புதன், 19 ஜூலை, 2017

மாயாவதியின் பதவி விலகல் கடிதம் ஏற்கப்படாது! சட்ட சிக்கல்?

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உத்திரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி நேற்று ஜூலை 18 ஆம் தேதி மாநிலங்களவையில் தனக்கு முழுமையாக பேச வாய்ப்பளிக்கவில்லை என்ற கோபத்தில், ‘’நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என்று சொல்லி ஆக்ரோஷமாக வெளியேறினார். சொன்னபடியே தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து மாநிலங்களவை தலைவருக்கு கடிதம் அனுப்பினார். மாயாவதி பதவி விலகியதன் மூலம் தலித்துகளின் தாக்குதலைப் பற்றி மக்கள் மன்றத்தில் விவாதிக்க பெரும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டார் என்று தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். மாயாவதியை தலித் உரிமைகளை வென்றெடுக்கும் சாம்பியன் என்று இந்தி பத்திரிகைகள் புகழ்ந்துரைத்தன. இந்நிலையில் இன்று ஜூலை 19 ஆம் தேதி காலை, மாயாவதியின் ராஜினாமா கடிதம் ஏற்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏன் என்று விசாரித்தபோது,

‘’நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறவர் தன் பதவியை ராஜினாமா செய்தால்… அந்த கடிதத்தில் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்பதை மட்டும்தான் குறிப்பிட வேண்டும். ஆனால் மாயாவதியோ தனது 3 பக்க கடிதத்தில் தான் பேச ஆரம்பித்தபோது என்ன நடந்தது என்பதில் ஆரம்பித்து விரிவாக விளக்கியிருக்கிறார். எனவே நாடாளுமன்ற விதிமுறைகளின்படி இந்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட முடியாது என்ற நிலையே உள்ளது. ராஜினாமா ஏற்கப்பட்டால், மாயாவதியின் குற்றசாட்டுகளை மாநிலங்களவைத் தலைவர் ஏற்றுக் கொண்டதாக அர்த்தமாகிவிடும்’’ என்கிறார்கள்.
மாயாவதியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வரும் 2018 மார்ச் வரை உள்ளது. ஒருவேளை ராஜினாமா ஏற்கப்பட்டால்… அந்த இடத்துக்கு உத்திரப்பிரதேசத்தில் இருந்து பாஜக எம்பி. ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: