செவ்வாய், 25 செப்டம்பர், 2018

பேராசரியருக்கு பாலியல் தொந்தரவு .. ... விகடன் ஸ்டாலின் . தினமலர் ராசா கைது

மின்னம்பலம் :சென்னையில் பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துவரும் பேராசிரியைக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த இரண்டு பத்திரிகையாளர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் லோரா. இவர், காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த சனிக்கிழமையன்று (செப்டம்பர் 22), இவர் விகடன் குழுமத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஸ்டாலின் மற்றும் தினமலர் நிறுவனத்தில் பணியாற்றிய அ.ப.ராசா மீது சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் தெரிவித்தார். இருவரும் தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதால், தற்கொலைக்கு முயன்றதாகக் கூறினார்.
“சமூக வலைதளமான முகநூல் மூலம் ஜனவரி 2017இல் ஜோ.ஸ்டாலின் எனக்குப் பழக்கமானார். இதில் ஜோ.ஸ்டாலின் என்பவர் விகடன் பத்திரிகை குழுமத்தில் நிருபராகப் பணியாற்றி வருவதாகத் தெரிவித்தார். அதன்பின் நானும் ஸ்டாலினும் முகநூல் மூலமாக நட்பாகப் பழகி வந்தோம். மே 2018ல் ஸ்டாலின் என்னைப் பார்ப்பதற்காக அண்ணாநகரில் உள்ள காபி டேக்கு வரச் சொன்னார். நாங்கள் இருவரும் சந்தித்தபோது, அவரது நடவடிக்கைகள் சரியாக இல்லை. அதனால், நான் அவருடன் வாட்ஸ் அப் மூலமாகப் பேசுவதைத் தவிர்த்து வந்தேன். ஆனா
ல், ஸ்டாலின் என்னை மீண்டும் நேரில் சந்திக்கப் பலமுறை கேட்டு வந்தார்.
அவரது செயல்கள் எனக்குப் பிடிக்காததால், நான் ஏதாவது காரணத்தைச் சொல்லி அவரைப் பார்ப்பதைத் தவிர்த்து வந்தேன். இந்த நிலையில் ஏப்ரல் 2017இல் எனக்கு முகநூல் மூலமாக அ.ப.ராசா என்பவர் ப்ரீலான்ஸ் பத்திரிகையாளராக இருப்பதாகச் சொல்லி அறிமுகமானார். அதன்பின் நானும் ராசாவும் நண்பர்களாகப் பழகி வந்தோம். அந்த நம்பிக்கையில், நான் எனது வாழ்க்கையில் நடந்த கஷ்டமான சம்பவங்களை அவரிடம் கூறினேன். அவர் எனக்கு ஆறுதலாகப் பேசியது எனக்குப் பிடித்திருந்தது” என்று லோரா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
2018 மே மாதம் மெரினா கடற்கரையில் அ.ப.ராசா தனது காதலைத் தெரிவித்ததாகவும், அவர் திருமணமானவர் என்பதால் தான் மறுத்ததாகவும், அவர் லிவ் இன் முறையில் சேர்ந்து வாழ வற்புறுத்தியதாகவும் தனது புகாரில் லோரா கூறியுள்ளார். இதன்பின், பலமுறை தனது வீட்டிற்கு வந்ததாகவும், அவருடன் தான் நட்புடன் பழகியதாகவும் தெரிவித்துள்ளார். ஒருமுறை தன்னிடம் அ.ப.ராசா பாலியல் ரீதியாக அத்துமீறியதாகவும், அப்போதும் அவர் தன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கவில்லை என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், வாட்ஸ் அப்பில் ஸ்டாலினும் ராசாவும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, அவரிடம் விளக்கம் கேட்டுள்ளார் லோரா. அப்போது, இருவரும் 10 ஆண்டு கால நண்பர்கள் என்று தனக்குத் தெரியவந்ததாகக் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஸ்டாலின் அடிக்கடி தன்னிடம் பழக முயற்சி செய்ததாகவும், அவரைக் கண்டிக்குமாறு ராசாவிடம் கூறியதாகவும், அதன் தொடர்ச்சியாகத் திடீரென்று ஸ்டாலின் தனக்கு மிரட்டல் விடுக்கத் தொடங்கியதாகவும் புகாரில் லோரா தெரிவித்துள்ளார். “நீ இனிமே என்னைப் பற்றி யாருக்காவது சொன்னா, உன்னைப் பற்றி கேவலமாக உன் தந்தை மற்றும் உறவினர்களுக்குத் தெரிவிப்பேன் என்றும், உன் கல்லூரிக்கு வந்து அவமானப்படுத்துவேன் என்றும், உன்னோட குரல்வளையை அறுத்துவிடுவேன் என்றும் என்னை மிரட்டினார். மேலும், தான் ஒரு க்ரைம் ரிப்போர்ட்டர் என்றும் தனக்குப் பல பெரும்புள்ளிகள் தெரியும் என்றும், என்னை எதுவும் செய்ய முடியாது என்றும் மிரட்டினார். எனவே நான் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகித் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துக்குத் தள்ளப்பட்டேன்” என்று லோரா காவல் துறையினரிடம் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட திருமங்கலம் காவல் துறையினர், பத்திரிகையாளர்கள் ஸ்டாலின் மற்றும் அ.ப.ராசாவை உடனடியாகக் கைது செய்தனர். இவர்கள் மீது எட்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 15 நாட்கள் பிணையில் வெளிவர இயலாத வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் (செப்டம்பர் 23) விகடன் குழுமத்திலிருந்து ஸ்டாலின் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: