புதன், 24 ஜூலை, 2019

தமிழக பாஜக 51 மாவட்டங்களிலும் தலா இரண்டு லட்சம் உறுப்பினர்கள் வீதம் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கவேண்டுமாம்

டிஜிட்டல் திண்ணை: தமிழிசை-ராஜா மோதல்!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.
“தமிழக பாஜகவில் சத்தமில்லாமல் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. ஜூலை 6 ஆம் தேதி வாரணாசியில் பிரதமர் மோடி துவங்கிவைத்த உறுப்பினர் சேர்க்கை அன்று முதல் இந்தியாவெங்கும் தீவிரமாக நடந்து வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் பாஜகவின் 51 நிர்வாக மாவட்டங்களுக்கும் தலா ஒரு பொறுப்பாளர் போடப்பட்டு அவர்கள் அந்தந்த மாவட்டங்களிலேயே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறார்கள்.
100 உறுப்பினர்களை சேர்த்தவர் தீவிர உறுப்பினர் என கருதப்படுவார். அந்தத் தீவிர உறுப்பினராக அந்தஸ்து பெற்றால்தான் பாஜகவில் கட்சிப் பதவி பெற முடியும்.
ஏற்கனவே மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினராக விருப்பம் தெரிவிக்கும் திட்டம் பாஜகவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மூலம் உறுப்பினரானவர்கள் என்று தமிழிசை சொன்ன எண்ணிக்கைக்கும், அதன் பின் நடந்த தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு எண்ணிக்கைக்கும் சம்பந்தமே இல்லை.

இதுபற்றியெல்லாம் ஏற்கனவே தலைமைக்கு வந்த புகார்களைத் தொகுத்து வைத்திருக்கும் புதிய செயல் தலைவர் ஜே.பி. நட்டா, இப்போதைய உறுப்பினர் சேர்க்கை குறித்து தமிழிசையிடம் பேசியுள்ளார்.
‘ஏற்கனவே மிஸ்டு கால் கொடுத்தவர்களில் நம் கட்சியின் உறுப்பினர் ஆனவர்கள் எத்தனை, இந்த ஜூலை 6 முதல் உறுப்பினர்கள் ஆகிறவர்கள் எத்தனை என்பதை தெளிவாக கணக்குகளோடு தேசியத் தலைமைக்கு அனுப்ப வேண்டும்.
51 மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் பண்ணுங்க. உறுப்பினர் சேர்க்கை எப்படி நடக்கிறதுனு ஆய்வு பண்ணுங்க. சரியா செயல்படாதவர்கள் யாராக இருந்தாலும் எச்சரிக்கை பண்ணுங்க’ என்று தமிழிசைக்கு உத்தரவிட்டிருக்கிறார் ஜே.பி. நட்டா.
மற்ற மாநிலங்களில் எல்லாம் உறுப்பினர் சேர்க்கை இருமடங்கு, மும்மடங்கு என்று எகிறிக் கொண்டிருக்கையில் தமிழகத்தில் மட்டும் பாஜக உறுப்பினர் சேர்க்கை மந்தமாகவே இருக்கிறது. எனவே இம்முறை தமிழகத்தில் 51 மாவட்டங்களிலும் தலா இரண்டு லட்சம் உறுப்பினர்கள் என தமிழகத்தில் மொத்தம் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதே நட்டாவின் கட்டளை.
இதனால் கடந்த சில நாட்களாக பாஜகவின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் உறுப்பினர் சேர்க்கை, அது தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருக்க ஹெச். ராஜாவோ அதுபற்றி களத்துக்கு வராமல் இருப்பதாக தமிழிசைக்கு தகவல் சென்றிருக்கிறது. ராஜாவுக்கு சென்னையில் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படும் நிலையில், அவரிடம் தமிழிசை பேசியிருக்கிறார். ‘நான் வரலைன்னா என்ன? என் டீம் வேலை செய்யுது. நான் கண்காணித்துக் கொண்டிருக்கிறேன்’ என்று பதில் சொல்லியுள்ளார் ராஜா.
 ‘நீங்க நேரடியா வந்து பார்க்கணும். எல்லாருக்கும் தலைமை இதைத்தான் சொல்லியிருக்கு. அதைத்தான் நானும் உங்ககிட்ட சொல்றேன்’ என சொல்லியிருக்கிறார் தமிழிசை. அதன் பிறகுதான் களத்தில் இறங்கியிருக்கிறாராம் ஹெச். ராஜா. டெல்லிக்கு தமிழிசை ரிப்போர்ட் அனுப்பிவிடுவார் என்பதாலேயே கொஞ்சம் ஆசுவாசமாக களத்தில் இறங்கி பணிகளை கவனிக்க ஆரம்பித்திருக்கிறார் ராஜா என்கிறார்கள் பாஜகவில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்

கருத்துகள் இல்லை: