செவ்வாய், 28 மே, 2019

புதிய திமுக கூட்டணி எம்.பி.களால் என்ன செய்யமுடியும்? ..ஆழி செந்தில்நாதன்

ஆழி.செந்தில்நாதன்  : தமிழ்நாட்டில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக கூட்டணி எம்.பி.களால் என்ன செய்யமுடியும் என்று சில பத்திரிகைகளும் புத்திசாலிகளும் கேட்கிறார்கள்...*
சாதாரண மக்களிடம் அந்தக் கேள்வி இருந்தால் அதை அறியாமை என்று கூறலாம். பாஜக ஆதரவாளர்களும் பத்திரிகையாளர்களும் கேட்பதை என்ன என்று கூறுவது?
இங்கே ஒரு விசமப் பிரச்சாரம் நடக்கிறது. தேர்தலுக்கு முன்பு திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது மத்திய அரசு விவகாரங்களில் மாநிலக் கட்சிகள் வாக்குறுதி தரலாமா என்று கேள்வி கேட்டார்கள். தமிழ் இந்து இன்று கூட இதை எல்லைத்தாண்டிய பயங்கரவாதம் போல சித்தரித்து கட்டுரை வெளியிட்டிருக்கிறது.
*தமிழ்நாட்டின் எம்.பி.கள் தில்லியில் எதுவும் செய்யமுடியாது என்கிற கருத்தை விதைப்பது ஜனநாயக விரோதமானது. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் பாராளுமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமையை உடையவர். அவரது முடிவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். ஆனால் அவரது கோரிக்கைகளை அரசு பரிசீலித்தே ஆகவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அது ஆளும் கட்சியின் தவறே ஒழியே கேள்விகேட்கும் உறுப்பினரின் தவறு இல்லை.*

*ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கட்சிக்கும் மாநிலத்துக்கும் அப்பாற்பட்டு மக்கள் பிரதிநிதி என்கிற அடிப்படையில் சம உரிமை உடையவர். அவர் இந்தியாவின் சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தின் உறுப்பினர். அங்கே பெரும்பான்மை, சிறுபான்மை என்கிற பலம் மாறுபடலாம். உறுப்பினரின் உரிமை மாறுபடாது. ஒரு குறிப்பிட்ட துறையின் அதிகாரம் மத்திய அரசுக்கு உட்பட்டதாக இருந்தாலும் மாநிலக் கட்சியின் உறுப்பினர் அது குறித்து ஒரு சட்டமுன்வரைவைத் தாக்கல் செய்யலாம்.*
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தன் தொகுதி அல்லது மாநிலத்தின் பிரதிநிதி மட்டுமல்ல. வெறுமனே குரல் கொடுப்பதற்காகவும் அவர் அங்கே செல்லவில்லை. இந்திய அரசமைப்பின்படி உச்சபட்ச அதிகாரமுள்ள பாராளுமன்றத்தில் இந்தியாவின் அனைத்து அதிகாரங்களுக்கும் சேர்த்தே அவரும் செயல்படுகிறார். தன் தொகுதியில் பாலம் கட்டுவதற்கான நிதியைக் கோருவதற்காக அவர் அங்கே செல்லவில்லை. அவர் சட்டம் இயற்றுநர் - Law Maker.
*சட்டமியற்றும் (legislative) அவையான பாராளுமன்றத்தில் முன்மொழிவு ஏற்கப்பட்டால் அதை நிறைவேற்றும் பொறுப்பு காபினட் தலைமையிலான நிர்வாகத்துறைக்கு (executive) இருக்கிறது. அந்தச் சட்டம் மீறப்படாமல் பாதுகாக்கப்படவே நீதித்துறை (judiciary) இருக்கிறது. ஆனால் மக்களின் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர்தான் உச்சபட்ச அதிகாரமுள்ளவர்.*
இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தனிக்குரலாக ஒலிக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள் தமிழக எம்.பிகள். குறிப்பாக தோழர்கள் தொல். திருமாவளவன், கனிமொழி, ஆ ராசா, ரவிக்குமார், ஏ கணேசமூர்த்தி, சு வெங்கடேசன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் மீது ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பே இருக்கிறது. ஒரு காலத்தில் காங்கிரஸ் பெரும்பான்மையிருந்த ஆட்சிகளின்போது மக்களவை அல்லது மாநிலங்களவையில் அண்ணாவும் சம்பத்தும் செழியனும் எப்படியெல்லாம் செயல்பட்டார்கள் என்பதைப் பார்க்கவேண்டும். ஆக்கபூர்வமாகும் எதிர்க்குரலாகவும் அவர்கள் செயல்பட்டார்கள்.
*இந்தி எதிர்ப்பு போராட்டக் காலத்தில் மொழித்திணிப்பு இருக்காது எனறு ஈ வி கே சம்பத்துக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி உறுதிப்படுத்தினார் ஜவஹர்லால் நேரு.*
*எங்கள் நாட்டுக்கான சுயநிர்ணய உரிமைக்காகப் பேசும் உரிமையை விட்டுத்தரமுடியாது என்று குரல் கொடுத்த அண்ணா, இந்திய அரசின் நிதிக்கொள்கை, வெளியுறவுக்கொள்கை உள்ள எல்லா மத்திய அரசு அதிகாரங்களையும் கிழித்துத் தொங்கப்போட்டார். போர்க்காலத்தில் அரசோடு சேர்ந்தும் நின்றார்.*
*எமர்ஜென்சியின் போது இரா செழியன் இந்திரா காந்திக்கு எதிராக பாராளுமன்றத்தில் முழங்கியதை நாம் மறக்கமுடியுமா? அவரது அந்தப் புகழ்பெற்றப் பேச்சு எல்லோருக்கும் பாடநூல்.*
எத்தனை தடவை வைகோவும் கணேசமூர்த்தியும் திருச்சி சிவாவும் அண்மையில் கனிமொழியும் தமிழ்நாட்டின் குரலை ஒலிக்கச்செய்திருக்கிறார்கள்!
*தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் எனறு தமிழ்நாட்டுக்காக இங்கே தான் வங்காளத்து கம்யூனிஸ்ட் பூபேஷ் குப்தா குரல்கொடுத்தார். இந்த அரங்கில்தான் இந்தியாவிலுள்ள அனைத்து எஸ்சி, பிஸி மக்களுக்கான சமூக நீதிக்குரல்களை திராவிடக் கட்சிகளின் எம்பிகள் எழுப்பினார்கள். இதே மன்றத்தில்தான் எங்கள் நிதியைத் தின்று தீர்க்கின்றன வட மாநிலங்கள் என்று ஜெயலலிதாவும் குற்றம்சாட்டினார். இப்படி எவ்வளவோ சொல்லமுடியும்.*
எனவே மாநிலக் கட்சிகளின் எம்பிகளாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சிகளின் எம்பிகளாக இருந்தாலும் சரி பாராளுமன்றத்தில் அவர்களுக்கு உள்ள உரிமையும் கடமையும் ஒன்றுதான். அவர்களால் என்ன செய்யமுடியும் என்று கேட்பது, அவர்கள் என்ன சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிற திமிர்.
*தமிழ்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தில்லியில் எதுவும் செய்யமுடியாது, மோடிக்கு ஓட்டுப்போடாத தமிழ்நாடும் மோடி அரசாங்கத்தால் புறக்கணிக்கப்படும், அதனால் தமிழ்நாட்டு மக்கள் வருந்த வேண்டிய நிலைமை வரும் என்கிற நிலை ஏற்படுமானால், ஆள்பவர்கள்தான் தேச விரோதிகளாக ஆவார்கள்.*

கருத்துகள் இல்லை: