வியாழன், 10 அக்டோபர், 2019

ராம்லீலாவில் பங்கேற்று பிரதமர் இராவணன் உருவத்திற்குத் தீ மூட்டலாமா?,, ஆசிரியர் வீரமணி


Asiriyar K Veeramani : ராம்லீலாவில் பங்கேற்று பிரதமர் இராவணன் உருவத்திற்குத் தீ மூட்டலாமா?
ரஃபேல் விமானத்தைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ‘ஓம்‘ என்று விமானத்தின்மீது எழுதலாமா?
மதச்சார்பற்ற தன்மைக்கு விரோதமான நடவடிக்கைகளை இடதுசாரிகளும், மதச்சார்பற்ற சக்திகளும் கண்டிக்கவேண்டும்
நேற்றைய தினம் (8.10.2019) இரு நிகழ்ச்சிகள், ஒன்று டில்லியில் விஜயதசமி கொண்டாட்டம் என்ற பெயரில் பிரதமர், துணைக் குடியரசுத் தலைவர் முன்னிலையில் ‘ராம் லீலா’ என்று கூறி திராவிட வீரனான இராவணன் உருவம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளது.
மோடி அம்பு எய்தி கொளுத்தும் காட்சி

பிரதமர் நரேந்திர மோடியே அம்பு எய்தி இராவணனைக் கொல்லும் காட்சி தொலைக்காட்சிகளில் முக்கியமாக ஒளிபரப்பப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கலந்துகொண்டு இருக்கிறார்.
இது தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு, தந்தை பெரியாரின் முதலாம் ஆண்டு நினைவு நாளான வரலாற்றுக் குறிப்பு நாளையொட்டி சென்னை பெரியார் திடலில் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களால் நடத்தப்பட்ட ‘‘இராவண லீலா’’வில் இராமன், சீதை, இலட்சுமணன் உருவங்கள் கொளுத்தப்பட்டன (25.12.1974).
பிரதமருக்குக்_கடிதம்

‘இராவண லீலா’ நிகழ்ச்சியை நடத்துவதற்குமுன் பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு முறைப்படி கழகப் பொதுச்செயலாளர் என்ற முறையில், விரிவான கடிதம் ஒன்றை எழுதினோம்.
இந்திரா காந்தியின் தந்தையாரான ஜவகர்லால் நேரு அவர்கள் சிறையில் இருந்தபோது, மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதத்தில் இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டம் என்று குறிப்பிட்டு இருந்தது - அந்தக் கடிதத்தில் மேற்கோளாகவும் காட்டப்பட்டு இருந்தது.
#கழகத்_தலைவர்_அன்னையாரின்_தந்தி!
கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களும் ‘ராம் லீலா’ விழாவில் பிரதமர் பங்கேற்கக்கூடாது என்று தந்தியும் கொடுத்தார்.
பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் அளித்த பதில் பொருத்தமற்றதாகவும், ஏற்க இயலாததாகவும் இருந்ததினால், திராவிடர் கழகம் திட்டமிட்டிருந்தபடி ‘இராவண லீலா’ நிகழ்ச்சி வெகு சிறப்பாக எழுச்சியுடன் நடத்தப்பட்டது.
#வழக்கில்_வெற்றி!
இதன்மீதான வழக்கில் சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் கழகத்திற்கு வெற்றி கிடைத்தது என்பதையும் இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம். போகிற போக்கைப் பார்த்தால் மீண்டும் இராவண லீலா நடத்தப்படவேண்டும் என்ற உணர்வுதான் தமிழ்நாட்டில் தலைதூக்கும்.
இவ்வளவும் நடந்ததற்குப் பிறகு டில்லியில் பிரதமர் உள்ளிட்ட பதவிகளில் உள்ளவர்கள் ‘ராம் லீலா’ என்று கூறி, திராவிட மாவீரன் இராவணனைக் கொளுத்தும் கேவலம் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.
#பிரதமர்_போன்றவர்கள்_மதத்_தொடர்பான_நிகழ்ச்சியில்_பங்கேற்கலாமா?
மதச்சார்பற்ற நாட்டின் பிரதமராக இருக்கக் கூடியவரும், துணைக் குடியரசுத் தலைவரும், இந்து மத அவதாரமான இராமன் பெயரில் ‘ராம் லீலா’ என்று கூறி, இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவது சரியானதுதானா? மதச்சார்பின்மைக்கு விரோதம் இல்லையா? என்பதை நாட்டு மக்கள் சிந்திக்கவேண்டும்.
#வடநாட்டில்_இராவணனை_குலதெய்வமாக_வழிபடுவது_உண்டே!
வைதீக முறைப்படி பார்த்தாலும் இராவணனைக் குலதெய்வமாகக் கொண்டாடுபவர்கள் வடமாநிலங்களில் இருக்கிறார்களே!
2009 ஆம் ஆண்டில் இராவணனின் உருவத்தை எரிக்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர் போராட்டம் நடத்தியதுண்டு.
இராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிவன் கோவிலின் ஒரு பகுதியில், இராவணனுக்கு பூஜை புனஷ்காரங்கள் நடைபெறுகின்றனவே!
#புண்படுவது_என்பது_ஒரு_வழிப்பாதையா?
அந்த வகையில் பார்த்தாலும் இராவணனைக் கொளுத்துவது - இராவணனைக் குலதெய்வமாக வழிபடுபவர்களின் மனதைப் புண்படுத்தாதா? புண்படுவது என்பது என்ன ஒருவழிப் பாதையா?
#ரஃபேல்_விமானமும்_மதச்சடங்கும்!
இரண்டாவதாக, ரஃபேல் போர் விமானத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பிரான்சு சென்ற இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் - அதனைப் பெறுமுன் அய்ந்து பார்ப்பனப் புரோகிதர்களை வைத்து (இந்தியாவிலிருந்து செல்லும்போதே புரோகிதர்களை அரசு செலவில் அழைத்துச் சென்றார் பாதுகாப்புத் துறை அமைச்சர்) இந்து மதச் சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன.
‘ஓம்‘ என்று எழுதிய பாதுகாப்புத் துறை அமைச்சர்
விமானத்தின் நான்கு சக்கரங்களின் அடியில் எலுமிச்சம் பழங்களை வைத்து, தேங்காயம், பூ போன்ற பூசைப் பொருள்கள் வைக்கப்பட்டதோடு மட்டுமின்றி, விமானத்தின்மீது ‘ஓம்‘ என்னும் இந்து மதத்தின் கோஷத்தை, பாதுகாப்பு அமைச்சர் எழுதுவதும் சரிதானா?
அசல் கேலிக்கூத்தல்லவா....!
(‘ஓம்‘ என்பதற்கான விளக்கத்தை எழுதினால், அது ஆபாசக் குட்டையாகிவிடும்).
மதங்களிலிருந்து விலகி இருக்கவேண்டிய - அரசமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டிய மத்திய அமைச்சர், இந்து மத சுலோகத்தைக் கைப்பட எழுதுவதெல்லாம், கேலிக் கூத்து என்பதைவிட விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதம் அல்லவா?
இந்திய அரசமைப்புச் சட்டம் 51 ஏ(எச்)இல் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலியுறுத்தப்பட்டுள்ளதே, அதனை ஒரு மத்திய அமைச்சர் மீறுவது சட்டப்படி சரியானதுதானா?
ராம ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம், இந்து ராஜ்ஜியத்தை அமைக்கப் போகிறோம் என்று கூறும் பி.ஜே.பி. - அதன் தாய்ச் சபையான சங் பரிவார் கொள்கையினை, சட்டத்தை வளைத்து செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
#இடதுசாரிகளும்_மதச்சார்பற்ற_சக்திகளும்_கண்டிக்கவேண்டும்
திராவிடர் கழகம் வழமையாக இப்படித்தான் விமர்சிக்கும் என்று பொத்தாம் பொதுவில் கண்ணோட்டம் செலுத்தாமல், பொது நிலையில் நின்று சட்டத்தின் ஆட்சியை மனதிற்கொண்டு இதனைக் கண்டிக்கவேண்டாமா?
இடதுசாரிகள் உள்பட, மதச்சார்பின்மையில் நம்பிக்கைக் கொண்ட ஒவ்வொருவரும் இதனைக் கண்டிக்க முன்வரவேண்டும்.
ஆட்சி அதிகாரம் இருக்கும் காரணத்தால், சட்டத்தை வளைக்கும் அதிகாரம் இருப்பதாக நினைக்கக் கூடாது - கூடவே கூடாது!
இது மக்கள் மத்தியிலும், சட்ட மீறல் உணர்வினைத் தூண்டும் - அதற்குக் காரணமாக அரசே இருப்பது ஆபத்தாகும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

கருத்துகள் இல்லை: