செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

கள் போதை பொருள் அல்ல.. நிதீஷ்குமார் அரசு அறிவிப்பு


‘கள் போதைப் பொருள் அல்ல’ என்று கூறி, கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக, பீகார் அமைச்சர் நேற்று தெரிவித்தார். இது தமிழகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என கள் இறக்கும் தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கள் இறக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கள் இறக்கும் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ‘தமிழகத்தில் மதுக் கலாச்சாரத்துக்கு தடைவிதித்து, கள் இறக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும்’ என்று கள் இறக்கும் தொழிலாளர்கள் தொடர்ச்சியான கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அரசு, கடந்த ஏப்ரல் மாதம் அதிரடியாக மதுவிலக்கை அமல்படுத்தியது. பீகார் மாநில அரசு மதுவிலக்கை அறிவிக்கும்போது, கள் விற்பனைக்கும் சேர்த்தே தடை விதித்தது. கள் விற்பனைக்குத் தடை விதித்ததற்கு, கூட்டணி கட்சியில் இருக்கும் லாலுபிரசாத் யாதவ், அப்போதே எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். மேலும், ‘கள்ளுக்கான தடையை நீக்க, நிதிஷ்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வெளிப்படையாக பேசி வந்தார்.
தற்போது, கள் விற்பனைக்கான தடைக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில அமைச்சர் அப்துல் ஜலீல் மஸ்தான் பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது. மேலும், கள் போதைப் பொருள் அல்ல’ என்றும் ‘உடலுக்கு நலன் தரும் பானம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  minnambalam.com

கருத்துகள் இல்லை: