செவ்வாய், 10 ஜூலை, 2018

பெண் பிறப்புறுப்புச் சிதைவை அனுமதிக்க முடியாது! உச்சநீதிமன்றம்

பெண் பிறப்புறுப்புச் சிதைவை அனுமதிக்க முடியாது!மின்னம்பலம் : சடங்கு என்ற பெயரில் பெண்ணின் பிறப்புறுப்பைத் தொட்டு வன்முறைக்கு உள்ளாக்குவதை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் நேற்று (ஜூலை 9) தெரிவித்துள்ளது.
போரா என்ற இஸ்லாமிய மதப் பிரிவைச் சேர்ந்த சமூகத்தில் பெண் உறுப்பைச் சிதைக்கும் சடங்கு வழக்கத்தில் உள்ளது. மதச் சடங்கு என்ற பெயரில் சிறுமியாக உள்ளபோதே பெண் உறுப்பைச் சிதைக்கும் வழக்கம் சில சமூகங்களில் நடைமுறையில் உள்ளது. இது பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையாகும். இந்த நடைமுறையை வழக்கத்திலிருந்து நீக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சுனிதா திகார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது.

இதுகுறித்து மத்திய அரசு கருத்து தெரிவிக்க உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது. மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் இந்த வழக்கில் ஆஜரானார். ஆண்களுக்கு சுன்னத் எனப்படும் உறுப்பின் மேல்தோலை நீக்கம் செய்யும் மதச் சடங்கு செய்வதில் சில நன்மைகள் இருக்கின்றன. இது ஆண்களுக்கு ஹெச்ஐவி பரவுவதைத் தடுக்கும். ஆனால், பெண்களுக்கு அவ்வாறு இல்லை. இது பல பாதிப்புகளை ஏற்படுத்தும். பெண்ணுக்குப் பிறப்புறுப்பு சிதைக்கப்படுவதால், பிறப்புறுப்பு மற்றும் கருப்பையில் தொற்று உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நடைமுறை அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் 27 ஆப்பிரிக்கா நாடுகளில் குற்றமாகக் கருதப்படுகிறது. அதனால், இந்த நடைமுறைக்கு அங்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதம் மற்றும் மத சடங்குகளின் அடிப்படை உரிமை என்பது பொது சுகாதாரம் மற்றும் அறநெறியைச் சார்ந்துள்ளது. தற்போதுள்ள சட்டத்தின்படி, பெண் பிறப்புறுப்பு சிதைவு செய்வோருக்குக் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க முடியும் என தெரிவித்தார்.
ஒரு பெண்ணின் உறுப்பைத் தொடுவது என்பது குற்றமாகும். ஒரு பெண்ணின் உடலை மதச் சடங்குகளுக்கு ஏன் உட்படுத்த வேண்டும்?. சிறு வயதிலேயே பெண் உறுப்புச் சிதைவு என்பது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றச் செயல் என நீதிபதிகள் கூறினர். இந்த நடைமுறையை நீக்கும் கோரிக்கைக்கு ஆதரவளித்த நீதிபதிகள், இந்த வழக்கு மீதான விரிவான விசாரணையை ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்

கருத்துகள் இல்லை: