வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

தங்கத்தமிழ் செல்வன் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரானார்

திமுக கொள்கை பரப்புச் செயலாளரானார் தங்கம் மின்னம்பலம் : திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்களில் ஒருவராக அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்க.தமிழ்ச்செல்வன் அக்கட்சியிலிருந்து விலகினார். கடந்த ஜூன் 28ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார். மேலும் தேனி மாவட்டத்தில் தான் திமுகவில் சேர்த்த 27,200 உறுப்பினர்களின் படிவங்களையும் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஒப்படைத்திருந்தார்.
இந்த நிலையில் அமமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் வகித்து வந்த அதே பதவியினை திமுக அவருக்கு அளித்துள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று (ஆகஸ்ட் 30) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக கொள்கை பரப்புச் செயலாளர்களாக பணியாற்றி வரும் திருச்சி சிவா, ஆ.ராசா ஆகியோர்களுடன் இணைந்து, கழக சட்டதிட்ட விதி: 26 இன் படி திமுக கொள்கை பரப்புச் செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் (வடக்கு தண்ணீர் தொட்டித் தெரு, நாராயணதேவபட்டி அஞ்சல், உத்தமபாளையம், தேனி மாவட்டம்) தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த மற்றொருவரான வி.பி.கலைராஜனுக்கு திமுக இலக்கிய அணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் அமமுகவில் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர். பொள்ளாச்சியைச் சேர்ந்த கே.எம்.நாகராஜன் திமுகவின் நெசவாளர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழாக்களில் பேசும் மு.க.ஸ்டாலின், கட்சிக்காக உழையுங்கள், உரிய நேரத்தில் உங்களுக்கு உரிய பலன் கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களுக்கு பதவி வழங்கியுள்ளதன் மூலம் மாற்று கட்சியிலிருந்து வருபவர்களுக்கும் திமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதை மறைமுகமாக சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். முன்னதாக திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, ஒரு மாதத்திற்குள்ளாகவே கரூர் மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: