செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா சிறுபான்மையினர்கள் ? என்ன செய்ய வேண்டும் பெரும்பான்மை இனம்…

k
கார்ல் மாக்ஸ் கணபதி
Karl Max Ganapathy  :நண்பர்களுடனான நேற்றைய உரையாடல் பிரம்மாண்ட ‘ஆதியோகி’ சிலையில் தொடங்கி, மோடி, எடப்பாடி பழனிசாமி வழியாகப் பயணித்து ‘வந்தேறி மாட்டின்’ முகநூல் பக்கத்தில் புர்காவைக் கிண்டலடித்து அவர்கள் போட்ட மீம்ஸின் கமெண்ட்டில் போய்க் கொந்தளிக்கும் இஸ்லாமிய நண்பர்களின் செயலில் வந்து முடிந்தது. என்னுடன் உரையாடுகிற, ஹிந்துத்துவதை உயர்த்திப் பிடிக்காத ஹிந்து நண்பர்கள் என்னிடம் பலமுறை இதைக் கேட்டிருக்கிறார்கள். ‘வந்தேறி மாடு’ பற்றிய விவகாரத்திலும் இந்த விஷயம் உரையாடலுக்குள் நுழைந்தது. அதாவது, மாற்று மதத்தைக் கிண்டலடிக்கிறபோது அதனுடன் இணைந்துகொள்கிற இஸ்லாமியர்கள், அவர்களிடம் உள்ள பெண்ணடிமைத்தனம் குறித்தோ, உடைக்கட்டுப்பாடு குறித்தோ விமர்சனம் செய்கிறபோது இவ்வளவு தீவிரமாக மல்லுக்கட்டுகிறார்களே ஏன்…? எதற்காக அவர்கள் இவ்வளவு பதட்டமடைகிறார்கள்…? என்பது ஒரு நண்பரின் கேள்வி. அவர் ஒன்றும் இந்து மத வெறியர் அல்ல. சமூக ஊடகங்களில் புழங்கும் எல்லாருக்கும் அவர் சொல்ல வருவது என்ன என்பது தெளிவாகப் புரியும். எங்களுக்குள் நடந்த அந்த உரையாடலின் ஒரு பகுதியைத் தொகுத்து இங்கு வைக்கிறேன்.

முதலில் இந்த ‘பிரம்மாண்ட ஆதியோகி சிலை’ அதற்கு ‘மோடியின் வருகை’ என்கிற விஷயத்தைப் பார்ப்போம். இந்திய சூழலில் இந்து மதம் என்பதே ஒரு இஸ்லாமியனின் பார்வையில் பிரம்மாண்டமானது. ‘பிரம்மாண்டம்’ என்பதன் பொருள் என்ன என்பது இங்கு முக்கியமானது. ‘பிரம்மாண்டம்’ என்பது ஒருவகையில் ‘அதிகாரத்தின் திரண்ட வடிவம்’. வெற்றியின் குறியீடு. உங்களின் முன்னால் எழுப்பப்படும் மிகப் பெரும் திரை அது. அதைதாண்டி இருக்கிற ஒன்றை உங்களது காட்சிக்கு எட்டாத அளவில் அது மறைக்கிறது என்பது அதன் பொருள். உங்களது பரந்த எல்லையின் மீது அதுவொரு குறுக்கீட்டை நிகழ்த்துகிறது.
வெள்ளியங்கிரி மலையின் மீது தன்னை சூப்பர் இம்போஸ் செய்துகொள்வதில் இருக்கிறது ஆதியோகியின் ஆகிருதி. அந்த வகையில் ‘பிரம்மாண்டம்’ என்கிற ஒரு கருதுகோள் உங்களுடன் பொருதுகிறது.
ஆனால் நீங்கள், பொறுதத் தலைபடும் முன்பே உங்களது தோல்வியை அது முன்னறிவிக்கிறது. எந்த பிரம்மாண்டத்தின் தத்துவ இருப்பும் அது அறிவித்துக்கொள்ளும் வெற்றிப் பிரகனடத்தில்தான் நிலைகொண்டிருக்கிறது. ஆக, பெரும்பான்மையை உயர்த்திப் பிடிக்கும் ஒரு தரப்புக்கு அதுவொரு எக்காளம். அந்த வகையில் ஒரு சிறுபான்மையினனின் மனதில் அது விளைவிப்பது ஒருவகைப் பதட்டம்.
இதில் பதறுவதற்கு என்ன இருக்கிறது என்று நீங்கள் குழம்பினால், இதை ஏற்றுக்கொள்வதில் உங்களுக்கு தயக்கம் இருந்தால், இதை இப்படிப் பார்க்கலாம். உதாரணத்துக்கு உலகத்திலயே மிகப்பெரும் மசூதி ஒன்றை இஸ்லாமியர்கள் இமயமலை அடிவாரத்தில் நிறுவுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதை ஒரு இந்துவின் மனம் எவ்வாறு எதிர்கொள்ளும்? கொண்டாட்டமாகவா, அசூசையாகவா அல்லது துணுக்குறுமா…? இதற்கு நேர்மையாக பதில் சொல்ல முயன்றால், ஆமாம்… எங்கோ ஒரு இடத்தில் அது பெரும்பான்மை மக்களிடம் ஒரு ஒவ்வாமையைக் கொண்டுவரும், பதட்டமான ஒரு சிந்தனையைத் தோற்றுவிக்கும் என்பதாகத்தான் இருக்கும்.
இது ஏன்? நமது சூழலில் இந்த ஒவ்வாமையின் பிறப்பிடம் தான், இஸ்லாம் உள்ளிட்ட சிறுபான்மை மதங்களின், மற்றைய இனக்குழுக்களின் பதட்டம் தொடங்குகிற இடம்.
எப்படி ஒரு ஆதிக்க சாதிச் சூழலில் ஒரு தலித்தின் இடம் நெருக்குதலுக்கு உட்பட்டதோ அதே போல இந்தியச் சூழலில் ஒரு இஸ்லாமியனின் இருப்பு என்பது எப்போதும் நெருக்குதலுக்கு உட்பட்டது.
இதன் பொருள் பெரும்பான்மை இந்துக்கள் அவர்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதல்ல; அவர்கள் ஒரு முற்றுகையில் இருக்கிறார்கள் என்று பீதியூட்டுவதல்ல. எந்த பெரும்பான்மைச் சூழலிலும், ஒரு சிறுபான்மை கொள்ளும் தத்தளிப்பு அது.
இதை இனம், மொழி, பாலினம் போன்ற எந்த சிறுபான்மை அலகுகளுடனும் பொருத்திப் பார்த்து நாம் புரிந்துகொள்ளலாம்.
இஸ்லாமியர்கள் செறிவுடன் இருக்கிற இடங்களில் புழங்குகிற சிறுபான்மை இந்துக்களை உள்ளடக்கியும் இதைப் புரிந்துகொள்ளலாம்.
ஆக, மதம் என்று வருகிறபோது சிறுபான்மையினரின் இந்த ‘உளவியல் தகிப்பை’ பெரும்பான்மை சமூகம் அங்கீகரித்து அரவணைத்துக்கொள்ளாத வரை எந்த ஒரு சிறுபான்மையினனும் தனது ‘insecurity’ மனநிலையை விட்டு வெளியேறாமல் பதட்டமடைந்துகொண்டேதான் இருப்பான்.

இந்த பதட்டம் வினைபடும் இடங்களில் முக்கியமானது தனது பலவீனங்களைக் கூட அது மறைத்துக்கொள்ள முயலும் எத்தனம். அவர்களது மதப் பழக்க வழக்கங்கள் என்று வருகிறபோது மிகவும் ‘defensive mode’ க்கு போவதன் அடிப்படை இதுதான்.
இதை நாம் கனிவுடன் பார்க்கவேண்டிய அவசியம் இருக்கிறது. இப்படி நான் சொல்வதன் பொருள் அவை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை என்றோ, அதைக் காணாது கடந்துவிடவேண்டும் என்றோ அல்ல. இந்த விஷயங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டேதான் அதைப் பேச முடியும் என்பதே நான் குறிப்பிடுவது.
சிறுபான்மை சமூகத்துடன் வெளிப்படையான உரையாடலுக்குத் தயாராகும் பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த முற்போக்காளன் வரித்துக்கொள்ள வேண்டிய அடிப்படைகளில் முக்கியமானது இந்த புரிதல். அது பெரியாருக்கு இருந்தது. அம்பேத்கருக்கு இருந்தது.

இந்த சிறுபான்மை உளவியல் அடிப்படைதான் அமெரிக்காவில் ட்ரம்புக்கு எதிராக கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறது. அங்கு பாரில் சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு ‘இந்திய இந்து’ அந்த நாட்டில் கைவிடப்பட்ட சிறுபான்மையின் பிரதிநிதி.
 ‘அவனை இஸ்லாமியன் என்ற நினைத்து சுட்டுவிட்டேன்’ என்ற கொலைகாரனின் வாக்குமூலம் ஒரு இஸ்லாமியனை நோக்கி சொல்வது என்ன என்பதில் இருக்கிறது இத்தகைய பதட்டங்களைப் புரிந்துகொள்வதன் தொடக்கம். அந்த சுயவிமர்சனத்தில் இருந்துதான் நமது அரசியல் பார்வையை நாம் கட்டமைத்துக்கொள்ளவேண்டும்.

பெரும்பான்மை என்ற அளவில் நமக்கு இருக்கும் சொகுசு என்ன, நம்முடன் சக பயணியாக இருக்கும் ‘மற்றவனுக்கு’ அது இருக்கிறதா என்ற கேள்வியை நமக்குள்ளேயே கேட்டுக்கொண்டு விடையைத் தேடுவதுதான் ஒரே வழி. நாம் பிரம்மாண்டம் என்று ஒன்றை உயர்த்திப் பிடிக்கும் ஒவ்வொரு முறையும் அது எத்தனை நியாயமானது என்றாலும் புனிதமானது என்றாலும், ஸ்தூலமான எந்த வன்முறையும் இல்லாமல் அது சிறுபான்மையை அச்சமூட்டவே செய்யும்.
இதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் இங்கு உரையாடல் சாத்தியமில்லை. ஏனெனில் இதுவொரு முன் நிபந்தனை. நிறைய வைத்திருப்பவன்தான் கூடுதலாக விட்டுத்தரவேண்டும். இது குடும்பத்திற்கு மாத்திரம் அல்ல சமூகத்திற்கும் பொருந்தும்!  thetimestamil.com

கருத்துகள் இல்லை: