திங்கள், 26 ஆகஸ்ட், 2019

நிதி நெருக்கடியில் லைகா.. காலைவாரிய ரஜினி ஷங்கர் கூட்டணியின் 2.0 ...

நிதி நெருக்கடியில் லைகா!மின்னம்பலம் :  லைகா நிறுவனத்தின் சார்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில்
சூர்யா  நாயகனாக நடித்துள்ள படம் காப்பான். செப்டம்பர் மாதம் இந்தப் படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
காப்பான் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய தமிழ் சினிமாவின் பிரபலங்கள் அனைவரும், லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் தமிழ் சினிமாவை நேசித்து படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார் என்று குறிப்பிட்டார்கள்.
ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் நீண்டகால
தயாரிப்பில் இருந்த 2.0 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் பட்ஜெட்டை அடிப்படையாகக்கொண்டு வியாபாரத்தில் இறங்கியது லைகா நிறுவனம்.
தமிழகத்தில் உள்ள ஒன்பது விநியோகப் பகுதிகளுக்கும் லைகா நிறுவனம் கூறிய விலையைக் கேட்டு படம் வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டினார்கள். இந்தச் சூழலில் தமிழ்நாட்டின் அனைத்து ஏரியாக்களுக்கும் விநியோக முறையில் மிகப் பெரும் தொகையை பெற்றுக்கொண்டு படத்தை ரிலீஸ் செய்தது லைகா.

தமிழகத்தில் 2.0 படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் விநியோகஸ்தர்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையில் 2.0 படம் திரையிட்டு, கிடைத்த வருவாய் நீங்கலாக, விநியோகஸ்தர்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாயை திரும்பக் கொடுக்க வேண்டும் லைகா.
2.0 படத்துக்கு இணைய தளங்களில் வெளியிட்ட விளம்பரக் கட்டணத்தை அவர்களுக்குக் கொடுக்க முடியாத அளவுக்கு லைகா நிறுவனம் நிதி நெருக்கடியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் லைகா பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டியிருந்தாலும் தமிழ் சினிமா தயாரிப்பு, விநியோகத் துறைகளில் செய்யப்பட்ட முதலீடுகளில் மூலம் லாபம் கிடைக்கவில்லை என்கின்றனர் இந்த நிறுவனத்துடன் வியாபார தொடர்பில் உள்ளவர்கள்.
இந்த நிலையில் காப்பான் படத்தின் ஏரியா உரிமைகளை அவுட்ரேட் அல்லது விநியோக முறையில் வாங்க வேண்டாம் என தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தனது உறுப்பினர்களுக்குக் கூறியுள்ளது.
2.0 படம் வெளியீட்டின்போது விநியோகஸ்தர்களிடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையை முழுமையாகத் திருப்பிக் கொடுக்காத வரை, காப்பான் படத்துக்கு விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு விதித்துள்ள தடை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: