வெள்ளி, 26 ஜூலை, 2019

வைகோவுக்கு வெங்கய்யா நாய்டு : “மின்னல் வேகத்தில் பேசுகிறீர்கள். ஆனால் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கக் கூடாது

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக கைவிடுக: வைகோமின்னம்பலம் : ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் முழுமையாக கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இன்று (ஜூலை 26) மாநிலங்களவையில் வலியுறுத்தியிருக்கிறார்.
இன்று பூஜ்ய நேரத்தில் இதுகுறித்துப் பேசிய வைகோ, “தமிழ்நாட்டின் காவிரி பாசனப் பரப்பை, விளைநிலங்களை முற்றிலும் அழிக்கக் கூடிய பெருங்கேடான, மீத்தேன், ஷேல் கேஸ் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் எரிகாற்றுக் கிணறுகள் தோண்டும் திட்டத்தை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்த முனைகின்றது. மோடி தலைமையிலான அரசு, இத்தகைய அழிவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மிகவும் தீவிரமாக இருக்கின்றது.

ஒவ்வொரு கிணறும் 10,000 அடி ஆழத்திற்குத் தோண்டப் போகின்றார்கள். ஏற்கனவே தூத்துக்குடியைச் சீரழித்த ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்துக்கு, காவிரி பாசனப் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்ட 276 இடங்களில் உரிமம் வழங்கியிருக்கின்றார்கள். ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு 67 கிணறுகள் தோண்ட உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் அவர்கள் தற்போது இரண்டு கிணறுகளைத் தோண்டி கொண்டிருக்கின்றார்கள்.
கடந்த ஜூலை 17ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம், நாகப்பட்டினம் மாவட்டம் மாதானம், கடலூர் மாவட்டம் புவனகிரி ஆகிய இடங்களில் கிணறுகள் தோண்ட உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கிணறுகளைத் தோண்டுவதற்காக அவர்கள் 20 மில்லியன் லிட்டர் தண்ணீரை அதிக அழுத்தத்தில் நிலத்திற்குள் உட்செலுத்தப் போகின்றார்கள். அதுமட்டும் அல்ல, அத்துடன் 636 நச்சு வேதிப் பொருட்களையும் கலந்து நிலத்திற்குள் செலுத்தப் போகின்றார்கள். இதனால் அந்தப் பகுதியில் உள்ள ஒட்டு மொத்த பாசன நிலப்பரப்பும் சீரழிந்து விடும். மேற்கொண்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விடும்” என்று ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி வேகவேகமாக விளக்கிய வைகோ தொடர்ந்து பேசினார்.
“ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கடந்த பல வருடங்களாக , லட்சக்கணக்கான விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். கடந்த ஜூன் 23ஆம் தேதி லட்சக்கணக்கான மக்கள் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடங்கி, புதுவை மாநிலம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் வழியாக “ராமேஸ்வரம் வரை 596 கிலோமீட்டர் தொலைவிற்கு, கைகளை ஒன்றாகப் பிணைத்து மனிதச்சங்கிலி உருவாக்கி, அறப் போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தில் நானும் பங்கேற்றேன்.
கடந்த மூன்று நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள் தலைநகர் டில்லிக்கு வந்து ஜந்தர்மந்தர் வீதிகளில் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுக்கு ஆதரவாக உத்தரபிரதேசத்தில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் பெருமளவில் திரண்டு வந்து பங்கேற்றார்கள்.
இவ்வளவு எதிர்ப்புக்கிடையிலும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை உறுதியாகச் செயல்படுத்துவோம் என்று கடந்த 17 ஆம் தேதி பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருக்கிறார்.
ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் மத்திய அரசுக்குப் பல லட்சம் கோடி வருமானம் கிடைக்கும். உங்களுடைய கருவூலம் பொற்காசுகளால் நிரம்பி வழியும். ஆனால் அதேவேளையில், ஆசியாவின் நெற்களஞ்சியமான தஞ்சை மண்டலம் விவசாயத்திற்கு உதவாத பாலை நிலமாக மாறிவிடும். தமிழகம் மற்றொரு எத்தியோப்பியா ஆகிவிடும். தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறையினர் அகதிகளாக பிச்சைப்பாத்திரம் ஏந்தக் கூடிய நிலைமை உருவாகும்.
எனவே இந்தக் அழிவுத் திட்டங்களைக் கைவிடுமாறு மத்திய அரசை நான் கேட்டுக்கொள்கின்றேன். இல்லையேல், தமிழக மக்கள் மத்திய அரசுக்கு எதிராகக் கிளர்ந்து எழுவார்கள் என எச்சரிக்கின்றேன்” என்று வைகோ பேசியதும்,
“மின்னல் வேகத்தில் பேசுகிறீர்கள். ஆனால் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கக் கூடாது. கோரிக்கையாக வையுங்கள்” என்று கூறினார் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு.

கருத்துகள் இல்லை: