சனி, 6 ஆகஸ்ட், 2016

சிறுவர்களை கூட கட்டாயப்படுத்தி பிரம்மசரியம் ஏற்க வைப்பதாக ஈஷா மைய முன்னாள் ஊழியர் புகார்


ஈஷா சம்கிருதி பள்ளியில் 14 வயது சிறுவர்களை கூட கட்டாயப்படுத்தி பிரம்மசரியம் ஏற்க வைப்பதாக ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய முன்னாள் நிர்வாகி ஒருவர் பல திடுக்கிடும் புகார்களை தெரிவித்துள்ளார்.>கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது மகள்களை மூளைச்சலவை செய்து துறவறம் மேற்கொள்ள வைத்திருப்பதாகவும், தனது மகள்களை மீட்டு தரும்படி  வடவள்ளி பகுதியை சேர்ந்த முன்னாள் பேராசிரியர் காமராஜ் என்பவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.இதை தொடர்ந்து ஈஷா யோகா மையம் விதிமுறைகளை மீறி கட்டிடம் எழுப்பியது, யானை வழித்தடங்களை மறித்தது, சட்ட விரோதமாக வெளிநாட்டினரை தங்க வைத்திருப்பது உள்ளிட்ட மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.


இந்நிலையில் ஈஷா யோகா மையத்தில் பொள்ளாச்சி பகுதியின் ஒருங்கிணைப்பாளராக 8 ஆண்டுகள் பணியாற்றிய செந்தில் என்பவர், அந்த மையத்தின் மீது பல திடுக்கிடும் புகார்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செந்தில், ஈஷா யோகா மையத்தில் ஏராளமானவர்களுக்கு மூளைச்சலவை செய்து பிரம்மசரியம் மேற்கொள்ள வைத்திருப்பதாக புகார் தெரிவித்தார். மேலும் ஈஷா சம்கிருதி பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுவர்களை கூட கட்டாயப்படுத்தி பிரம்மசரியம் ஏற்க வைப்பதாகவும், யாரையும் கட்டாயப்படுத்தியோ, மூளைச்சலவை செய்தோ பிரம்மசரியம் ஏற்க வைப்பதில்லை என யோகா மையத்தினர் கூறுவது முற்றிலும் பொய்யானது எனவும் தெரிவித்தார்.

;ஈஷா மையத்திற்கு வருபவர்களை தரம் பிரித்து யாரிடம் வேலை வாங்கலாம், யாரிடம் பணம் வசூலிக்கலாம், யாரை பிரம்மசரியம் ஏற்க வைக்கலாம் என்பதை திட்டமிட்டு அவர்களை பயன்படுத்தி கொள்வதே ஒருங்கிணைப்பாளர்களின் பணியாக இருப்பதாக அவர் கூறினார். ஈஷா யோகா மையத்தில் கட்டிட அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பதாகவும், ஈஷா சம்கிருதி பள்ளி எந்தவித அனுமதியும் இல்லாமல் இயங்கி வருவதாகவும் செந்தில் புகார் தெரிவித்தார்.

அங்கு உள்ள சாமியார்கள் உள்ளிட்டோரை 20 மணி நேரம் வரை வேலை வாங்குவதாகவும், அவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு மனச்சிதைவு ஏற்படுவதாகவும், அவர்களுக்கு கோவையில் உள்ள ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.>ஈஷா யோகா மையத்தில் சுவாமி ஏகாக்ரா உள்ளிட்ட பலர் மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பதாகவும், அவை மூடி மறைக்கப்படுவதோடு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும் சுவாமி ஏகாக்ரா மனநிலை சரியில்லாமல் தற்கொலை செய்ததாக அவரது பெற்றோர்களை யோகா மையத்தினர் சொல்ல வைத்ததாகவும் கூறிய அவர், மனநலம் சரியில்லாத ஒருவருக்கு எப்படி பிரம்மசரியம் ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

ஈஷா யோகா மையத்தில் சூரிய குளத்தில் மெர்குரி சிலை இருப்பதாகவும், மெர்குரியுடன் தண்ணீர் சேர்வதால் அங்கு குளிப்பவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும், பல பிரம்மசாரிகளுக்கு கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பேராசிரியர் காமராஜ் கூறியது போல போதைப்பொருட்கள் பயன்பாடுகள் அங்கு இருப்பதும், பிரம்மசாரிகளிடம் சொத்துக்களை எழுதி வாங்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் செந்தில் புகார் தெரிவித்தார்.

ஈஷா யோகா மையத்தின் மீது அங்கு பணியாற்றிய முன்னாள் நிர்வாகி ஒருவரே பல திடுக்கிடும் புகார்களை அடுக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  nakkheeran.in

கருத்துகள் இல்லை: