திங்கள், 27 பிப்ரவரி, 2017

உ.பி தேர்தல் : இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு!


மின்னம்பலம் :உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் கடந்த பிப்ரவரி 11ஆம் துவங்கி வரும் மார்ச் 8ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஏற்கனவே, நான்கு கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்று 52 தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்தியாவின் மிக பெரிய மாநிலம் என்பதால் உத்தரப்பிரதேச தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஆளும் கட்சியான சமாஜ்வாதி மிகவும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல், இழந்த செல்வாக்கை மீட்க பகுஜன் சமாஜ் மற்றும் பாஜக கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஒவ்வெரு கட்ட தேர்தல் பிரச்சாரங்களும் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே முடிந்த நான்கு கட்ட வாக்குப்பதிவுகளில் கணிசமான வாக்குள் பதிவாகி இருப்பதால். இன்று நடைபெறும் வாக்குப்பதிவிலும் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவின் விபரங்கள்
முதல் கட்டம் - 64%
இரண்டாம் கட்டம் - 66%
மூன்றாம் கட்டம் - 61.16%
நான்காம் கட்டம் - 61%
வேட்பாளர்கள் விவரம்
இன்று நடைபெறும் 52 தொகுதிகளில், 612 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில், 168 பேர் கோடீஸ்வரர்கள். கோடீஸ்வர வேட்பாளர்களில், அதிகபட்சமாக, பகுஜன் சமாஜ் சார்பில், 43 பேர் போட்டியிடுகின்றனர். பாஜக, சார்பில், 38 பேரும், சமாஜ்வாதி சார்பில், 32 பேரும் கோடீஸ்வர வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
கிரிமினல் பின்னணி உடைய வேட்பாளர்கள்
வேட்பாளர்களின் பின்னணி குறித்த விபரங்களை, டில்லியைச் சேர்ந்த ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில், 52 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில், 117 பேர் கிரிமினல் பின்னணி உடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும், 96 பேர் கொடூர குற்றங்கள் செய்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. குற்ற பின்னணி வேட்பாளர்களில், பகுஜன் சமாஜ் சார்பில், 23 பேரும், பாஜக, சார்பில் 21 பேரும் போட்டியிடுகின்றனர்.

கருத்துகள் இல்லை: