புதன், 29 மே, 2019

சங்கர மடத்துக்கு ஒரு லட்சம் கோடி சொத்துக்கள் ...விழுங்க துடிக்கும் அரசியல்வாதிகள் .. குருமூர்த்தி... ஆர் எஸ் எஸ் ..

- ஜூனியர் விகடன் டீம் ஆன்மிகம்... அரசியல்... அதிகாரம் என்று இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு வல்லமை படைத்தது காஞ்சி காமகோடி பீடம். குறிப்பாக மடத்தின் பீடாதிபதி, பிரதம மந்திரிக்கே ஆலோசனை சொல்லும் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். இன்றைக்கு அந்த ‘பவர் சென்டர்’, பிரச்னைகளின் சென்டராக மாறியிருக்கிறது.
“மத்தியிலும் மாநிலத்திலும் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் சிலர், மடத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். மடத்தின் பீடாதிபதிக்குப் பல்வேறு வழிகளில் இவர்கள் நெருக்கடி கொடுத்து, ஏகப்பட்ட காரியங்களைச் சாதித்துக்கொள்ளத் திட்டமிடுகிறார்கள். இதை எல்லாம் பார்த்துக்கொண்டும் எங்களால் ஒன்றும் செய்யமுடிவில்லை’’ - ஜூனியர் விகடனில் கடந்த இரு இதழ்களில் மிஸ்டர் கழுகு பகுதி யில் வெளியான சங்கர மடத்தின் விவகாரம் பற்றிய செய்திகளைப் படித்துவிட்டு, நம்மைத் தொடர்புகொண்ட மடத்தின் பாரம்பர்ய பக்தர்கள் சிலர், புலம்பியதுதான் மேற்கண்ட வரிகள். என்னதான் நடக்கிறது காஞ்சி மடத்தில்? தீவிர விசாரணையில் இறங்கினோம்.


கோடிகளைக் குவிக்கிறார்கள்!

‘‘இந்து மத தர்மங்களைக் கட்டிக்காப்பதற்காக இந்தியாவின் நான்கு திசைகளிலும் ஆதிசங்கரர் மடங்களை நிறுவினார். கிழக்கே பூரியில் கோவர்தன மடம், மேற்கே துவாரகையில் காளிகா மடம், வடக்கில் பத்ரிகாஷ்ரமத்தில் ஜோதிர் மடம், தெற்கில் சிருங்கேரியில் சிருங்கேரி மடம் என நிறுவினார் ஆதிசங்கரர். தன் இறுதிக் காலத்தைத் தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் கழித்தபோது காஞ்சி சங்கர மடத்தையும் நிறுவினார்; அங்கேயே முக்தி அடைந்தார் என்பது காஞ்சி மடம் குறிப்பிடும் வரலாறு. இதுபோன்ற காரணங்களால், சங்கர மடங்கள் வகுப்பதுதான் இந்து தர்மம்; பீடாதிபதி சொல்வது தான் இந்து தர்ம கட்டளை; அதைப் பின்பற்றுவதுதான் எங்களைப் போன்ற உண்மையான இந்துக்களின் கடமை. இதை நாங்கள் ஆணித்தரமாக நம்புகிறோம். ஆனால், அந்த நம்பிக்கையை வைத்தே இப்போது பலரும் கோடிகளைக் குவித்துவருகிறார்கள்’’ என்று முன்னுரை கொடுக்கிறார்கள் சங்கர மடத்தின் பாரம்பர்ய பக்தர்கள்

கருத்துகள் இல்லை: