ஞாயிறு, 31 ஜூலை, 2016

திருச்சி சிவாவுக்கும் தூத்துக்குடி சசிகலா புஷ்பகலாவுக்கும் இடையே என்னதான் நடக்கிறது?

திருச்சி என்.சிவா திமுக-வின் சிறந்த பேச்சாளர், சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் பெயர் பெற்றவர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு மிசா கொடுமைகளை அனுபவித்து தன்னை வளர்த்துக் கொண்ட சிவா, ‘முரசொலி’யில் எழுதிய கட்டுரைகள் அடர்த்தியானவை. அவரது பாராளுமன்ற உரைகளோ ஆழமான கருத்தாடல்களாக இருப்பவை. தமிழகப் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் ஒலித்த குரலும் அவருடையதுதான்.
தூத்துக்குடி மாவட்டம், முதலூர் அடுத்த அடையல் கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகலா புஷ்பா. இவரது கணவர் லிங்கேஸ்வர திலகன். 2011 சட்டசபை தேர்தலில் ராதாபுரம் தொகுதிக்கு அதிமுக வேட்பாளராக சசிகலா புஷ்பா அறிவிக்கப்பட்ட பின்னர், அந்தத் தொகுதி தேமுதிக-வுக்கு ஒதுக்கப்பட்டதால் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார். அதற்கு பலனாக, உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தலில் வெற்றி பெற்று மேயரானார். மேயராக இருந்தபோதே சர்ச்சைகள் ஏற்பட்டன. மேயராக இருந்த 2014ஆம் ஆண்டில், ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜ்யசபா எம்.பி-யானதும், கட்சியின் ராஜ்ய சபா கொறடாவாகவும் நியமிக்கப்பட்டார். கட்சியின் மகளிர் அணி செயலர் பதவியும் உடனடியாக வழங்கப்பட்டது. குறுகிய காலத்தில் அதிமுக தலைவர் ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்ற சசிகலா புஷ்பாவின் வாட்ஸ் அப் ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில் மகளிர் அணி பதவி பறிக்கப்பட்டது.

அதிலிருந்தே அவருக்கு போதாத காலம்தான்.
தமிழக அரசியல்களத்தில் அதிமுக-வும், திமுக-வும் எதிரும் புதிருமாக அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில், இந்த இருவரைச் சுற்றிலும் கடந்த பல மாதங்களாக சர்ச்சை வளையங்கள் சுற்றுகின்றன.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் உச்சகட்டமாக களைகட்டியபோது தமிழ் இணையப் பரப்பில் வலம் வந்தன அந்தப் படங்கள். அந்த படங்களுக்கு இணையவாசிகள் வைத்த தலைப்பு ‘அதிமுக, திமுக கூட்டணி’. டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சசிகலா புஷ்பாவும், திருச்சி சிவாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கசிந்து சர்ச்சைகளை உருவாக்கின. அதற்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் சசிகலா புஷ்பா ஒரு இளைஞருடன் கொஞ்சம் ஜாலியாக உரையாடிய ஆடியோ வெளியாகி சர்ச்சைகளை உருவாக்கியது. பின்னர் சில நாட்கள் கழித்து சசிகலா புஷ்பா தன் கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்தது. புஷ்பா கணவருடன் இருக்கும் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட்டு விட்டார்கள் என்று தகவல்கள் வெளியானாலும் கூட, இந்த புகைப்படங்கள் பற்றி சிவாவோ, புஷ்பாவோ பதில் எதுவும் பேசவில்லை. வாட்ஸ் அப் ஆடியோ பற்றி சசிகலா புஷ்பா கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. சரி, இதை கேள்வி எழுப்ப முடியுமா என்றால் அதுவும் சிக்கலான விஷயம்தான். கட்சியும் கொள்கையும் வெவ்வேறாக இருப்பதாலேயே இருவர் நெருக்கமாகப் பழகக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. இந்நிலையில், நேற்று டெல்லி விமான நிலையத்தில் பொது வெளியில் திருச்சி சிவாவை, அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா அறைந்த நிகழ்வு அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.
இந்த நிகழ்வை தனிப்பட்ட நிகழ்வு என ஒதுக்கி விட முடியாது. இருவருமே மக்கள் பிரதிநிதிகள். பொதுவெளியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற மாண்பைக் கடைப்பிடித்தாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது.
என்ன நடந்தது டெல்லி விமான நிலையத்தில்?
இந்த தாக்குதல் பற்றி அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா என்ன சொல்கிறார்… “முதல்வர் ஜெயலலிதா பற்றியும் அவருடைய ஆட்சி பற்றியும் யார் தவறாக பேசினாலும் என்னால் பொறுத்துக் கொள்ளமுடியாது. விமான நிலையத்துக்கு வந்த திருச்சி சிவா, பயண வேலைகளைப் பார்க்காமல் அங்கிருந்த செக்யூரிட்டி அதிகாரிகளிடம் அம்மாவைப் பற்றியும் அம்மாவின் ஆட்சி பற்றியும் தவறாக பேசினார். அதனால் அவரை நான்கு முறை கன்னத்தில் அறைந்தேன்” என்று கூறுகிறார்.
தன் மீதான இந்த தாக்குதல் பற்றி திருச்சி சிவா கூறுகையில், “சசிகலா புஷ்பா என்னை காரணம் இன்றி திடீரென தாக்கினார். என் சட்டையை பிடித்து இழுத்து ஒரே ஒருமுறை மட்டும் அறைந்தார். இதனால் எங்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. எதற்காக கைகலப்பில் ஈடுபட்டார் என புரியவில்லை” என்பதோடு நிறுத்திக் கொண்டார்.
என்ன நினைக்கிறது இரு தலைமைகளும்?
இந்தத் தாக்குதல் திமுக தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கட்சியின் மேலிடம் தொடங்கி, கீழ் மட்டம் வரை இதையே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த விவகாரம் பற்றி திமுக மேலிடம் வெளிப்படையாக பேச வேண்டாம் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தி உள்ளது. இது திருச்சி சிவாவின் தனிப்பட்ட விஷயம். இதை போட்டு கட்சியோடு குழப்பிக் கொள்ள வேண்டாம் என்பதுதான் தலைமையின் உத்தரவு.
அதிமுக தலைமையோ, ஜெயலலிதாவை விமர்சித்ததால்தான் சசிகலா புஷ்பா, திருச்சி சிவாவை தாக்கினாரா என்பதை உளவுத்துறையை விட்டு விசாரிக்கச் சொல்லியிருக்கிறது. அதன்படி உளவுத்துறை கொடுத்திருக்கும் தகவலில், ‘திருச்சி சிவாவும், சசிகலா புஷ்பாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். அப்படி பழகியபோது சசிகலா புஷ்பா, திருச்சி சிவாவுக்கு பணம் கொடுத்துள்ளார். நட்பு சுமூகமான போன நிலையில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில், இருவருக்கும் இடையில் மனக்கசப்பு உருவாகி பிரிந்துவிட்டனர். ஆனால், தான் கொடுத்த பணத்தைக் கேட்க சசிகலா புஷ்பா, திருச்சி சிவாவுக்கு தொலைபேசியபோது சசிகலாவின் அழைப்புகளை திருச்சி சிவா எடுக்கவில்லை. சிவாவுடனான நட்பும் முறிந்து, தனக்கு கட்சியிலும் கெட்ட பெயர் உருவாகி, தன்னுடைய பதவிகளும் பறிக்கப்பட்டு, ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் போய்விடுமோ என்ற அச்சத்திலும் பதற்றத்திலும் இருந்த சசிகலா புஷ்பா விமான நிலையத்தில் திருச்சி சிவாவைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு தாக்கி விட்டார்’ என்கிறது உளவுத்துறை அறிக்கை. இனி, அதிமுக தலைமை என்ன செய்யும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: