வியாழன், 12 ஜூலை, 2018

தனியார் நிலத்தைப் பாதுகாக்க செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு!’’ – தணிக்கை அறிக்கை அதிர்ச்சி

``தனியார் நிலத்தைப் பாதுகாக்க செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு!’’ - தணிக்கை அறிக்கை அதிர்ச்சிvikatan - ஜெ.அன்பரசன்</;எஸ்.ஏ.எம். பரக்கத் அலி<: 2015-="" b="">:   2014 -ம் ஆண்டு சென்னையில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதற்கு மனித தவறே காரணம்’ எனக் கண்டறிந்திருக்கிறது இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை. அந்த அறிக்கையில் சொன்ன விஷயங்கள் என்ன?
2015-ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கடும் மழையால் ஏரிகள் நிரம்பி, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 289 பேர் பலியானார்கள். 23.25 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. அனைத்து வகை போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன. அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு பெருமளவு சேதம் ஏற்பட்டு, சென்னை மாநகரமே பலநாள்களுக்கு முடங்கிப்போனது.
இந்த வெள்ளம் ஏற்படுத்திய தாக்கம், அரசு செய்திருக்க வேண்டிய ஏற்பாடுகளில் ஏற்பட்ட தோல்வியை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்தப் பேரிடர் தவிர்த்திருக்கக்கூடியதா என்பதை மதிப்பீடு செய்ய முயன்றது இந்திய தணிக்கைத்துறை. நீர்நிலைகளின் பாதுகாப்பு, மழைநீரின் ஓட்டத்தைத் தடுக்கும் ஆக்கிரமிப்புகள், வெள்ள மேலாண்மை, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றை மதிப்பீடு செய்தது.

சென்னை வெள்ளம்
சட்டங்களையும் பெரும் திட்டங்களையும் பயன் இல்லாத வகையில் அமல்படுத்தியது, இயற்கையான நீர்நிலைகளைப் பாதித்து, அதன்மூலம் வெள்ளத்துக்கு வழிவகுத்தன. ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களைச் சீரமைத்து, அவற்றின் கொள்ளளவை உயர்த்துவது, நீர் வழிந்தோடுதலை மட்டுப்படுத்துதல், நீர்ப் பற்றாக்குறையுடைய மாநகரில் உயர்ந்துவரும் குடிநீர்த் தேவையை நிறைவு செய்தல் ஆகியவற்றுக்கானத் திட்டங்கள், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையைப் பலனற்ற முறையில் கையாண்டது, அரசின் பல துறைகள் மற்றும் முகமைகளிடையே ஒருங்கிணைப்பின்மை ஆகிய காரணங்களால் தோல்வியடைந்தன. கட்டுப்பாடற்ற ஆக்கிரமிப்புகள், வெள்ள நீரின் எளிதான ஓட்டத்தைத் தடுத்து, பல பகுதிகளை நீரில் மூழ்கடித்தன. நீர் வழிகளை மீட்டெடுப்பதற்கான வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் மற்றும் தீர்க்கப்படாத ஆக்கிரமிப்புப் பிரச்னைகளும் வெள்ளத்துக்குக் காரணம்.


தூர்வாருதல், சிறு வடிகால்களைத் தூய்மைப்படுத்துதல் போன்ற வழக்கமான பணிகள்கூட திட்டமிட்டபடி செய்து முடிக்கப்படவில்லை. மழைநீர் வடிகால் என்ற இன்றியமையாத உள்கட்டமைப்புக்கு, உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை. பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் பல பகுதிகளில் இல்லை. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முன் நடத்திச் செல்வதற்கான ஒரு முறை இல்லாததால் நிவாரண நடவடிக்கைகள் பாதிப்படைந்தன.
திட்டமிடல்
* வெள்ளத் தாழ் நிலங்கள் குறித்த சட்டமும் இயற்கையான நீர் வழிகளைப் பாதுகாக்க ஒரு நீர்க் கொள்கையும் தமிழகத்தில் இல்லை. பெரும் மழைகள் உருவாக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு வெள்ளம் பாதித்த பகுதிகளின் வரை படங்கள், அணைகளுக்கான அவசரக்கால செயல்திட்டம், முழுமையான பெருந்திட்டங்கள் ஆகியவை உருவாக்கப்படவில்லை.
* ‘நீர்வழிகளின் கரைகளிலிருந்து 15 மீட்டர் தொலைவுக்கு ஒரு இடைத்தாங்கு மண்டலத்தைப் பராமரிக்க வேண்டும்’ எனத் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் கட்டட விதிகளில் சொல்லப்பட்டிருந்தாலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சி.எம்.டி.ஏ) இரண்டாவது பெரும் திட்டம் நீர் வழிகளையொட்டி கட்டுமானங்களை முறைப்படுத்துவதற்காக வெள்ளத் தாழ் நிலங்களை வரையறை செய்ய முயலவில்லை. இதனால் வெள்ள நீரின் எளிதான ஓட்டத்தைத் தடுக்கும் வகையில், ஆறுகளின் கரைகளில் பெரிய கட்டடங்கள் உருவாகின.
சென்னை வெள்ளம்
* வேளாண்மை, திறந்தவெளி மற்றும் பொழுதுபோக்கு மண்டலங்களிலிருந்து நில பயன்பாட்டைப் பிற மண்டலங்களுக்கு மாற்றுவதன் மூலம் கட்டுமானங்களைத் தாராளமாக அனுமதித்தது சி.எம்.டி.ஏ (C.M.D.A). இதனால் கட்டடங்கள் நிறுவப்பட்டப் பகுதிகளில் மிகுந்த உயர்வு ஏற்பட்டு, அதன் காரணமாக மழைநீர் நிலத்துக்கு இறங்குவது குறைந்துபோனது. இப்படி அனுமதியற்ற கட்டடங்கள் நீர்நிலைகளைச் சுருக்கியதால், வெள்ளத்தின்போது பெருமளவு நீர் தேங்குவதற்கு வழிவகுத்தன.
நீர்நிலைகளின் மேலாண்மை 
* வெள்ளத் தடுப்புக்காக நியூக்ளியஸ் செல் பரிந்துரைத்தபடி செம்பரம்பாக்கம் ஏரிக்கு மேல்மடையில் இரண்டு புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கத் தவறியது, கொசஸ்தலை ஆற்றுக்கு குறுக்கே கூடுதல் நீர் சேமிப்பு செய்யும் பணியைச் சரியாகத் திட்டமிடாதது ஆகியவற்றால் நீர் சேகரிப்பு மற்றும் வெள்ள கட்டுப்பாடு நிறைவேறவில்லை.
* நீர்நிலைகளின் சீரமைப்பு மற்றும் பாதுகாப்புக்கான திட்டத்தைச் செயல்படுத்துவதில் இருந்த தாமதம் காரணமாக, ஏரிகள் பயன்படுத்தாமல் கைவிடப்பட்டு, அதனால் நீர்நிலைகளின் நீர் சேமிப்புக் கொள்ளளவு குறைந்தது.
ஆக்கிரமிப்புகள்
* குளங்கள், ஏரிகள் மற்றும் ஆற்றுப்படுகைகள் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பு, பெரு வெள்ளத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்தது. ஏரிகளை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாப்பதற்கு 2007-ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டபோதிலும் ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளின் சதவிகிதம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துகொண்டே வந்தது.
சென்னை பெருநகரப் பகுதியில் வடிகால் வசதி
* சென்னை பெருநகரப் பகுதியில் புதிய வடிகால்களை அமைக்கவும் இருக்கும் வாய்க்கால்களை வலுப்படுத்துவதற்கும் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்பட்ட எட்டுத் திட்டங்களை, ஆக்கிரமிப்புகள் மற்றும் பல்வேறு துறைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததால் முடிக்க இயலவில்லை. இதனால், பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.
* குறைவான நிதி ஒதுக்கம், மழைநீர் வடிகால்களின் வடிவமைப்பு சரியாக இல்லாதது, மழைநீர் வடிகால் பிணையமைப்பில் தொடர்ச்சி இல்லாமை ஆகியவற்றால் வெள்ளம் ஏற்பட்டது. மேலும், சென்னை மாநகராட்சி குறைந்த கொள்ளளவு உள்ள மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டதும் வெள்ளத்துக்குக் காரணம்.
* சென்னை பெருநகரப் பகுதியில் நீர்வழிகளை ஆண்டுதோறும் தூர் வாரும் பணிகள் 2014 மற்றும் 2015-ம் ஆண்டு பருவ மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு ஆரம்பிக்கப்படவில்லை. தூர்வாரும் பணிக்கு தமிழ்நாடு அரசு உரிய முக்கியத்துவத்தை அளிக்கவில்லை. பருவ மழைக்கு முன்பே நிதியை விடுவிக்க அக்கறை கொள்ளவில்லை. இதனால், ஒப்பு அளிக்கப்பட்ட பணிகளில் எதையும் பருவ மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு முடிக்க இயலவில்லை.
தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை
* பெரிய ஏரியான செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்துக்கு, நீர் வரத்து பற்றிய அறிவியல்பூர்வமான முன்னறிவிப்பு அமைப்பும் வெள்ளம் பற்றிய நிகழ்நிலை வெள்ள முன்னறிவிப்பு அமைப்பும் (Realtime flood forecast) இருக்கவில்லை. இது அணைப் பாதுகாப்பு நடைமுறைக்கான மத்திய நீர் ஆணையத்தின் விதிகள் மற்றும் நீர்த்தேக்க முறைப்படுத்துதலுக்கு இசைவானதாக இல்லை.
* செம்பரம்பாக்கம் ஏரிக்கு, அவசரகால செயல் திட்டம் இல்லாத நிலையில், நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறிய நீரின் அளவு, வரக்கூடிய அளவைவிட அதிகமாக இருந்ததால், அடையாற்றில் விடுவிக்கப்பட்ட நீரின் அளவு வரைமுறைப்படுத்தவில்லை. ஏரியில் நீர் முழு கொள்ளளவு மட்டத்துக்கு வைக்கப்படவில்லை. 2015 டிசம்பர் 1-ம் தேதி அன்று கரையை ஒட்டியப் பகுதியில் சட்டமுரணாக அனுமதிக்கப்பட்ட தனியார் நிலத்தை நீரில் மூழ்காமல் பாதுகாக்க விரும்பியதால், மொத்த கொள்ளளவான 3.645 TMC என்பதற்கெதிராக 3.481 TMC என்ற அளவு மட்டுமே நீர் இருப்பு வைக்கப்பட்டது.
* செம்பரம்பாக்கம் ஏரியில் கூடுதலாக 0.268 TMC நீரை சேமிக்கும் வாய்ப்பு இருந்ததைப் பார்க்கும்போது, நீர் வெளியேற்றத்தை 6 மணி நேரத்துக்கு 12,000 Cusec என்ற அளவில் வைத்திருந்திருக்க முடியும். ஆனால், இந்தக் காலத்தில் 20,960 Cusec முதல் 29,000 Cusec என்ற வீதத்தில் வெள்ளநீர் வெளியேற்றப்பட்டது. வெள்ளநீர் வெளியேற்றத்தைக் கூட்டாமல் இருந்திருந்தால் 0.266 TMC கூடுதல் அளவு நீரை நீர்த்தேக்கத்தில் வைத்திருக்க முடியும். அப்போதுகூட சேமிப்பின் அளவு ஏரியின் முழுக்கொள்ளளவை எட்டியிருக்காது.
சென்னை வெள்ளம்
* அணையிலிருந்து வெளியேறும் நீரின் அளவு வரக்கூடிய அளவைக்காட்டிலும் அதிகமாக இருந்தால், வெள்ள பேரிடர் மனிதரால் உருவாக்கப்பட்டதாக வகைப்படுத்தப்படலாம் என இந்திய அரசின் மத்திய நீர் ஆணையம் வெளியிட்ட அணை பாதுகாப்பு நடைமுறைகளில் கூறப்பட்டிருக்கிறது. 21 மணி நேரத்துக்கு வரத்தைவிட அதிகமாக 29,000 Cusec என்ற விகிதத்தில் நீரை வரைமுறையற்றபடி வெளியேற்றியதால் மனிதர் உருவாக்கிய வெள்ளப் பேரழிவு உண்டானது.
பேரிடர் மேலாண்மை
* தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம் 2013 நவம்பர் மாதம் அமைக்கப்பட்டதிலிருந்து அதன் ஆட்சிக்குழு ஒரு முறைகூட கூடவில்லை. மத்திய அரசு கூறிய நிதி தன்னாட்சியை, தமிழ்நாடு மாநிலப் பேரிடர் மேலாண்மை முகமை பெற்றிருக்கவில்லை.
முக்கிய பரிந்துரைகள்
* நீர்நிலைகளின் மீது கட்டுமானத்தின் தாக்கத்தை குறைப்பதற்காக மத்திய அரசு குறிப்பிட்ட வகையில், வெள்ள சமவெளி மண்டலம் பற்றிய சட்டத்தை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* நீர்நிலைகளை ஒட்டிய மேம்பாடுகளின் பாதிப்பை தடுக்கும் வகையிலான மேம்பாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவோர் எடுப்பதை உறுதி செய்யாமல், நீர்நிலைகளை ஒட்டிய மேம்பாடுகளை சி.எம்.டி.ஏ அனுமதிக்கக் கூடாது. நிபந்தனையின் அடிப்படையிலான அனுமதி வழங்கும் முறை இனி நிறுத்தப்பட வேண்டும்.
* நீர்வழிகளை ஒட்டியும் நீர்நிலைகளுக்கு உள்ளும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அனைத்து செயல்படுத்தும் துறைகள் இடையே ஒருங்கிணைப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
சென்னை வெள்ளம்
* மழைநீர் வடிகால்களின் நீர் கொண்டு செல்லும் கொள்ளளவின் வடிவமைப்புக்கும் பராமரிப்புக்கும் உரிய முக்கியத்துவம் அளித்து, மழைநீர் வடிகால் பிணையமைப்பின் விரிவாக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
* அணைகளுக்கான அவசரகால செயல் திட்டம் பணி முன்னுரிமை அடைப்படையில் முடிக்கப்பட வேண்டும்.
* பேரிடர் மேலாண்மைக்கான ஒரு செயல்பாடு நிறுவன கட்டமைப்பு மத்திய அரசு கூறியபடி நிதி தன்னாட்சியுடன் கூடிய வகையில் அரசு உருவாக்க வேண்டும்.
vikatan.com

கருத்துகள் இல்லை: