வியாழன், 20 ஜூலை, 2017

கமலஹாசன் : நீட் ,டெங்கு பிரச்சனைகளை தீர்க்க முடியாத அதிமுக அரசு பதவி விலகட்டும்!

shankar. சென்னை: இதுவரை பிரச்சினைகளைப் பேசாமல், பொத்தாம் பொதுவாக அரசைச் சாடி வந்த கமல் ஹாஸன் இப்போது மக்கள் பிரச்சினைகளைப் பற்றி ட்விட்டரில் பேச ஆரம்பித்துள்ளார்.
இப்போது தமிழக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது நீட் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை, விவசாயம் பொய்த்துப் போன அவலம், ஹைட்ரோ கார்பன், மீத்தே இந்தப் பிரச்சினைகளுக்காக மக்கள் போராடினாலும், ஒரு தனித்துவம் மிகுந்த தலைமை இல்லாததால் அந்தப் போராட்டங்களுக்கு பலன் கிடைக்காமல் போகிறது.

இந்த நிலையில் கமல் ஹாஸன் ட்விட்டரில் அரசியல் பேச ஆரம்பித்தார். தமிழக அரசுக்கு எதிராக பொத்தாம் பொதுவாக ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார் கமல். அரசின் அமைச்சர்கள் கமலுக்கு எதிராக களமிறங்கி, ஆதாரம் காட்டுங்க என்று கேட்டதும், கமல் எந்த ஆதாரமும் தரவில்லை. மாறாக ஆதாரங்களைத் திரட்டி அரசுக்கு அனுப்புங்கள் என்று தன் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
அடுத்து இன்று நீட் தேர்வின் கொடுமை, டெங்கு காய்ச்சலைத் தடுக்க முடியாதது என பிரச்சினைகளைக் கையிலெடுத்து, இந்தப் பிரச்சினகளைத் தீர்க்க முடியாத தமிழக அரசு விலகிக் கொள்ளட்டும் என ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மக்கள் பிரச்சினைகளை தொடர்ந்து கமல் பேசப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது. அடுத்து நெடுவாசல், கதிராமங்கலம், விவசாயிகள் பிரச்சினைகளை கமல் பேசப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது.
பொதுவாகவே மாலை வேளைகளில்தான் கமலின் அரசியல் ட்விட்டுகள் பறக்கின்றன.
நாளை மாலை எந்த அஸ்திரத்தை ஏவப் போகிறாரோ? tamiloneindia

கருத்துகள் இல்லை: