சனி, 6 ஆகஸ்ட், 2016

ஜி.ராமக்கிருஷ்ணன்; கபாலி திரைப்படமும் இயக்குநர் மீதான விமர்சனமும்…

theekkathir.in :ஒரு திரைப்படத்தின் வெற்றியை பொதுவாக இரண்டு அளவுகோல்களில் பொருத்திப் பார்க்கின்றனர். முதலாவது அந்த
படத்தின் வசூல், இரண்டாவது அந்தப் படத்தின் கலை, இலக்கிய, அழகியல் அம்சங்களில் காணப்படும் நேர்த்தி. பெரும்பகுதி கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குள் சென்றுவிட்ட இன்றைய திரைப்படத் துறையில் – கதை முதல் வினியோகம் வரையில் கார்ப்பரேட் வியாபாரமே ஆதிக்கம் செய்கிறது. அது பல்வேறு அம்சங்களில், படைப்பாளனை பாதிக்கிறது. வாழ்க்கையின் யதார்த்தங்களை ஒருவர் திரைக்கதையாக வடித்தாலும் தயாரிப்பாளர்கள் கிடைக்கமாட்டார்கள். படமெடுக்கப்பட்டாலும் தியேட்டர்கள் கிடைக்காது. இப்படி எத்தனையோ பிரச்சனைகள். ஒரு படத்தைப் பற்றி விமர்சிக்கும்போது இந்தப் பின்னணியையும் இணைத்தே பார்க்க வேண்டும்.
Pa Ranjithமலேசியாவுக்கு பிழைக்கச் சென்ற தமிழக தொழிலாளர்கள், பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே. அவர்களின் உழைப்பு – அந்த நாட்டின் வளர்ச்சியில் பங்கு செலுத்தியிருக்கிறது. அவர்களின் உரிமைப் போராட்டத்தின் பின்னணியில் கபாலி உருவாகிறார். பின்னர் ஒரு வன்முறைக் கும்பலின் தலைவராக இயங்குகிறார். ரஜினி பேசும் வசனங்களில், ஒடுக்கப்பட்டோர் குரல் ஒலிக்கிறது. சில வசனங்கள் உடை அரசியலையும், சம வேலைக்கு சம ஊதியம், மக்களுக்கு அதிகாரம் குறித்தும் பேசுகின்றன. இவை மிகக் குறைவான வசனங்களே என்ற போதிலும் அவை புறக்கணிக்கக் கூடியவை அல்ல என்பதையே இந்த படத்திற்கான எதிர்வினைகள் உணர்த்துகின்றன.
கபாலி என்ற திரைப்படத்தில் நடிக்க ரஜினி எடுத்த முடிவு பாராட்டப்பட வேண்டியதாகும். வழக்கமான ரஜினி படத்தை விட கபாலி திரைப்படம் சிறப்பானதொன்று. ரஜினியின் நடிப்புத் திறனையும், பிற பாத்திரங்களின் நடிப்பையும் வெளிக் கொண்டுவந்திருக்கிறது. இந்தப் படத்தில், ரஜினியின் மகளாக, தத்துப் பிள்ளையாக, பள்ளியை நிர்வகிக்கும் பாத்திமாவாக வந்திருக்கும் பெண் பாத்திரங்களும் நுட்பமான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது, இதுவரையிலான ரஜினி படங்களில் காணப்படாத ஒன்று.
25 ஆண்டுகள் ரஜினிக்காக பித்துப் பிடித்து காத்திருந்தார் அவரின் மனைவி என்பதைத் தவிர – மற்ற சித்தரிப்புகள், பொதுவான பிற்போக்கு சித்தரிப்புகளாக இல்லை. இந்த திரைப்படத்தில் உழைத்திருக்கும் கலைஞர்கள், வணிக ரீதியில் அடுத்த கட்டத்தை எட்டியிருப்பதும், அதன் சமூகப் பொருளாதார விளைவுகளும் நாம் அறிவோம்.
ஒரு திரைப்படத்தின் கதை, உருவாக்கத்தில் பயன்படுத்தப்படும் உத்திகள் பற்றிய சினிமா விமர்சனங்கள் கலைஞனுக்கு அவசியமானவை. ஆனால், கபாலி திரைப்படத்தின் மீதான விமர்சனங்களில் ரஞ்சித் என்ற இயக்குனரை மையப்படுத்தி, அவரின் அடையாளத்தையும், அரசியலையும் குறி வைத்து – ஏராளமான விமர்சனங்கள் வீசப்படுகின்றன. இதே ரஜினி நடித்து மேட்டுக்குடி அரசியலை முன்வைத்த போது இத்தகைய எதிர்வினைகள் வராதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
rajini separate
ஒவ்வொரு படமும் ஒரு அரசியல் செயல்பாடுதான். எல்லா விமர்சனங்களும் அதன் அரசியல் எதிர்வினைதான். இருப்பினும், படைப்பாளனின் அடையாளத்தை மையப்படுத்திய விமர்சனங்களும், முக்கிய ஊடகங்களே அத்தகைய விமர்சனங்களை முன்வைப்பதும் – கபாலி படத்திற்கு திரைப்படம் என்பதையும் தாண்டி முக்கியத்துவத்தையும் வழங்கியிருக்கின்றன.
அதற்கு இயக்குநர் ரஞ்சித் சில ஊடக விவாதங்களில் பதில் கொடுத்திருக்கிறார். ‘எனக்கு பிரச்சாரத்தில் நம்பிக்கையில்லை. உரையாடல் நடக்க வேண்டும். ஒடுக்குவோருக்கும், ஒடுக்கப்படுவோருக்கும் இடையிலான உரையாடலை வலியுறுத்துகிறேன். கலை என்பதும் ஒரு அரசியல்தான். என் படங்கள் உரையாடலை மேற்கொள்ள தொடர்ந்து முயலும். இனி வரும் படங்களிலும் என் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும்’ என்ற அவரின் தீர்க்கமான பதில்கள் பலராலும் பாராட்டப்பட்டன.
ரஞ்சித், மிகச் சரியாக குறிப்பிட்டதைப் போல் அம்பேத்கர்கள் ஒடுக்கும் சாதிகளில் பிறக்க வேண்டும். நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் விவசாயத் தொழிலாளர்களின் போராட்டத்தில் தலைமையேற்று, சாணிப்பால் சவுக்கடிக்கு முடிவு கட்டிய முன்னுதாரணத்தை உருவாக்கிய தோழர் பி.சீனிவாசராவ் பிறப்பால் தலித் அல்ல. ரஞ்சித் எதிர்பார்ப்பு சீனிவாசராவ் வடிவில் ஏற்கெனவே நடந்துள்ளது இனியும் தொடரும்.
சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான தத்துவார்த்த போராட்டத்தை வலுப்படுத்திய சிங்காரவேலர், பெரியார் வழியே வந்த ஒவ்வொரு தோழனும் தன்னை ஒரு அம்பேத்கராக, சாதி எதிர்ப்பாளராக, தீண்டாமை ஒழிப்பவராக, சகோதரத்துவத்தை வலுப்படுத்துவோராக முன்னிற்க வேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ரோஹித் வெமுலாவின் மரணத்தைக் குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் பேசியபோது “லால்சலாம், ஜெய்பீம், இன்குலாப் ஜிந்தாபாத்” என்ற முத்தாய்ப்பான முழக்கத்தோடு முடித்தார்.
இழப்பதற்கு ஏதுமற்றவர்களால்தான் ஒரு சமத்துவ உலகை உருவாக்க முடியும். அவர்களின் விடுதலையில்தான், ஏற்றதாழ்வுகளற்ற புதிய சமூகத்திற்கான சாத்தியம் உருவாகும்.
திரைப்படத்துறையில் கார்ப்பரேட் ஆதிக்கம் அதிகரித்திருக்கும் பின்னணியில், படைப்பாளர்களின் சுதந்திரம் எப்படி பாதுகாப்பாக இருக்கும்? தரமான சினிமா விமர்சனமும், ரசனையும்தான் அதற்கான பாதை வகுக்க முடியும். தரமான சினிமா ரசிகர்கள், எளிய மக்களின் வாழ்க்கையை பேசும் சினிமாக்களுக்கும் வணிக வெற்றியைக் கொடுக்கும் பார்வையாளர்கள்தான் ஒரே நம்பிக்கையாகும்.
ரஞ்சித் இயக்கிய முதல் படமான அட்டகத்தி, இன்றைய சென்னை வாழ் இளைஞர்களின் வாழ்க்கையைப் பேசியது. கானா பாடல், காதல், விரக்தி என்று எல்லாமே மிக நுணுக்கமாக பயன்படுத்தியிருந்ததுடன் – நல்ல இலக்கியத்தரமான படைப்பாக்கம் வெளிப்பட்டது. இரட்டை மலை சீனிவாசனின் வசனத்தோடு, ஒரு கல்விக்கூடத்தில் நாயகன் உழைப்பதாக முடிந்த மெட்ராஸ் திரைப்படம், இன்றைய அரசியல் சுவரெழுத்துக்களை மையப்படுத்தி, விறுவிறுப்பாகவும் அதே சமயம் மாற்றத்திற்கான அரசியல் எங்கிருந்து தொடங்க வேண்டும் என்று அழுத்தமாகப் பேசுவதாகவும் அமைந்தது. மெட்ராஸ் திரைப்படத்தின் காதல் காட்சிகளும் கூட, யதார்த்தத்தோடு இணைந்ததாக, நல்ல புரிதலுடன் காட்டப்பட்டன.
கபாலி திரைப்படம் – வணிகத்தையும் கணக்கில் கொண்டு இயக்கப்பட்டிருக்கிறது. அதன் திரைக்கதையில் அதற்கான சமரசங்கள் இருக்கின்றன. வணிகத்தில், கார்ப்பரேட் ஆதிக்கமே மேலோங்கியுள்ளது. இது திரையிடுகிற போது வெளிப்படுகிறது. ஆனால் அது கபாலி படத்தால் மட்டும் எழுந்த விளைவுகள் அல்ல. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு வியாபார உத்தியில் உச்சத்தை தொட்டார் என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக நாம் பார்க்கும் காட்சி தான் இது.
ரஞ்சித் உள்ளிட்டு தற்போது சினிமா படைப்புத் துறையில் உருவாகிவரும் புதிய தலைமுறையினர் நம்பிக்கையூட்டுகிறார்கள். அவர்களுக்கு நமது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
– ஜி. ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர் – சிபிஐ(எம்)

கருத்துகள் இல்லை: