சனி, 1 ஜூன், 2019

டிரம்ப் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த 5 வடகொரிய அதிகாரிகளுக்கு மரண தண்டனை

டிரம்ப் உடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த 5 வடகொரிய அதிகாரிகளுக்கு மரண தண்டனை
மாலைமலர் : டிரம்ப் உடனான 2-வது சந்திப்பு தோல்வி அடைந்ததால் ஆத்திரம் அடைந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த 5 அதிகாரிகளுக்கு மரண தண்டனை அளித்தார்.
சியோல்: வடகொரியாவின் தலைவரான கிம் ஜாங் அன் சர்ச்சைக்கு பெயர் போனவர். தனது தந்தையின் மறைவுக்கு பின் கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பை ஏற்ற இவர் நாட்டில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். ஐ.நா.வின் தீர்மானங்களை மீறி தொடர்ச்சியாக அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி சர்வதேச நாடுகளை அதிரவைத்து வந்தார். இது ஒருபுறம் இருக்க தனது அரசில் ஊழல் செய்யும் அதிகாரிகள் மற்றும் தனக்கு விசுவாசமாக இல்லாதவர்களுக்கு, கொடூரமான முறையில் மரண தண்டனை நிறைவேற்றியதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகும்.


அப்படியான ஒரு செய்தி தற்போது வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உடனான 2-வது சந்திப்பு தோல்வியடைந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த அமெரிக்காவுக்கான சிறப்பு தூதர் கிம் ஹியோக் சோல் மற்றும் வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரிகள் 4 பேரை சுட்டுக்கொன்று மரண தண்டனை நிறைவேற்றியதாக தென்கொரியா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எலியும், பூனையுமாக இருந்து வந்த டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன், கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் முதல்முறையாக சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பு மிகவும் இணக்கமாக நடை பெற்றதால் இருநாட்டு உறவில் நீடித்த விரிசல் விலகியது. இதையடுத்து வடகொரியா ஏவுகணை சோதனைகளை நிறுத்திவிட்டு அமைதி பாதைக்கு திரும்பியது.



இந்த நிலையில் கொரிய தீபகற்பத்தை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வியட்நாமில் 2-வது முறையாக சந்தித்து பேசினர்.

ஆனால் இந்த சந்திப்பு முதல் சந்திப்பை போல இணக்கமாக நடைபெறவில்லை.

கிம் ஜாங் அன்னின் கோரிக்கையை ஏற்க மறுத்து, டிரம்ப் பேச்சுவார்த்தையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இது கிம் ஜாங் அன்னுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த சந்திப்புக்கு ஏற்பாடுகளை செய்த சிறப்பு தூதர் கிம் ஹியோக் சோல் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் 4 பேர் மீது நாட்டின் தலைவருக்கு துரோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

விசாரணைக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் அவர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும், அதனை தொடர்ந்து அங்குள்ள ஒரு விமான நிலையத்தில் வைத்து, 5 பேரும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தென்கொரியா பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் வெளியுறவுத்துறை அதிகாரிகள் 4 பேரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அதேபோல், டிரம்ப் உடனான சந்திப்பின் போது, கிம் ஜாங் அன்னின் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய ஷின் ஹே யாங் என்கிற பெண், தனது பணியை சரியாக செய்யாத குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை: