ஞாயிறு, 21 ஜூலை, 2019

கலாநிதி வீராசாமி : கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் கடல் வளத்தைக் கெடுக்கும். கழிவுகளைக் கடலுக்குள் தள்ளிவிடும்”

கடல்நீரைக் குடிநீராக்கப் போறீங்களா... கொஞ்சம் நில்லுங்க! - மின்னம்பலம் -டி.எஸ்.எஸ்.மணி : உப்புத் தண்ணீரான கடல்நீரைக் குடிநீராக்கப் போகிறோம் என்பது இன்றைய காலத்தின் புதிய அரசியல் முழக்கம். நமது கடற்கரை மீன்பிடித் தொழிலுக்குப் பிரபலமான ஒன்று. அதாவது கடற்கரையை ஒட்டியே நமது பாரம்பரிய மீனவர்கள், கட்டுமரத்திலும், கண்ணாடி இழை படகிலும், நாட்டு படகுகளிலும், விசைப் படகுகளிலும் மீன் பிடித்து வருகிறார்கள்.
கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் (Desalination Plant) தனது கழிவுகளாக அடர்த்தியான உப்பை, கடலில் கொட்டும்போது, கரையோரம் வாழ்கின்ற, உற்பத்தியாகின்ற, மீன்கள் உட்பட கடல் உயிரினங்கள் அழிவைச் சந்திக்கும் என்பதே சூழலியல்வாதிகளும் (Environmentalists) மீனவர்களும் ஆண்டாண்டுக் காலமாகக் கூறிவரும் உண்மை.
அதாவது, அது கடல்நீரை மேலும் உப்புத் தன்மை (Salinity increase) கொண்டதாக ஆக்கிவிடும். ஏற்கனவே, போதுமான ஆற்றுநீர் அல்லது மழைநீர் கடலுக்குச் செல்லாததால், கடல் நீரின் உப்புத் தன்மை (Salinity) அதிகமாகி, கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம் அலையாத்திக் காடுகள் (Mangrove Forests) அழிந்து வருகின்றன.

அதுமட்டுமின்றி, அத்தகைய அடர்த்தியான உப்புக் கழிவுகள் கடலோரம் சேர்ந்து, கரையில் உள்ள நிலத்தடி நீரையும் பாதிக்கும். அதன்மூலம், தமிழ்நாட்டின் 13 கடலோர மாவட்டங்களிலும், விவசாயம் பாதிக்கப்படும். இத்தனைப் பிழைகளைக் கொண்ட ஒரு திட்டத்தை, நமது அதிகாரிகள் ஆலோசனை கூற, அரசியல்வாதிகள் பரப்பி வருவதற்கு என்ன காரணம்?
நாம் எதிர்கொள்ளும் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க, என்ன செய்வது என்று தெரியாமல், தவறான உதாரணத்தை முன்வைக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு என்ன? அத்தகைய திட்டத்தைச் செயல்படுத்தும் தனியார் ஆலைகளிடம் இடைத்தரகர் தொகை வாங்கவும் அவை உதவும் என்று நீங்கள் நினைத்தால், நான் பொறுப்பல்ல.
ஆனால், அதற்கு அவர்கள் கூறும் நியாயப்படுத்தல் வேறுவிதமாக இருக்கிறது. துபாயிலும் வளைகுடா நாடுகளிலும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் திறம்பட செயல்படுகிறது என்பதே. அந்த நாடுகள், பாலைவன பூமிகள். அவர்களுக்குத் தண்ணீருக்கு ஏதாவது செய்தாக வேண்டும். அத்தகைய நாடுகளில், கடலோரம் மீன்பிடி தொழில் செய்வதில்லை, செய்யவும் முடியாது. அவர்களுடைய கடலும் கரையும் அப்படிப்பட்ட தன்மையில் இருக்கிறது. ஆகவே அங்கு உடனடியாக பாதிப்புகளை உணர முடியாது. ஒவ்வொரு நாட்டுக்கும் தகுந்தாற்போல இருக்கும் சூழலை புரிந்துகொண்டுதானே திட்டங்களை அறிவிக்க வேண்டும்?

கடந்த மக்களவைத் தேர்தல் நேரத்தில், எல்லா கட்சிகளின் வேட்பாளர்களும், ‘கடல்நீரைக் குடிநீராக்குவேன்’ என்று உறுதிமொழி கூறியபோது, வடசென்னை திமுக வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராச்சாமி மட்டுமே, “கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் கடல் வளத்தைக் கெடுக்கும். கழிவுகளைக் கடலுக்குள் தள்ளிவிடும்” என்ற எச்சரிக்கையை ஊடகங்களில் கூறினார். தமிழ்நாட்டில் இருக்கிற ஆறுகள், குளங்கள், ஏரிகள்,வாய்க்கால்கள், கால்வாய்கள் அனைத்தையும் தூர் வாரி ஆழப்படுத்தாமல் இத்தனை ஆண்டுகளாக அவற்றில் ஆக்கிரமிப்பு வேலைகளை மட்டுமே செய்துவரும் அரசும், தனியார் தனவந்தர்களும் நீர்நிலைகளைத் தூர் வாரி ஆழப்படுத்தும் வேலையைச் செய்ய வேண்டும்.
உண்மையான நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களான வசதி படைத்தோரை, அங்கிருந்து காலி செய்ய வேண்டும். மாறாக அன்றாடப் பிழைப்புக்கு வழிதேடும், குடிசைவாசிகளை காலி செய்யும் அராஜகப் போக்கை கைவிட வேண்டும். நீர்நிலைகளைக் குடிமராமத்து வேலைகள் மூலம் உண்மையில் தூர்வாரினால், நிலத்தடி நீர் பலப்படும். மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும். மாறாக, இயற்கையை எதிர்த்துப் போராடி, அன்றாடம் கடலுக்குச் சென்று இரை தேடி, மீன் வேட்டை ஆடும் , மீனவர்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம்.
நிலம் சார்ந்த உலகத்தார்களான அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும்... கடல் சார்ந்த உலகத்தாரான பாரம்பரிய பழங்குடிகளான மீனவர்களின் வாழ்க்கை நிலை புரியாததனாலேயே, இந்த பிரச்சினை எழுகிறது. மீனவ மக்கள் உட்பட பொதுமக்களிடம் வாக்கு கேட்க மட்டுமே வருகிற அரசியல்வாதிகள் இதை உணர்ந்தால் நல்லது.

கருத்துகள் இல்லை: