ஞாயிறு, 18 அக்டோபர், 2015

City of Joy அந்த சேரியில்...அழகான மனிதம்...வெடித்த ஒரு புரட்சி! Patrick Swayze, Om Puri and Shabana Azmi.

City of Joy ஒரு இளம் அமெரிக்க டாக்டருக்கு  ஆபரேஷன் தியேட்டரில் கிடைத்த ஒரு அதிர்ச்சி! ஒரு   சிறுவனுக்கு ஆபரேஷன் செய்தார் ஆனால் அவன் கண்முன்னேயே இறந்துவிட்டான். சோகம் தாங்க முடியாத அந்த டாக்டர் (Patrick Swayze) ஒரு ஆத்மீக தேடலை நோக்கி இந்தியா வருகிறார், அதுவும் கல்கத்தாவுக்கு.
அங்கே அவர் கண்டது சந்தித்தது.....ஆத்மீகம் தேடியவருக்கு கிடைத்தது ஏமாற்றம் ..துன்பம்... துரோகம்.. வறுமை.
அவரை சிந்திக்கவே விடாமல் விதி  கல்கத்தாவின் சேரியில் கொண்டு போய் சேர்த்துவிட்டது.
கையில் உள்ள காசையும்  பாஸ்போர்ட்டையும் பறித்துக்கொண்டு அடித்து நொறுக்கியது குண்டர் கூட்டம்.
பிகாரில் கந்துவட்டி காரரிடம் தனது நிலத்தை பறிகொடுத்துவிட்டு பஞ்சம் பிழைக்க வந்த ஹன்சாரியும் அவனது மனைவியும்  மட்டுமே கூக்குரல் கேட்டு ஓடி வந்தனர் நினைவு மயங்கி இருந்த டாக்டர் மக்சை தங்களது குடிசைக்கு தூக்கி சென்று ஒரு வெள்ளைக்கார நர்சிடம் Joan Bethel சேர்த்தனர். மனித வாழ்வின் அவலத்தை கண்டு அதை விட்டு விலகி விடஎண்ணியவருக்கு அது முடியவில்லை.அவரின் சேவை அங்கு மிகவும் தேவையாக இருந்தது. அதையும் விட அந்த மக்களின் வாழ்வோடு அவரை அறியாமலேயே அவர் கொஞ்சம் நெருங்கிவிட்டார்.
அந்த மக்கள் கொடூரமான முதலாளிகளினதும் மக்களை பற்றி கொஞ்சம் கூட கவனிக்காத அரசாங்கங்களின் பாராமுகத்தாலும் ஒரு பிராணிகள் போன்று அந்த சேரியில் வாழ்ந்தார்கள்.
அந்த அப்பாவி மக்களின் அன்றாட வாழ்வில் மெல்ல மெல்ல இவரின் பங்கு கூடி கொண்டே வந்தது.  பார்பதற்கு பயமூட்டும் அளவு உருக்குலைந்து போயுள்ள தொழு நோயாளர்களும் அதைவிட பயங்கரமான அந்த கொடூர தாதாவும்.... இதயம் பலவீனமாக உள்ளவர்களால் பார்க்கவே முடியாத அளவு கொடூர காட்சிகள்.

அந்த  சேரியில்  உள்ள ஒரே ஒரு  டாக்டர்  இவர் மட்டுமே.இவர் விரும்பினாலும் கூட ஓடி விட முடியாத மாதிரி சம்பவங்கள் அடுத்தடுத்து டாக்டர் மக்சை அந்த சேரிவாழ் மக்கள் கூட்டத்துடன் சேர்த்து விடுகிறது,
தன்னை காப்பாற்றிய அன்சாரி குடும்பத்தின் அன்பு ஒருபுறமும் துன்பத்தை பார்த்து தப்பி ஓடுவது கோழைத்தனம் என்று வேறு அந்த வெள்ளைக்கார நர்சின் சாடல் ஒருபுறமுமாக டாக்டரின் மனதை மாற்றி விடுகிறது.
அந்த சேரிக்கு ஒரு முற்போக்கான பலம்வாய்ந்த நண்பனாக டாக்டர் மக்ஸ் திரும்பி வருகிறார்.
அந்த சேரி மக்களுக்கு ஒரு புது  சக்தி கிடைப்பதால் தங்கள்  ஆதிக்கம் பறிபோய்விடும் என்று அந்த சேரியின் தாதாக்கள் எண்ண தொடங்கினர்.
குறிப்பாக அந்த ஹன்சாரி குடும்பத்தின் மிகபெரும் வில்லனாக  ரிக்ஷாக்களை வாடைக்கு விடும் முதலாளியின்  ரவுடி மகன்  உருவாகிறான்,
அடிமை நாய்களை போல அந்த மக்கள் இருக்கவேண்டும் என்று விரும்பும் சேரியின் தாதாக்களும் டாக்டரின் வருகை மிகபெரும் சவால் .
மெது மெதுவாக டாக்டர் அந்த சேரியில் பல முன்னேற்றங்களை செய்ய தொடங்குகிறார்.
முதலில் வைத்திய சாலை அடுத்து இரவு பாடசாலை...அடுத்து  எப்படி எப்படி முதலாளிகளின் அடிமை தலையில் இருந்து அவர்களை மீட்கலாம் என்று ஆலோசனைகள் கொடுத்து முயற்சிக்கிறார்.

இதுவரை இந்த City of Joy என்ற படத்தின் கதையை அதன் ஆழமான இலக்கிய அழகை கூறுவதாக எண்ணிக்கொண்டு  அந்த ஆனந்த நகர் என்கின்ற சேரியின் கதையை அல்லவா கூறி கொண்டு இருக்கிறேன்,
இதுதான் இந்த படத்தின் மகிமை.
இந்த படம் அப்படியே நம்மை அந்த சேரிக்குள்ளேயே தள்ளி விடுகிறது.
மனிதர்களை எப்படி கேவலமாகவே வைத்திருக்க வேண்டும் என்றும் டாக்டர் மக்சுக்கு வியாக்கியானம் கொடுப்பார் அங்கு உள்ள ஒரு ரிக்ஷா முதலாளி.

அங்குதான் டாக்டர் மக்ஸுக்குள் இருக்கும்  ஒரு போராட்டக்காரன் ஒரு முற்போக்குவாதி ஒரு மனிதாபிமானி எல்லாம் வெளிவருகிறான் .

அந்த அவலமான சேரியில் மறைந்திருக்கு அழகான மனிதத்தை கண்ட டாக்டர் அதில் இப்போ தனது வாழ்வுக்கு உரிய அர்த்தத்தையும் காண்கிறான் .
அந்த சேரிமக்கள் டாக்டரின் யோசனைக்கு சம்மதிக்கிறார்கள்.
இனி அடிமைகளாக இருக்க போவதில்லை என்று தங்கள் தலையை நிமிர்த்துகிரார்கள்.
போராட்டம் வெடிக்கிறது! ரிக்ஷா முதலாளியின் குண்டர்கள்  ஹன்சாரியையும் இதர  சேரி வாசிகளையும் அடித்து நொறுக்குகிறார்கள்.

சேரிமக்கள் எப்படி தலை நிமிர்கிறார்கள் ? என்னன்ன அநியாயம் எல்லாம் அவர்கள் மீது அவிழ்த்து விடப்படுகிறது?
எப்படி எப்படியெல்லாம் அந்த கொடுமைகளுக்கு ஆட்படுகிறார்கள்?
முடிவில் எப்படி அந்த அடிமைத்தனம் உடைத்து எறியப்படுகிறது?
எல்லாரும் வாழ்வில் நம்பிக்கையோடு வாழவேண்டும்...என்ற நம்பிக்கையை அந்த சேரிமக்களும் டாக்டரும்; ஏற்படுத்தி விடுகிறார்கள். cinepass.blogspot.com

கருத்துகள் இல்லை: