வியாழன், 12 ஜூலை, 2018

முட்டை ஊழல் 6 நிறுவன டெண்டர்கள் நிராகரிப்பு!

 6 நிறுவன டெண்டர்கள் நிராகரிப்பு!மின்னம்பலம்: சத்துணவு முட்டை டெண்டர் வழங்குவதில் இழபறி ஏற்பட்டதையடுத்து, எந்த நிறுவனத்துக்கும் டெண்டர் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு முட்டை மற்றும் சத்துமாவு சப்ளை செய்து வந்த கிறிஸ்டி ஃபிரைடுகிராம் என்ற நிறுவனத்தில் கடந்த ஐந்து நாள்களாக வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் அந்நிறுவனம் ரூ.1,350 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம், நாமக்கல் மாவட்டம் வட்டூரில் உள்ள உரிமையாளர் டி.எஸ்.குமாரசாமியின் வீடு, சென்னை, நாமக்கல், கோவை, பெங்களூர்உள்பட 70க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. ஐந்து நாட்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததில் கிறிஸ்டி நிறுவனம் ரூ.1,350 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், சொத்து விவரங்கள் அடங்கிய 100க்கும் மேற்பட்ட பென் டிரைவ்களும் சிக்கின. 100 போலி நிறுவனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

வரி ஏய்ப்பு தொடர்பாக, மத்திய அரசுக்கும், அமலாக்கத் துறைக்கும் வருமான வரித் துறையினர் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளனர். அதில், லஞ்சம் பெற்ற அமைச்சர்கள், அதிகாரிகள் குறித்த தகவல்களும் வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசின் சத்துணவுக்கான முட்டை டெண்டர் இன்று திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், தொடக்கப்பள்ளிகள்,நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் உள்ள சத்துணவுக் கூடங்களுக்கு ஓராண்டுக்கு முட்டை வழங்குவதற்குத் தகுதியான நிறுவனங்களிடம் இருந்து டெண்டர் கோரப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு ஓராண்டுக்கான முட்டை டெண்டரின் மதிப்பு சுமார் ரூ. 500 கோடி ஆகும். ஆண்டுக்கு 95 கோடி முட்டைகள் சப்ளை செய்ய வேண்டும். .
இந்த டெண்டருக்கான பரிசீலனை சென்னை தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முட்டைவழங்குவதற்கான டெண்டருக்கு ஆறு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
இதில், வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான கிறிஸ்டி குழுமத்துக்குச் சொந்தமான கிசான், சுவர்ணபூமி, நேச்சுரல்ஸ் ஆகிய 3 நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. ஸ்ரீதர் பாபு முட்டை விற்பனை நிறுவனம், மாருதி அக்ரோ, நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியனவும் இந்த டெண்டரில் பங்கேற்றுள்ளன.
டெண்டர் பரிசீலனைக்குப் பின் யாருக்கு டெண்டர் வழங்கப்படும் என்பது வழக்கமாக மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும். ஆனால், இன்னும் யாருக்கு டெண்டர் என்பது அறிவிக்கப்படவில்லை. கிறிஸ்டி நிறுவனத்தில் நடைபெற்ற வருமான வரித் துறை சோதனையினால் டெண்டர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்நிறுவனத்துக்கு டெண்டர் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எந்த நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டி நிறுவனம் உள்பட அனைத்து ஒப்பந்த புள்ளிகளும் நிராகரிப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: