சனி, 12 அக்டோபர், 2019

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீன வணிகர்கள் தமிழகம் .. ஆதாரங்கள் உள்ளன!


Kathiravan Mayavan : யுவான்_சுவாங் ! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீன வணிகர்கள் தமிழகம் வந்து சென்றதை தொல் பொருள் சான்றுகள் உறுதி
செய்கின்றன. யுவான்சுவாங் இங்கு வருகை தந்ததுதான் முக்கியத்துவமாகக் கருதப்படுகிறது.
சீனாவில் கிபி 602 இல் பிறந்த யுவான் சுவாங் இளம்வயதிலேயே புத்த துறவியானார். புத்தர் பிறந்த பூமியை தரிசிப்பதற்கும் புத்த மதம் தொடர்பான பல்வேறு தகவல்களை சேகரிப்பதற்கும் இந்தியா வந்தார்.
தன் 27 வயதில் அவர் பயணத்தை தொடங்கிய போதிலும் பல்வேறு மலைகளையும், அடர்ந்த காடுகளையும், கொதிக்கும் பாலைவனங்களையும் ஆழமான ஆறுகளையும் தாண்டி பல ஆயிரம் மைல் கடந்து இந்தியா வந்து இந்தியா வருவதற்கு நான்கு வருடங்கள் ஆனது.
சுமார் பதினைந்து வருடங்கள் இந்தியாவில் அவர் இருந்தபோது வட இந்தியாவில் பேரரசர் ஹர்சரும் தமிழகத்தில் மாமன்னன் முதலாம் நரசிம்மவர்மரும் ஆட்சிபுரிந்தனர். இருவருடைய அவையிலும் அவர் தங்கியிருந்துள்ளார்.காஞ்சிபுரம் பல்கலைக்கழகத்தில் அவர் இருந்தபோது ஏராளமான நூல்களைக் கற்றார். இளம் மாணவர்களுக்கு பயிற்றுவித்தார்.தான் கண்டதை தன்னுடைய 'சியூக்கி' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

நரசிம்மவர்மனின் அன்பிற்கு பாத்திரமான அரசு விருந்தினராக நீண்ட நாட்கள் இருந்துள்ள யுவான் சுவாங், மாமன்னர்கள் மகேந்திரவர்மன் நரசிம்மவர்மன் படைப்புகள் அடங்கிய கலைநகரான மாமல்லபுரத்திற்கு பலமுறை போய் வந்திருக்க வேண்டும்.
தாயகம் திரும்பியபோது விலைமதிக்க முடியாத தன் ஆய்வு செல்வங்களை 22 குதிரைகளில்அள்ளிச்சென்றார்.அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்த சீனர்கள், 'அமைச்சர்'ஆகும் வாய்ப்பையும் வழங்கினர். அதை மறுத்து விட்டார். பன்முக ஆளுமையால் தனித்துவம் பெறுகிறார் யுவான் சுவாங்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாமன்னர்களில் நம்முடைய சோழ மன்னன் கரிகாலன் தனித்துவம் பெற்றவன். அவன் கட்டிய கல்லணை நவீன காலபொறியாளர்களால் இன்றைக்கும் வியந்து பார்க்கப்படுகிறது. களப்பிரர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கரிகாலனின் வழித்தோன்றல்கள் சோழ நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்று ஆந்திர பகுதிகளில் வசித்தனர். "காவிரியில் கல்லணை கட்டிய கரிகாலனின் வழித்தோன்றல்கள் நாங்கள்" என்று கல்வெட்டுகளிலும். செப்பேடுகளிலும் பதிவிட்டுக் கொண்டனர். அவை தெற்கு ஆந்திரப் பகுதிகளான கடப்பா,கர்நூல் பகுதிகளில் காணப்படுகின்றன. "ரேனாண்டு சோழர்கள்" என்று அழைக்கப்படும் அவர்கள் பற்றிய குறிப்பு யுவான் சுவாங் எழுதிய சியூக்கி நூலில் உள்ளது. பல்லவ நாட்டின் வட எல்லையில் ஆட்சி செய்த அவர்களை "சோழிய" என்று யுவான்சுவாங் குறிப்பிடுகிறார்.யுவான்சுவாங் மற்றும்
அவருடைய படைப்புகள் சீனர்களுக்கு மட்டுமின்றி நமக்கும் வரலாறுதான் ......
விருந்தோம்பலின் கீர்த்தி பெற்ற தமிழ் மண்ணில் மாமல்லபுரம் பெயர் இன்று உலகம் முழுவதும் ஒலிக்கிறது.இவர் கால் தடம் பதித்த மாமல்லபுரத்திற்கு கடந்த 1956 ம் ஆண்டு அப்போதைய சீன பிரதமர் சூ என் லாய் வந்தார். உடன் அமைச்சர் பக்தவத்சலம் இருந்தார். அப்போது தமிழக முதல்வராக காமராஜர் இருந்தார். சூ என் லாயைத் தொடர்ந்து யுவான் சுவாங் அடிநாடி ஜின்பிங் வந்தார். பல்லவ மன்னர்களின் மாமல்லபுரம் சங்ககாலத்திலேயே துறைமுக நகரமாக விளங்கியதற்கு பல சான்றுகள் உள்ளன.

கருத்துகள் இல்லை: