புதன், 11 ஜூலை, 2018

கொழும்பில் தமிழர் கட்சித் தலைவர் கிருஷ்ணா சுட்டுக்கொலை!

கொழும்பில் தமிழர் கட்சித் தலைவர் கிருஷ்ணா சுட்டுக்கொலை!விகடன் : இரா.மோகன்-இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் நலனுக்காக போராடி வந்த நவோதய மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான எஸ்.கே.கிருஷ்ணா கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நவோதய மக்கள் முன்னணி காரியாலயத்துக்கு முன்பாக திங்கள் கிழமை காலை 7.20 மணிக்கு கிருஷ்ணா (39) அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 1979-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி பிறந்த கிருஷ்ணா என்று அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன், தனது  கட்சி அலுவலகம் அருகே நின்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கிருஷ்ணா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். கொழும்பு கொட்டாஞ்சேனையில் வசித்துவரும் கிருஷ்ணப்பிள்ளை கிருபானந்தன், நவோதய மக்கள் முன்னணியின் தலைவராக உள்ளார் என்பதுடன், கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், சுயேச்சைக் குழுவில் போட்டியிட்டு மாநகர சபை உறுப்பினராக  வெற்றி பெற்றிருந்தார்.


நவோதயம் மக்கள் முன்னணியின் தலைவராக செயற்பட்டு வந்த கொழும்பு மாநகர சபை உறுப்பினரான கிருஷ்ணப்பிள்ளை கிருபானந்தன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்காக, அண்மைக்காலமாக போராடிவந்தவர் என்பதுடன், குறிப்பாக இவர் அரசியல் கைதியாக சிறை வைக்கப்பட்டுள்ள ஆனந்த சுதாகரனின் விடுதலைக்காக குரல் கொடுத்து வந்ததுள்ளார். மேலும், இறுதிப்போரின் போதும், போரின் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு உதவி செய்யும் வகையில், காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து விவரங்களை திரட்டும் பணியில் சமீப காலமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், கொழும்பில் கொல்லப்பட்ட கிருஷ்ணாவின் உடலுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட கிருஷ்ணாவின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: