வியாழன், 29 ஆகஸ்ட், 2019

இளவேனில் வாலறிவான் .. துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற நல்ல தமிழ் பெயர் ..வீராங்கனை!

குறள் 2: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்?. ஒன்றுமில்லை.
இளவேனில் வாலறிவான்  என்ற . நல்ல தமிழ் பெயரை சூட்டிய பெற்றோருக்கு வாழ்த்துக்கள்
நம்மவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது கூடுமானவரை
எந்த வித அர்த்தமும் இல்லாத பெயர்களாக பார்த்து வைத்துவிடுகிறார்கள் , அதிலும் அந்த பெயர்கள் எந்த விதத்திலும் நமது மொழி கலாசாரம் மதம் போன்றவற்றை காட்டி கொடுத்துவிடக்கூடாது என்பதில் மிக ஜாக்கிரதையாக இருக்கிறார்கள் ,
உதாரணத்திற்கு ஏராளமான பெயர்களை கூற முடியும் , நிகொசன் டிகொசன் லிகொசன் போன்று ஏதாவது கன்னா பின்னா என்று வைத்துவிடுகிறார்கள் ,
இந்த பெயர்களை கொண்டு யாரும் இக்குழந்தைகள் எந்த நாட்டை அல்லது எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்று கண்டு பிடித்து விட முடியாது ,
சிலர் அதிஷ்ட விஞ்ஞானம் என்ற நியு மொராலாஜி யின் தாக்கம் என்றும் கூறுவார் இது ஓரளவு உண்மைதான் என்றாலும் மிகச்சரியான காரணம் வேறு ஒன்று இருக்கிறது
இது ஒருவகை உளவியல் பிரச்சனை .
தங்களை பற்றிய அளவு கடந்த தாழ்வு மனப்பான்மை தங்கள் அடையாளங்கள் தங்கள் குழந்தைகளை பாதித்து விட கூடாது என்ற Insecure உணர்வு தான் காரணமோ என்ற சந்தேகம் வருவதை தவிர்க்க முடியாது ,
தங்களை விட தங்கள் சமயம் பெரிது அல்லது கலாசாரம் பெரிது.
இது போன்ற ஏதோ ஒரு அடையாளம் தங்களைவிட பெரிது என்று நம்ப வைக்கப்பட்ட சமூகத்திடம் இந்த குணம் இருப்பது இயற்கையே , ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சுயசிந்தனையை புறந்தள்ளி நம்பிக்கையே நல்லது என்ற கோட்பாட்டினால் வழிநடத்தப்பட்டு .
சுயம் என்பதை அடியோடு இழந்து விட்ட ஒரு சமுதாயம் தான் தனது அடையாளத்தையே மிகவும் கேவலமாக நினைக்க முடியும்

மனிதர்களுக்கு நம்பிக்கை என்பது நல்லது தான் ஆனால் அதே நம்பிக்கை என்பது குருட்டு நம்பிக்கையாகி விடக்கூடாது .
நம்மவர் அநேகருக்கு இந்த குருட்டு நம்பிக்கையை நமது மதங்கள் தாராளமாக அள்ளி விதித்துள்ளன .
இதன் பெறுபேறாக மக்கள் ஒருவிதமான comfort zone எனப்படும் போலி தாலாட்டு தொட்டில் அல்லது போலியான தற்காலிக நிழலில் தஞ்சம் அடைதல் போன்ற மன நோய்களுக்கு நிரந்தர அடிமைகளாகி விட்டனர் என்றே கருத வேண்டி உள்ளது,
இந்த விதமாக ஏதாவது ஒன்றை சதா தூக்கிபிடித்து அதை நம்பி தமது சகல பிரச்சனைகளையும் அந்த போலி நம்பிக்கையே தீர்த்து வைக்கும் என்று நம்பும் மனநிலைக்கு ஆளாகிவிட்டனரோ என தோன்றுகிறது .
இந்த மனோநிலை சுய நம்பிக்கையை சுய மரியாதையை அடியோடு இழக்க செய்து விட்டது , நான் ஒரு பெறுமதியானவன் இல்லை என்ற முடிவுக்கு தம்மை அறியாமலேயே வந்து விட்டனர்
அதன் மிக தெளிவான வெளிப்பாடுதான் தங்கள் சுய அடையாளங்களை மறைத்து வாழ தலைப்பட்டமை ஆகும்
தன்னை விட தனது குருட்டு நம்பிக்கையின் மேல் தங்கி இருந்து தனது பெறுமதியை தானே குறைத்து தாழ்வு மனப்பான்மை ஆகும்.

கருத்துகள் இல்லை: