களில் தீபாவளி கொண்டாட போகிறோம். அதாவது நரகா அசுரன் கொல்லப்பட்ட தினம். ஒருவரின் இறப்பை, அவர் யாராயினும், வருடா வருடம் குத்துகாதலத்துடன் கொண்டாடுவது எப்படி நாகரிகம் ஆகும். கதை, புராணங்களில் வரும் அசுரர்கள் எதற்காக கொல்ல படுகிறார்கள் என்று புரியவேண்டுமானால் 'அசுரன்' திரைப்படம் பார்த்தே ஆக வேண்டும்.
வாலிபத்தில், வயது முதிர்வில் என்று மொத்தமாக கூட்டினால் ஏறக்குறைய 6 அல்லது 7 கொலைகள் செய்த ஒரு மனிதன். அவனுக்கு எவ்வளவு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். ஆனாலும் சிவசாமி (தனுஷ்) தண்டிக்கப்பட கூடாது என்று நாம் பதறுவதற்கான காரணம், அவனின் முழு கதையும் தெரிந்தால் தான் புரியும். படம் பார்த்து அதன் அறத்தை புரிந்து கொள்ளுவோம். படம் பார்க்கும் பொழுது அதன் கூடவே கேள்விகளை கேட்டு கொண்டே பயணித்தால் பல விடைகள் கிடைக்கும்.
சிவசமியின் காதலி செருப்பு அணிந்து ஊருக்குள் சென்றதால் அவமான படுத்த படுவாள். 'என்னங்க செருப்பு போட்ட எல்லாம் யாராச்சும் அவமான படுத்துவங்களா? ' என்று தோன்றினால் 1960 கால கட்டங்களில் வாழ்ந்த நம் தாத்தா, பாட்டியை கேட்டு பார்க்கலாம். ஒரு 25, 30 வருடங்கள் கழித்து, அதாவது 1990களில் ஊருக்கு நடுவில் சிவசாமி தன் மகனுக்கு கடையில் செருப்பு வாங்கி தருவார். அப்போது அது பெரிய செய்தியாக இருக்காது.
அந்த 30 வருடங்களில் அப்படி என்ன மாற்றம் வந்துவிட்டது என்று கேளுங்கள்.
சிறிய வயதில் தான் செய்த கொலைகளுக்காக நீதி மன்றத்தில் சிவசாமி நிற்பார். அவருக்கு குறைந்தபட்ச தண்டனை வாங்கி கொடுக்க பிரகாஷ் ராஜ் வாதிடுவார். எப்போதும் நீதிபதியின் பின் பக்கம் வைக்கப்படும் அம்பேத்கரின் புகைப்படம், இந்த காட்சியில், ஏன் பிரகாஷ் ராஜின் பக்கம் வைக்க பட்டிருக்கிறது என்று கேளுங்கள்.
வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோர் காலிலும் விழும் சிவசாமியை ஊரே பாவமாக பார்க்க, கறுப்பு சட்டை அணிந்த ஒருவர் மட்டும் ஏன் தடுக்க வேண்டும் என்று கேளுங்கள்.
நாடே விடுதலைக்காக போராடும் போது பெரியாரும், அம்பேத்கரும் மட்டும் ஏன் வெள்ளையர்களை எதிர்க்கவில்லை என்று கேளுங்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சம உரிமை வழங்க ஒரு முயற்சியாக ஆங்கிலேயர்கள் அவர்களுக்கு நிலங்களை பிரித்து வழங்கியது ஏன் என்று கேளுங்கள். நிலங்கள் மட்டுமில்லை, கல்வியும் ஆங்கிலேயர் காலத்தில் தான் அனைவருக்குமானது.
'பிரச்சனைனா மட்டும் போராட்டம் பண்ணினா பத்தாது, போராட்டமான தொடர்ந்து இருக்கனும்' என்று பிரகாஷ்ராஜ் சொல்லுவார். எவ்வவளவு ஏழ்மையில் இருந்தாலும் எவ்வளவு சிரமங்களை சந்தித்தாலும் தோழர்கள் மட்டும் எப்படி போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள் என்பதை சிவசாமியின் அண்ணன் சொல்லி தருகிறார்.
இந்த சிவசாமி மனிதனாகவே இருந்தார். எது வரைக்கும் என்றால் தேவர்கள் சிவசாமி எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தார்களோ அது வரை சிவசாமி மனிதன் தான். தான் சொன்னவரை வேலைக்கு வைக்கும் முதலாளியும், கடைத்தெருவில் தனக்கு சரிசமமாய் அமர்ந்து உண்ணும் படி சண்முகத்தை (சிவசாமியின் மகன் ) கேட்கும் பண்ணையாரும் நல்லவர்கள். எதுவரைக்கும் என்றால் சிவசாமியும், சண்முகமும் தங்களுக்கான உரிமைகளை தாங்களே நிர்ணயிக்ககாத வரையில். அவர்களுக்கான உரிமையை கேட்கும் பொழுதுதான் அசுரர்கள் ஆகிறார்கள். வதம் செய்யப்படுகிறார்கள். சிவசாமி தான் இராவணன், நரகாசுரன்.
தேவர்களை புறம் தள்ளுவோம். அசுரர்களை கொண்டாடுவோம்

கருத்துகள் இல்லை: