சனி, 22 ஜூலை, 2017

கதிராமங்கலம் : ஆதரவு திரட்டிய மாணவர் கைது!

கதிராமங்கலம் : ஆதரவு திரட்டிய மாணவர் கைது!
மின்னம்பலம் :கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டிய அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் நேற்று முன்தினம்(ஜூலை,20) கைது செய்யப்பட்டார்.
தஞ்சை நெடுவாசல் மற்றும் புதுக்கோட்டை கதிராமங்கலம் ஆகிய இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கதிரா மங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கதிராமங்கலத்தில் போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டியது. நாளுக்கு நாள் ஆதரவு தெரிவித்து மற்ற இடங்களில் போராட்டம் அதிகரிப்பதால் போலீஸார் முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டிய ‘தமிழ் தேசிய பேரியக்கம்’ என்ற அமைப்பில் தீவிர உறுப்பினராக செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் ஆ.குபேரன் (32) நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
ஆ.குபேரன் தனது முகநூல் பக்கத்தில், ‘பாயும் குண்டர் சட்டங்கள்.. ஓங்கும் குண்டாந்தடிகள்..
எதேச்சார இந்திய அரசின் அரசவன்முறைக்கு எதிராக அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று 20.7.2017 வியாழன் களமிறங்குகின்றனர். அனைத்துத் துறை மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் .. அணிதிரள்வோம். அநீதிக்கு எதிராக!!
கதிராமங்கலம் போலீஸ் முற்றுகையை உடனே திரும்ப பெறு. ஓ.என்.ஜீ.சி யை உடனடியாக வெளியேற்று.

பேராசிரியர் த.செயராமன், விடுதலைச்சுடர் உள்ளிட்ட கைதுசெய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவித்து பொய்வழக்குகளை திரும்பப் பெறு.
சுற்றுச்சூழல் கனிமவளங்களை காக்கும் மாணவர் போராட்டங்களை, மக்கள் திரள் போராட்டங்களை தீவிரவாதசெயல்போல சித்தரிக்காதே..
தமிழகத்தில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டத்தையும் அனுமதிக்க கூடாது.
இன்று 20.7.2017 காலை 10 மணிக்கு பூமாகோயில் அருகே திரள்வோம்.
அவசியம் வாருங்கள்..
Annamalai_university students StopONGC SaveTamilnadu’ எனப் பதிவிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, மாணவர்களைப் போராட தூண்டியதாக போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் , ‘அரசியல் சட்ட பிரிவு 19 அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் அளிக்கிறது. மக்கள் ஆயுதங்கள் இல்லாமல் அமைதியாகக் கூடவும் அனுமதிக்கிறது. ஆனால் தமிழக அரசு எங்களது உரிமையைப் பறிக்கிறது. இதைக் கண்டிக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 13ஆம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு சேலம் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் நோட்டீஸ் வினியோகம் செய்த சேலம் மாணவி வளர்மதி கைது செய்யப்பட்டார். அவர் மீது பல வழக்குகள் உள்ளதால் குண்டர் சட்டம் பாய்ந்தது.ஏற்கனவே, இலங்கைத் தமிழர்களுக்காக மெரினா கடற்கரையில் நினைவேந்தல் கூட்டம் நடத்த முயன்ற மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: