வியாழன், 2 மார்ச், 2017

தாமிர பரணி உபரி நீரை கோக் பெப்சி கம்பனிகள் பயன்படுத்த (அ) நீதிமன்றம் அனுமதி!

Sundarrajan.Mullai? தாமிரபரணி ஆற்றிலிருந்து “தனியார் குளிர்பான” நிறுவனங்கள் தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கியிருக்கும் தீர்ப்பு மக்கள் விரோத தீர்ப்பே ஆகும். தாமிரபரணியில் ஓடும் உபரி நீரை அந்த நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக அறிகிறோம். இந்தியாவின் “நீராதார துறை ” (central water commission) தெளிவாக சொல்லியுள்ளது, இந்தியாவில் ஓடும் எந்த நதியிலும் உபரிநீர் கிடையாது என்றும் பிரம்மபுத்திராவில் மட்டும் சிறிது உபரி நீர் இருப்பதாக சொல்லுகிறது அந்த ஆய்வு அறிக்கை.
ஒரு உண்மையென்னவெனில் தாமிரபரணி ஆற்றில் நீர்மானிகளே (water guage) கிடையாது, அதனால் எந்த இடத்தில் ஓடும் நீரை வைத்து நீதிமன்றம் உபரி நீர் என்று சொல்லுகிறார்கள் என்று தெரியவில்லை. அப்படியே உபரி என்று ஒன்று இருந்தால் கூட (ஒரு வாதத்திற்கு வைத்துக்கொள்ளுவோம்) அதை எப்படி ஒரு தனியார் நிறுவனம் எடுக்க முடியும்?

நீர் என்பது அடிப்படை வளம், ஒரு விற்பனை பண்டம் அல்ல, இந்த உலகத்தில் உள்ள அத்தனை உயிர்களுக்கும் சொந்தமான அடிப்படை வளத்தை, ஒரு நிறுவனம் எப்படி காசுக்கு விற்க முடியும், நாம் எப்படி காசு கொடுத்து வாங்க முடியும்? அதுவும் அந்த நிறுவனத்தால் உற்பத்தி செய்ய முடியாத பொருள் அது எப்படி “உற்பத்தி செய்யும்” நிறுவனம் ஆகும்?
கடந்த 140 ஆண்டு காலமாக காணாத வறட்சியை தமிழகம் இப்போது சந்தித்துக்கொண்டிருக்கிறது, மாநிலம் முழுவதும் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்ப்பட்டுள்ளதை பல்வேறு தரவுகள் நமக்கு தெரிவிக்கின்றன, தமிழகத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்க்கொலை செய்துள்ளார்கள் என்று செய்திகளை நாம் பார்த்துக்கொண்டு இருக்கிறோம், இவ்வளவும் தங்கள் கண் முன்னால் நிகழ்ந்துகொண்டிருப்பதை பார்த்தும் நீதிபதிகள் இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை வழங்குகிறார்கள் ,என்றால், இவர்கள் எந்தமாதிரியான ஒரு மனநிலையில் இருக்க வேண்டும்?
ஹிரோஷிமா நகரத்தின் மீது உலகின் முதல் அணு குண்டு வீசியவனின் மனநிலைக்கு இந்த நீதிபதிகளின் மனநிலைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கமுடியாது.thetimestamil

கருத்துகள் இல்லை: