சனி, 31 ஆகஸ்ட், 2019

இங்கிலாந்து: மின்சார நிறுவனத்தை பார்வையிட்ட முதல்வர்!

மின்னம்பலம் : லண்டன் இங்கிலாந்து: மின்சார நிறுவனத்தை பார்வையிட்ட முதல்வர்!அருகிலுள்ள யு.கே.பவர் நெட்வர்க்ஸ் நிறுவனத்தை முதல்வர் எடப்பாடி
பழனிசாமி பார்வையிட்டார்.
இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதோடு, பல்வேறு நிறுவனங்களுக்கும் சென்று பார்வையிட்டு வருகிறார். இங்கிலாந்து நாடாளுமன்ற கூட்டரங்கில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நகர உட்கட்டமைப்பு, வீட்டுவசதி, பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்வது தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த நிலையில் லண்டனில் இருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள சபோல்க் நகரில் இருக்கும் யு.கே.பவர் நெட்ஒர்க்ஸ் நிறுவனத்தை பார்வையிட்டார். மின்சார உட்கட்டமைப்பு, மின் வினியோகம், மின்சார கேபிள்கள் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து அங்கு கேட்டறிந்தார். அப்போது யுகே பவர் நெட்ஒர்க்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கிய அதிகாரி, பிரிட்டனில் 2050ஆம் ஆண்டுக்குள் நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிக்கும் முறையை அறவே ஒழிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகத் தெரிவித்தார்.
லண்டன் கிழக்கு, இங்கிலாந்து தெற்கு, வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக முதல்வரின் ட்விட்டர் பக்கத்தில், “மின்உற்பத்தி நிறுவனத்தில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரியசக்தி மின்உற்பத்தியை எளிமையான முறையில் கட்டமைப்பது குறித்த வழிமுறைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு கேட்டறிந்தார்” என்று தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: