புதன், 28 ஆகஸ்ட், 2019

தொல்.திருமாவளவன் : லண்டனில் நடந்தது இதுதான்:

லண்டனில் நடந்தது இதுதான்: திருமாவளவன்மின்னம்பலம் : லண்டன் நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
லண்டனில் உலக தமிழ் அமைப்புகளின் சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், விசிக தலைவர் திருமாவளவன் எழுதிய அமைப்பாய் திரள்வோம் புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டது. கூட்டத்தில் 2009 தேர்தலில் திமுக-காங்கிரஸுடன் கூட்டணி வைத்தது தொடர்பாக திருமாவளவன் பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கிருந்த சிலர் அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மேலும் நிகழ்ச்சியின் வரவேற்புக்காக அச்சிடப்பட்டிருந்த துண்டுக் காகிதங்களையும் கிழித்து வீசினர். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது.
ஆனால், திருமாவளவன் விசிக சார்பாக நிதி கேட்டதாகவும் அதனால் ஆத்திரமடைந்த ஈழத் தமிழர்கள், அவருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய, பணத்தை எடுத்து திருமாவளவன் மீது வீசியதாகவும் குறிப்பிட்டு சிலர் அந்த வீடியோவை பகிர்ந்தனர். இந்த நிலையில் இந்தத் தகவலை முற்றிலும் மறுத்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 28) செய்தியாளர்களை சந்திக்கையில் இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “அந்த நிகழ்வில் எதுவுமே நடக்கவில்லை. திமுகவுடன் விசிக கூட்டணி வைத்தது என்று எங்கோ கடைசியில் உட்கார்ந்திருந்த தம்பி ஒருவர் பேசினார். அவரை வெளியேற்றிவிட்டனர், அவ்வளவுதான்” என்று விளக்கம் அளித்தார்.
மேலும், “எனது அமைப்பாய் திரள்வோம் என்னும் புத்தகம் அந்த அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டது. 10க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஈழத்தமிழர்கள், இலக்கியவாதிகள் அதில் கலந்துகொண்டு திறனாய்வு உரை நிகழ்த்தினர். ஏறத்தாழ 3 மணி நேரம் வரை அந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சாதியவாத, மதவாத சக்திகள் நான் லண்டனுக்கு மதமாற்றம் செய்யவும், பணம் திரட்டச் சென்றதாகவும் அதனால் அங்கு கூச்சல் எழுந்ததாகவும் அபாண்டமான அவதூறுகளை பரப்புகின்றனர். இது அப்பட்டமான பொய்" என்றும் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்
லண்டனில் தொல். திருமாவளவன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததற்காக எதிர்ப்பு தெரிவித்து சிலர் கண்டன குரல் எழுப்பியதாக கூறப்படும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையாகி வருகின்றது.
லண்டனில் உலக தமிழர்களின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று(ஆகஸ்ட் 27) பங்கேற்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன். அந்நிகழ்ச்சியில், அவர் எழுதிய அமைப்பாய் திரள்வோம் என்ற நூலை வெளியிட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஜோசப் மெக்கேலா என்பவர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் நூறு தமிழர்களுக்கு மேல் பங்கேற்றுள்ளனர்.
அக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், “ 2009 நாடாளுமன்ற தேர்தலின் போது விடுதலைப் புலிகளின் நிர்வாகி சேரலாதன் தம்மை தொலைபேசியில் அழைத்து காங்கிரசை எதிர்த்து ஏன் அரசியல் நடத்துகிறீர்கள் என்றும் நீங்கள் பேசபேச தமிழர்களின் மீதுதான் அதிக அளவில் குண்டு விழுகிறது என கூறியதாக தெரிவித்தார். அதன் பின்னர் அதே தொலைபேசியை வாங்கிய புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் பேசினார். தலைவர் பிரபாகரன் என்னிடம் சொல்லச் சொன்னதாக ஒரு செய்தியை நடேசன் என்னிடம் தெரிவித்தார். ‘நீங்கள் காங்கிரஸை எதிர்க்க வேண்டாம். உடனடியாக காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தியுங்கள்’எனத் தலைவர் கூறியதாகவும், இதையடுத்தே தாம் அறிவாலயம் சென்று காங்கிரஸ் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்ததாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.
திருமாவளவனின் இந்த பேச்சைக் கேட்டதும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது அவர் அருகில் இருந்த இருவர் உடனடியாக எழுந்து திருமாவளவனுக்கு எதிராக கோஷங்களையும், அவதூறான வார்த்தைகளையும் பிரயோகப்படுத்தினர். மேலும், நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட வரவேற்பு துண்டு காகிதங்களையும் தூக்கி வீசினர்.
ஆனால், இக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நிதி கேட்டதாகவும் அதனால் ஆத்திரமடைந்த ஈழத் தமிழர்கள், தமிழர்களைக் கொன்ற காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து விட்டு, ஈழத் தமிழர்களிடமே நிதி கேட்கிறாயா என கோஷங்கள் எழுப்பியதாகவும், பணத்தை எடுத்து திருமாவளவன் மீது வீசியதாகவும் குறிப்பிட்டு இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: