ஞாயிறு, 8 ஜூலை, 2018

வன்புணர்வு குற்றவாளிக்கு 46 நாளில் தூக்கு..! போக்சோ சட்டத்தில் முதல் மரண தண்டனை

முதல் மரண தண்டனை vikatan :-muthukrishnan- காஷ்மீரில் கடந்த ஏப்ரல் மாதத்தில், 8 வயது சிறுமி வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம், உன்னாவ் பகுதியில் இளம்பெண் வன்புணர்வு, அவரது தந்தை போலீஸ் நிலையத்தில் மரணம் மற்றும் பல்வேறு பகுதிகளில் சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் என அடுத்தடுத்த நடந்தது, நாடு முழுவதும் மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
எனவே, சிறுமிகள் மற்றும் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். சிறுமிகள் வன்புணர்வு விவகாரம் உச்சநீதிமன்றம் சென்றது. இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வக்கீல், ''12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை வன்புணர்வு செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனே எடுக்கும்'' என்று தெரிவித்தார். இதையடுத்து மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக இறங்கியது.

இதற்கிடையே, வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த ஏப்ரலில் 20-ம் தேதி நாடு திரும்பிய பிரதமர் மோடி, மத்திய அமைச்சரவையை உடனடியாக கூட்டினார். அதன்படி மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து மந்திரிகளும் கலந்து கொண்டனர். இதில் சிறுமிகள் கற்பழிப்பு சம்பவத்தில் சிறுவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் (போக்சோ) தண்டனையை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.  இந்த சட்டத்தின் கீழ், அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில், மத்தியபிரதேசத்தில் சாகர் மாவட்டத்தில் மே 21-ஆம் தேதி பக்ரியா பட்டீல் (வயது 40) என்பவர் 9-வது சிறுமியை வன்புணர்வு செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில், மூன்று நாளில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 25 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக இறுதிகட்ட விசாரணை நடந்தது. அதன்பிறகு, நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. வன்புணர்வு செய்த பட்டீலுக்கு மரணதண்டனை விதித்தார் கூடுதல் செஷன்ஸ்  நீதிபதி சுதன்சூ சக்சேனா. ``போக்சோ சட்டம் வந்த பிறகு வன்புணர்வு வழக்கை 46 நாளில் விசாரித்து முடித்து தண்டனை பெற்று கொடுக்கப்பட்ட முதல் வழக்கு இது" என அரசு வழக்கறிஞர் ராவத் கூறினார்.

கருத்துகள் இல்லை: