திங்கள், 27 பிப்ரவரி, 2017

பொன்னையன் : ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரணை வேண்டும் .. போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை தாக்கி இருக்கிறார்கள்


ஜெயலலிதவை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பாக போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அவரை தாக்கியுள்ளனர் என்றும், ஜெயலலிதா சாவு மர்மம் குறித்து விசாரணை கமி‌ஷன் அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வீட்டில் நேற்று அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, ஆதரவாளர்களிடம் பேசிய பொன்னையன், "அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 73 நாட்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை பார்க்க எங்களைப் போன்ற முன்னணி நிர்வாகிகளை அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு கடுமையான தொற்று நோய் ஏற்பட்டுள்ளதால் யாரும் பார்க்க கூடாது என்றார்கள். முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை கூட வார்டுக்குள் அனுதிக்கவில்லை.
மைத்ரேயன் டாக்டராக இருந்தாலும் அவரையும் அனுமதிக்கவில்லை.
மருத்துவமனையில் ஜெயலலிதாவுடன் இருந்த ஒரே நபர் சசிகலா மட்டும்தான். அவருக்கு ஏன் தொற்றுநோய் வரவில்லை?. ஜெயலலிதா மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே, அவரை போயஸ்கார்டன் வீட்டில் தாக்கியுள்ளனர். இதில்தான் அவர் மயக்கம் அடைந்து பாதி உயிருடன் அப்பல்லோ கொண்டு வரப்பட்டுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் நிறைய வி‌ஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளன. சசிகலாவுக்கும், அப்பல்லோ மருத்துவமனைக்கும் ஏதோ உடன்படிக்கை உள்ளது. அதனால் தான் முன்னுக்குபின் முரணான தகவல்களை வெளியிட்டனர். எனவே ஜெயலலிதா சாவு மர்மம் குறித்து விசாரணை கமி‌ஷன் அமைத்து விசாரிக்க வேண்டும்" என்றார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: