சனி, 31 ஆகஸ்ட், 2019

ஜிடிபி சரிவுக்கு சர்வதேச காரணிகள் காரணமல்ல.. மத்திய அரசின் தவறான கொள்கைதான் காரணம்

மாலைமலர் : இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்துள்ளது என புள்ளியியல் துறை அறிக்கை வெளியிட்டதையடுத்து, காங்கிரஸ் கட்சி
மத்திய அரசை தாக்கி பேசியுள்ளது.
புது டெல்லி: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எடுக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி குறித்த கணக்கெடுப்பு முடிவில், 5.8 சதவீதம் என்ற அளவில் இருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளதாக வெளியானது. கடந்த ஏழு வருடங்களில் முதல் முறையாக இந்த அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருந்தது. இந்த பொருளாதார சரிவு குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மத்திய அரசின் தவறான நிதிமேலாண்மையால், பொருளாதார அவசரநிலை உருவாகி, ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது.


இந்த பேரழிவையும், வேதனையையும்தான் புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. நாம் நினைத்த அளவை காட்டிலும் இந்த பிரச்சனை பெரிதாக இருக்கிறது.  உற்பத்தித்துறை மூடப்பட்டு வருகிறது, ஏற்றுமதி ஊக்கமாக இல்லை, இறக்குமதி அதிகரித்து வருகிறது.


அனைத்து துறைகளிலும் லட்சக்கணக்கில் மக்கள் வேலையிழக்கிறார்கள். கிட்டப்பார்வை உள்ள பாஜக அரசு பொருளாதார கட்டமைப்பில் உள்ள பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கு பதிலாக மேம்போக்காக இருக்கிறது. இப்படியே இருப்பது நோயாளி இறந்துவிடுவார் எனத் தெரிந்தும் சிகிச்சை அளிக்காமல் இருப்பதற்கு சமமாகும்.

காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டரில்,  ‘பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவுக்கு சர்வதேச காரணிகள் காரணமல்ல. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள்தான் காரணம். பொருளாதார நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

மத்திய அரசு தங்களுக்கு தேவையான நேரத்தில் நிதி மந்திரியின் மூலம் பரபரப்பான செய்திகளை வெளியிடுகிறது. இதனால் பொருளாதாரத்தின் உண்மை நிலையை மறைக்க முடியாது’ என பதிவிட்டுள்ளது

கருத்துகள் இல்லை: