புதன், 29 மே, 2019

வலதுசாரி புரோக்கர்கள் ஜாக்கிரதை.. டான் அசோக்


டான் அசோக்  :  வலதுசாரி புரோக்கர்கள் ஜாக்கிரதை:
இந்தியாவில் உள்ள தலித் அரசியல்வாதிகள் என எடுத்துக்கொண்டால் ஆ.ராசா மிகப்பெரிய அடக்குமுறைகளைச் சந்தித்தவர். தலித் என்பதாலேயே, திராவிட இயக்கத்தவர் என்பதாலேயே வரலாறு காணாத அளவுக்கு பிரம்மாண்டமான பொய் புகார்களுக்கு ஆளானவர். நெருப்பாற்றில் நீந்திப் போராடி வென்றவர். அவர் அளவுக்குக் கிண்டலையும், கேலியையும், தூற்றலையும் வேறொருவர் சந்தித்திருந்தால் ஒன்று உயிரை மாய்த்துக் கொண்டிருப்பார்கள் அல்லது ஒட்டுமொத்தமாகக் காணாமல் போயிருப்பார்கள். அதேபோல, வேறொரு கட்சியில் இதுபோல் ஒருவர் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருந்தால் அவரை அந்தக் கட்சி உடனே கைகழுவி இருக்கும். அதிலும் அந்த நபர் தலித்தாக இருந்தால் இந்தியாவில் உள்ள கட்சிகள் எவ்வளவு வேகமாகக் கைகழுவும் என்பதற்கு பாஜகவின் பங்காரு லஷ்மண் போல பல சான்றுகள் உண்டு. ஆனால் இரண்டுமே நடக்கவில்லை. ஆ.ராசா எதிர்த்து நின்றார். திமுக எனும் மாபெரும் கட்சி சற்றும் ஒதுங்காமல் அவருக்குத் துணை நின்றது. அதுமட்டுமல்ல, அவர்மீது குற்றச்சாட்டுகள் இருக்கும்போதே அவரை முழுதாக நம்பி தகத்தகாய சூரியன் என பொதுக்கூட்டத்தில் சொன்னார் தலைவர் கலைஞர்!

ஆ.ராசாவும் சற்றும் மனம் தளராமல் தன் பக்க நியாயத்தை மறைத்து நின்ற அநீதிப் பெருஞ்சுவற்றின் ஒவ்வொரு செங்கல்லாகப் பெயர்த்தெடுத்தார். தானே முன்னின்று நடத்திய அந்த நீதிப் போராட்டத்தை நூல் வடிவத்தில் ஆவணமாகவும் ஆக்கியிருக்கிறார். தனக்கெதிராகவும் திராவிட இயக்கத்துக்கு எதிராகவும் சதி செய்த அயோக்கியர்களின் பெயர்களையும் அவர்களின் சதிகளையும் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளார். ஆனாலும் இன்றுவரை அதனை எவனும் மறுக்கவில்லை. அதில் தனல்விட்டு எரியும் உண்மைக்கு முன் எதிரிகள் எல்லோரும் நாக்கறுந்துபோய் நிற்கிறார்கள்.

அப்படியான ஒரு போராளி மீண்டும் டெல்லி செல்கிறார். எங்கே தான் அசிங்கப்படுத்தப்பட்டோமோ, எங்கே தன் கழகத்தின் மீது மாபெரும் களங்கம் கற்பிக்கப்பட்டதோ அந்த டெல்லிக்கு அவர் மீண்டும் போகிறார்! இத்தனை பெரிய மாஸ் காட்சிகள் எல்லாம் தெலுங்கு சினிமாவில்தான் சாத்தியம். ஆக அப்படி ஒரு நிகழ்வை, வெற்றியை ஆ.ராசா பெறுகிறார் எனத் தெரிந்தவுடனேயே திமுகவினர் அதை எவ்வளவு பெரிதாகக் கொண்டாடி இருக்க வேண்டும்? ஆனால் அவ்வளவு பெரிதாக கொண்டாடவில்லையே! ஏன் தெரியுமா?
அவர்கள் தேர்தல் முடிவுகள் வெளியான நள்ளிரவு வரையில் இன்னொரு கட்சித் தலைவனின் வெற்றியை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருந்தார்கள். அந்தத் தலைவனின் வெற்றியும் உறுதியாகும்வரை, தங்கள் கழகத்தின் வெற்றி ஓலையைப் பெற்றும் அதைக் கொண்டாடாத குடிமக்களாக காத்திருந்தார்கள். இணையமெங்கும் கொட்டிக் கிடக்கும் இணைய திமுகவினரின் பதற்றம் கொப்புள்ளிக்கும் பதிவுகளே அதற்குச் சாட்சி!
மநகூவில் முக்கிய அங்கம் வகித்து தலைவர் கலைஞர் கடைசியாக ஒருமுறை முதல்வர் ஆவதைத் தெரிந்தொ தெரியாமலோ தடுத்தும்கூட அவர் மீது கொஞ்சம் கூட வேற்றுமை பாராட்டாமல் அவர் வெற்றிக்காக ஏங்கினார்களே ஏன்? ஏன் வேறொருக் கட்சித் தலைவரான திருமாவளவனின் மீது திமுகவினருக்கு இந்தப் பாசம்? அவரை தலித் தலைவராகப் பார்ப்பதாலா? இல்லை. அவரை பெரியாரின் பிள்ளையாகப் பார்ப்பதால், அவரை திராவிட இயக்கத்தின் முக்கிய அங்கமாகப் பார்ப்பதால், அவரை தமிழ்நிலத்தின் சாதிக்கெதிரான நீண்டகாலப் போராட்டத்தின் இன்னொரு அரணாகப் பார்ப்பதால்! இது எல்லாவற்றையும் விட அவரை எதிரியாகக் கருதும் சாதிவெறி பிடித்தக் கூட்டத்தை தங்கள் எதிரியாகவும் கருதுவதால். இது கட்சிப் பாசம் அல்ல. சித்தாந்தப் பாசம்.
ஆனாலும் பாருங்கள். இந்த உறவைப் பலர் கண்டும் காணாததைப் போன்றோ, அல்லது கண்ணிலேயே படாததைப் போன்றோ நடந்துகொள்வார்கள். அதுகூடப் பரவாயில்லை. சிதம்பரம் தனிதொகுதியையும், தனி சின்னத்தையும் தானே விரும்பித் தேர்ந்தெடுத்த திருமாவளவனின் முடிவில் எள்ளவிலும் தலையிடவில்லை ஸ்டாலின். மேலும், திருமாவளவன் பெறும் வெற்றிதான் கலைஞர் பெறும் வெற்றி என பிரச்சாரத்தில் உள்ளத்திலிருந்து உணர்ச்சிவசப்பட்டு பேசினார் ஸ்டாலின். ஆனால் சிதம்பரத்தில் நடந்த இழுபறிக்கும் மனசாட்சியின்றி திமுகவைக் காரணம் சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். நாம்கூட பதிலுக்கு, "திருமாவளவன் உதயசூரியனின் நின்றிருக்கலாம். ரவிகுமாரைப் போல எளிதாகப் பல லட்ச வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்திருக்கலாம்," என எளிதாகப் பதில் சொல்லலாம்தான். ஆனால் நம் நோக்கம் அதுவல்ல. நம் நோக்கம் திருமா ஜெயிக்க வேண்டும். தன் சாதியினருக்கும் சேர்த்துத் தீங்கிழைக்கும் சாதித்தலைவர்கள் நாடாளுமன்றம் போகக்கூடாது, எல்லா சாதியினருக்காகவும் பேசும் மக்கள் தலைவர் திருமா நாடாளுமன்றம் போகவேண்டும் என நினைத்தோம். மாம்பழங்கள் விழிபிதுங்க வேண்டும் என நினைத்தோம். அவ்வளவுதான். அது நடந்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால் உதயசூரியனில் நின்று ஜெயிக்காமல் தனித்துவத்தோடு அவர் பானையில் ஜெயித்ததில் நமக்கு கூடுதல் மகிழ்ச்சிதான்.
இந்த வெற்றியை திமுகவினர் மட்டுமல்ல, திராவிட இயக்கத்தினர் எல்லோரும், தமிழக முற்போக்கு சக்திகள் எல்லோரும் ஒரு மக்கள் தலைவனின் வெற்றியாகப் பார்க்கிறார்கள்.
ஆனால் நம்மிடையே சில புல்லுருவிகள் இருக்கிறார்கள். எப்படியாவது தமிழகத்திலே இருக்கும் சாதிமறுப்பாளர்களிலிருந்து, முற்போக்காளர்களிலிருந்து தலித்துகளைத் தனிமைப்படுத்த பிரம்மப்பிரயத்தனப் படுகிறார்கள். அதெப்படி சாதி மறுப்பாளர்களெல்லாம் சாதி கடந்து ஒன்றாக இயங்கலாம்? தலித்துகள் தனியாகத்தான் இயங்க வேண்டும் என்கிற விஷமத்தனமான, 'வடநாட்டுத்தனமான' நோக்கம் அது. தலித்துகள் தனியாக தேர்தலில் நில்லுங்கள் என்பது, தலித்துகள் பொதுக்கட்சிகளுடன் சேராதீர்கள் என்பது, தலித் உரிமைகள் பற்றி தலித்துகள் மட்டும்தான் பேசவேண்டும் என்பது! இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்த நோக்கத்திற்கு ஒரு உதாரணம் சொல்லவேண்டுமானால் தமிழகத்தில் 39 வேட்பாளர்கள் பாசிச பாஜகவை எதிர்த்துக் களமிறங்கி இருக்கையில் ரஞ்சித் திருமாவளவனை ஒரு பொது இடத்திற்கு 'அழைத்துக்' கொடுத்த ஸ்பெஷல் ஆதரவு! இந்த ஸ்பெஷல் ஆதரவு இருக்கிறதே, இந்த தனிமைப்படுத்துதல் இருக்கிறதே, மக்கள்தலைவரை தலித் தலைவராக முத்திரை குத்திய செயல் இருக்கிறதே இதைத்தான் பாஜகவிடம் தோற்றுப்போன வடநாட்டுத்தனம் என்கிறேன் நான்.
சரி. மற்றவர்களை எல்லாம் விடுங்கள். ஆணவக்கொலைக்கு எதிராக சட்டம் வேண்டும் என மக்களவையில் ஒலித்த ஒரே குரல் கனிமொழியின் குரல். அவருக்கு ஏன் ஆதரவு கொடுக்கவில்லை? ஆ.ராசா என்னப்பா செய்தார்? சரி அதோடாவது விட்டிருக்கலாம். திருமாவளவனின் வெற்றிச் செய்தி வந்ததும் "தலித்துகளுக்கு தனித்தொகுதி வெற்றி கூட போராடித்தான் பெற வேண்டும்," என டிவீட் செய்கிறார்களே! எவ்வளவு முனை மழுங்கியப் பேச்சு! பிற தனித்தொகுதிகளில் எல்லாம் தலித்துகள் நிற்காமல் வேறு சாதியினர் நின்றார்களா? அல்லது திருமாவளவனை எதிர்த்து வேறு சாதி வேட்பாளர் நின்றாரா? சாதிக்கு அப்பாற்ப்பட்டு பல முற்போக்காளர்களின் மக்கள் தலைவராக இருக்கும் ஒருவரை, தலித் தலைவராக மீண்டும் மீண்டும் முன்னிறுத்தத் துடிக்கும் இந்தச் செயலுக்கு அர்த்தம் என்ன? இதன் நோக்கம் என்ன? இதைத்தான் நான் வடநாட்டுத்தனமான polarization என்கிறேன்.
இன்று வடநாட்டில் பாஜக பெற்றிருக்கும் வெற்றி மேற்கூறியதைப் போன்ற செயல்களால் நிகழ்ந்திருப்பதுதான். உலக அரசியலில் இப்போது வலதுசாரிகளின் கை ஓங்கியிருக்கிறது. அரசியல் கூர்நோக்காளர்கள் இதை வலதுசாரிகளின் வெற்றி எனச் சொல்வதைவிட இடதுசாரிகளின் தோல்வி என்கிறார்கள். அதில் ஒன்றுதால் மேற்சொன்ன தனிமைப்படுத்துதலும். சாதி ரீதியாக முற்போக்கு பேசும் தலைவர்களைப் பிரித்து, முற்போக்கு சக்திகளை சாதிரீதியாகப் பிரித்து, தனித்தனியாக இயங்கியதன் கேடுதான் பாஜக எனும் வலதுசாரிப் பார்ப்பனியப் பாம்பு அங்கே படமெடுத்து ஆடுகிறது. அது துப்பும் நீட் போன்ற விஷங்கள் தலித், தலித் அல்லாதோர் என இனம்பார்த்துப் பதம்பார்ப்பதில்லை. எல்லோரையும் கொத்தித் தள்ளுகிறது எனும்போது எல்லோரும் சேர்ந்தால் அல்லவா அதை தலையில் அடிக்க முடியும்?
அதும்போக "சனாதனமா சனநாயகமா?" என எல்லா குடிமக்களுக்கும் சேர்த்துக் குரலெழுப்பும் ஒரு தலைவனை தலித் தலைவர் என பாமககாரன் முத்திரை குத்துவான். தன்னை பார்ப்பான் செருப்பால் அடிக்கிறான் என்பதை உணராமல் தலித்துகளை அடிமைகளாகக் கருதும் சாதிவெறிபிடித்த முட்டாள் சூத்திரர்கள் முத்திரை குத்துவார்கள். நமக்கு நாமே குத்திக் கொள்ளலாமா? கூடியிருப்பவர்களைப் பிரித்தாளும் புத்தி இல்லையா இது?
ரஞ்சித்துக்கு மிகவும் பிடித்த பூவை ஜகன்மூர்த்தி மோடியைப் போற்றிப் புகழ்ந்து வாழ்த்து அனுப்பியிருக்கிறார்! அவருக்கு கண்டனம் தெரிவிக்கலாமே! ஆனால் 'லைட்' ஏன் கொஞ்சம்கூட அந்தப்பக்கம் திரும்பாமல் திருமாவை தலித் தலைவராக ஆக்குவதில் குறியாக இருக்கிறது!!
ஆக இவர்களின் நோக்கமெல்லாம் கொள்கையைக் கொண்டு சேர்த்தல் என்பதைவிடவும் தலித்துகளை பொது அரசியலில் இருந்தும், அதிகாரத்தில் இருந்தும் தனிமைப்படுத்துதல் என்பதாகவே இருக்கிறது. இதை ஏதோ புரட்சி போல எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதையா அம்பேத்கர் விரும்பினார்? அம்பேத்கர் பொதுச்சூழலுக்கு தலித்துகள் வரவேண்டும், அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் எனக் கூறியவர் இல்லையா! அவருக்கு முற்றிலும் முரணான ஒன்றைக் கொள்கையாக வைத்துக்கொண்டு அம்பேத்கரை பெயரை உச்சரிக்க உறுத்த வேண்டாமா? திருமாவளவனின் பேச்சுக்களைக் கேட்டு உள்வாங்கிய எவனாவது இப்படி தனிமைப்படுத்திக் கொள்வதை விரும்புவானா?
தமிழகம் அப்பழுக்கற்ற சாதியே இல்லாத மாநிலமெல்லாம் இல்லை. இன்னும் நாம் போகவேண்டிய தொலைவு மிக அதிகம் உள்ளது. ஆனாலும் நாம் ஏனைய இந்தியாவில் இருந்து எத்தனையோ ஆயிரம் கிலோமீட்டர்கள் முற்போக்கானவர்கள் என்பதை இந்தத் தேர்தல் காட்டியிருக்கிறது. தர்மபுரி, கொங்கு, தென்மண்டலம், கன்னியாகுமரி என சாதி படர்ந்துள்ள இடங்களில்லாம் கூட சாதி அரசியல் செருப்படி வாங்கியிருக்கிறது. இழுபறி என்றாலும், தனித்தொகுதி என்றாலும் 20% மட்டுமே தலித்துகள் உள்ள தொகுதியில் திருமா வென்றிருக்கிறார். ரஞ்சித் மொழியில் சொல்லப்போனால் 'அலங்காரச் சின்னம்' ஏதுமில்லாமல் தலித் அல்லாத பெருவாரியானவர்களின் வாக்குகளைப் பெற்றிருக்கிறார். ஆனால் இந்த பாசிட்டிவ்களை எல்லாம் பார்க்காமல், நம்மையும் 'இந்தியா எனும் முற்போக்காளர்கள் பிரிந்து சிதறிக் கிடக்கும் ஒரு பாழடைந்தக் கட்டமைப்பில்' கொண்டுசேர்க்க சிலர் தெரிந்தோ தெரியாமலோ உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் கவனமாக இருக்க வேண்டும்.
-டான் அசோக்
மே 26, 2019

கருத்துகள் இல்லை: