வெள்ளி, 16 டிசம்பர், 2016

விருதுநகர் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் போர்க்கொடி .. AIBEA, NCBE, AIBOC போன்ற வங்கி சங்கங்கள் மௌனம்

பெரும் சோதனையானக் காலக்கட்டத்தில் வங்கி ஊழியர்கள் இருக்கிறார்கள்.
அரசும், ரிசர்வ் வங்கியும் பாரபட்சமாக செயல்படுகின்றன. Axis, ICICI, HDFC போன்ற தனியார் வங்கிகளுக்கு தேவைக்கும் அதிகமாய் புதிய ருபாய் நோட்டுகள் வழங்கப்படுகின்றன. அதே நேரம் மிக அதிக அளவில் கிளைகள் கொண்ட, கிராமப்புறங்களிலும் சேவை செய்கிற பொதுத்துறை வங்கிகளுக்கு மிகக் குறைவாகவே பணம் கொடுக்கப்படுகிறது. வாரத்துக்கு ருபாய் 24000 என்று அரசு நிர்ணயித் தொகையையும் வழங்க முடியாமல் ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கும், கோபத்துக்கும் ஆளாகிக் கொண்டு இருக்கிறார்கள்.
தனியார் வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட பணத்தில், தேசமெங்கும் இதுவரை 400 கோடிக்கும் மேலே பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. பத்திரிக்கைகளில் அவை செய்திகளாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன. ஆயிரத்துக்கும், இரண்டாயிரத்துக்கும் பல மணி நேரங்கள் காத்திருக்கும் மக்கள் இதனால் அனைத்து வங்கி ஊழியர்கள் மீதும் கோபம் கொள்கின்றனர்.
அதே வேளையில், பொதுத்துறை வங்கிகளின் மீது இருந்த நம்பகத்தன்மை சிதைகிறது. தேவையான பணம் கிடைப்பதால் தனியார் வங்கிகளை நோக்கி மக்கள் செல்ல ஆரம்பிக்கின்றனர். பல ஆண்டுகளாய் நேசித்து, உழைத்து, சிறுகச் சிறுகச் சேர்த்த மக்களின் அன்பும், ஆதரவும், உறவும் கண் முன்னால் நொறுங்குகிறது.

இதற்குப் பின்னரும், வங்கி அரங்கத்தில் மிகப்பெரும் சங்கங்களாய் இருக்கின்ற AIBEA, NCBE, AIBOC போன்ற சங்கங்கள் வாயை மூடிக்கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருப்பது வேதனையளிக்கிறது. அனைத்து வங்கி ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்களும் ஒன்று சேர்ந்து, மக்களுக்கு ஆதரவாகவும் பொதுத்துறையை பாதுகாக்கவும் போராடும் என்று நம்பிக்கை கரைந்து கொண்டு இருக்கிறது.
இனியும் யாரையும் எதிர்பார்க்காமல், எங்கள் பாண்டியன் கிராம வங்கியில் உள்ள ஊழியர் சங்கமும், அலுவலர் சங்கங்களும் ஒன்றிணைந்து போராடுவது என தீர்மானித்திருக்கின்றன. தலைமையலுவலகம் இயங்கும், விருதுநகரில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊழியர்களையும், அலுவலர்களையும் திரட்டி உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டு இருக்கிறோம்.
இந்தத் தீ எங்கும் பரவும் என்ற நம்பிக்கையில் முகநூல் பதிவு  மாதவ ராஜ்

கருத்துகள் இல்லை: