வெள்ளி, 31 மே, 2019

வட இந்தியயாவிலிருந்து பிழைப்பு தேடி தமிழகத்தில் நிரந்தரமாக குடியேறிய ஒருவரின் குரல்!

நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்துவம் காட்டிய தமிழக வாக்காளர்களே வணக்கம் !!!. இந்தியா முழுவதும் ஒரே மாதிரி நினைக்கையில் நீங்கள் மட்டும் தனி வழியில் சிந்தித்தது தமிழன் தனித்துவமானவன், தமிழ் இனம் தனி இனம், மற்றொரு இனம் எடுக்கும் முடிவை திராவிட இனம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை காட்டி விட்டீர்.*
*நேற்றிலிருந்து புரியாத புதிராக இருந்ததை யோசித்து யோசித்து விடை தேட முற்பட்டு ஒரு நண்பனின் பேச்சில் சிறு பொறி கிட்டியது.*
*ஆம், தமிழகத்திற்கு பிழைப்புத் தேடி வந்த குஜராத் ராஜஸ்தான் மார்வாடிகளை, பட்டேல்களை, ஜெயின்களை, சௌராஷ்டிரர்களை, சிந்திகளை பெரும் செல்வந்தர்களாக்கியது இந்த மண். நாங்கள் மட்டுமா ஆந்திராவிலிருந்தும் கேரளாவிலிருந்தும் வந்தவர்களை திராவிடத்தின் ஒரு தாய் பிள்ளையாக அன்புடன் அரவணைத்துக் கொண்டவர்கள் நீங்கள் !!!. இன்றும் பீகாரிலிருந்து உ. பி. யிலிருந்து ராஜஸ்தானிலிருந்து மேற்கு வங்கத்திலிருந்து தினம் வந்திறங்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை வாழவைக்கும் மக்கள் நீங்கள். உங்களின் திராவிடக் குடும்பத்தின் அங்கமான ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் ஆயிரக்கணக்கான வட இந்தியர்களை வாழ வைக்கும் இனம் திராவிட இனம் என்பது நிதர்சனம் !!!.*
*நான் அதிசயத்துப் போகிறேன் இந்த மண்ணைப் பார்த்தும் மக்களைப் பார்த்தும், யார் இந்த மண்ணை, மக்களை பண்படுத்தியது என்று !!!*
*மிகவும் வெளிப்படையாகவே சொல்கிறேன் நாங்கள் இங்கே வந்து வாழ்வதைப் போல் ஒரு நாளும் எங்கள் மண்ணில் இவ்வளவு சுதந்திரமாக சௌகரியமாக வாழ்ந்து விட முடியாது. தென்னகம் வந்து கெட்டவர்கள் யாருமில்லை.*

*எங்கள் மண்ணில் டாடா, பிர்லா, அம்பானி, அதானிகள் தான் உருவாயினர். எங்களைப் போன்றவர்களையும் தொழிலதிபர்கள் ஆக்கியது இந்த திராவிட மண்.*
*நாட்டில் இங்கு மட்டும் தான் எல்லா ஜாதியிலும் என்ஜினியர்கள், டாக்டர்கள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள், தொழிலதிபர்கள் என நீக்கமற நிறைந்துள்ளனர். நீங்கள் வேறு இடம் பெயர்ந்ததெல்லாம் அறிவு சார்ந்த சமுதாயமாக பல் துறை நிபுணர்களாக சென்றீர்கள். இன்று உலகில் எந்த மூலையிலும் தமிழகத்தில் எந்த ஜாதியைச் சேர்ந்தவரும் துறை சார்ந்த நிபுணத்துவம் பெற்றவனாக இருக்கிறான். எங்கள் மண்ணில் இப்படி சமத்துவம் இல்லையே.. எங்களைப் போல் நீங்கள் கூப்பிடாமல் பிழைக்க சென்றவர்கள் அல்ல, உங்கள் அறிவு சார் தேவை இருப்பதால் ஒரு "டிமாண்டின்" அடிப்படையில் சென்றவர்கள்.*
*இதையெல்லாம் எது உங்களுக்கு பெற்றுக் கொடுத்தது ?. ஆம், சமூக நீதி அடிப்படையில் நீங்கள் போராடி பெற்ற இட ஒதுக்கீட்டால், இதனால் பயன்பெறாத ஜாதி ஏதாவது உண்டா தமிழகத்தில் ?. இந்த மண்ணை பதப்படுத்த ஓடி ஓடி பணியாற்றிய நீதிக் கட்சி தலைவர்களின் வரலாற்றையும் காமராஜரின் தீர்கத்தையும் எண்ணிப் பார்க்கிறேன். உங்கள் ஊணில் உதிரத்தில் சுய மரியாதை நெருப்பை ஏற்றிய ஈரோட்டு கிழவனை நினைக்கிறோம் !!!. ஒரு பண்படுத்திய மண்ணாக இல்லாமல் போயிருந்தால் எங்களைப் போன்ற காட்டு மிராண்டிகளாக இருந்திருந்தால் நாங்கள் எங்கு போய் பிழைத்து இந்த உயரத்தை தொட்டிருக்க முடியும். எங்களை வாழவைக்கும் தெய்வங்களே நீங்கள்தானே. எங்கள் மண்ணில் ஒரு "பெரியார்" தோன்றியிருந்தால் தினம் தினம் இரயிலில் ஆயிரக்கணக்கான பேர் பிழைப்பு தேடி இங்கு வர வேண்டிய நிலை எங்களுக்கும் வந்திருக்காதே. சட்டம் ஒழுங்கு மட்டும் சரியில்லை என்றால் இங்கு நாங்கள் கால் வைக்க முடியுமா ?.*
*திராவிடர்களே - தமிழர்களே உங்களை வணங்குகிறோம் !!!. நீங்கள் சுய மரியாதைக் காரர்கள். உங்கள் உரிமையைப் பெற நீங்கள் ஆளுங் கட்சியாகதான் இருக்கவேண்டுமா என்ன? இந்த தேர்தலில் நாடு முழுவதும் 40% க்கும் குறைவான வாக்குகளைதான் ஆளும் கூட்டணி பெற்றுள்ளது. மீதி 60% மக்களின் குரலாக "திராவிடர்"களின் குரல் அங்கே ஒலிக்கட்டும்.*
*இதுவரை இங்கு நீங்கள் பெற்றது எதுவும் இணக்கமாக இருந்தல்ல போராட்டங்கள் மூலமே என்பதே வரலாறு.*
*இந்த மண்ணுக்கும் "திராவிட இனத்திற்கும்" என்றும் நன்றியுள்ளவர்களாக எங்கள் சந்ததியினரை வளர்த்தெடுப்போம் என்று உறுதி கூறுகிறோம் !!!.*
*அன்புடன்.....*
*பிழைக்க வந்த வடஇந்தியன் !!!.*
*இது தாண்டா பகுத்தறிவு !!!. Kandasamy Mariyappan

கருத்துகள் இல்லை: