செவ்வாய், 25 செப்டம்பர், 2018

விவசாயிகள் எதிர்ப்பு -புல்லட் ரெயில் நிதியை ஜப்பான் நிறுத்தியது .... முதலில் விவசாயிகள் பிரச்னையை தீருங்க .. அப்புறமா வாங்க ..

விவசாயிகள் எதிர்ப்பு - புல்லட் ரெயில் திட்டத்துக்கான நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான் நிறுவனம்
மாலைமலர் :மும்பை - அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திட்டத்துக்கான நிதியுதவியை ஜப்பான் நிறுவனம் நிறுத்தியுள்ளது. #BulletTrain #Japan
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு புல்லட் ரெயில் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஆகிய இருவரும் கடந்த மே அடிக்கல் நாட்டினார். ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் தயாராகும் இந்த திட்டம் 2023-ம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.
சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் செலவில் மதிப்பிடப்பட்ட இந்த திட்டத்தின் தொடக்க கட்டமான நிலம் கையகப்படுத்துவதிலேயே பல சிக்கல்கள் எழுந்தன. இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் நிலம் கையகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
‘குஜராத் மாநில சட்டப்படி, வளமான நிலத்துக்கு குறைவான நஷ்டஈடு தந்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய அரசின் சட்டப்படி நிலம் கையகப்படுத்துவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்’ என பல விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில், விவசாயிகள் எதிர்ப்பால் தொய்வடைந்துள்ள புல்லட் ரெயில் கட்டுமானப்பணிகளுக்கான நிதியுதவியை ஜப்பான் நிறுவனம் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜப்பான் சர்வதேச கூட்டமைப்பு முகமை (JICA) என்ற ஜப்பான் அரசு நிறுவனமானது விவசாயிகள் பிரச்சனை குறித்தும், அரசு எடுத்துவரும் நவடிக்கை குறித்தும் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: