திங்கள், 9 ஜூலை, 2018

தமிழகத்திற்கு 39 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு!

தமிழகத்திற்கு 39 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு!
மின்னமம்பலம் :கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி வருவதால், தமிழ்நாட்டிற்கு வரும் காவிரியாற்றில், வினாடிக்கு 39 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைகள் நிரம்பி வருகின்றன.
கபினி அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 2,284 அடி. தற்போது அணை 2,283 அடியை எட்டியிருக்கிறது. அணை நிரம்ப இன்னும் ஒரு அடி மட்டுமே இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. இதனால், அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதைப்போன்று, குடகு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கே.ஆர்.எஸ். அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடி. தற்போது 110 அடியை தாண்டி நீர்மட்டம் உள்ளது. கனமழை தொடர்ந்து வருவதால், இந்த அணையும் விரைவில் முழு கொள்ளளவை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் கபிலா ஆற்றின் வழியாக காவிரியில் கலந்து தமிழ்நாட்டுக்கு வரும். கே.ஆர்.எஸ். அணையில் திறந்து விடப்படும் தண்ணீரும் நேரடியாக தமிழகத்திற்கு வரும்.
இதனால், கபினி அணையில் இருந்து 35 ஆயிரம் கன அடி தண்ணீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 4 ஆயிரம் கன அடி தண்ணீரும் என வினாடிக்கு மொத்தம் 39 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு பிறகு தென்மேற்கு பருவமழை காலத்தில் கே.ஆர்.எஸ். அணை நிரம்புகிறது.

கருத்துகள் இல்லை: