சனி, 24 அக்டோபர், 2015

கோவில் திருவிழாக்களில் தமிழினியின் அம்மா கடலை விற்று...வீடு தகர கொட்டகை....

Unbenanntஇது கிளிநொச்சியில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் உள்ள ஏழையின் வீடு அல்ல. கிளிநொச்சி பரந்தன் நகரத்தில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் சிவபுரம் கிராமத்தில் உள்ள சிவகாமியின் வீடு.
சிவசுப்பிரமணியம் சிவகாமி இவர் புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழினி ஆவார். மீள்குடியேற்றத்தின் போது அரசசார்பற்ற நிறுவனங்களால் ஒரு வருட காலத்திற்கு என அமைத்துக்கொடுக்கப்பட்ட தற்காலிக கொட்டில்கள் இவை. 2013 ஆம் ஆண்டு யூன் 26 ஆம் திகதி பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் வைத்து தாயாராகிய சின்னம்மா சிவசுப்பிரமணியத்திடம் ஓப்படைக்கப்பட்டார். அன்று முதல் இறக்கும் வரை கடந்த மூன்று வருடங்களாக தமிழினி இந்த கொட்டிலில்தான் வாழ்ந்திருக்கின்றார்… 2009 இற்கு முன் ஈழத்துப் பெண்களின் தலைமை பாத்திரமாக இருந்தவர் தமிழினி.

தமிழினி சிறையில் இருந்த போது எவரும் அவருக்காக அவரை சென்று பார்த்து தேவைகள் அறிந்து உதவி செய்யவில்லை. இரண்டு வழக்கறிஞர்கள் ஒரு தமிழ் வழக்கறிஞர் மற்றயது சிங்கள வழக்கறிஞர் இருவரும் ஆரம்பத்தில் தமிழினியின் வழக்காக பணம் கோரிய போதும் பின்னர் தமிழினி நாட்டுக்காக சேவை செய்யதவர் எனவே தாங்கள் அவருக்காக இதையாவது செய்ய வேண்டாமா என பணத்தை பெற்றுக்கொள்ளாமல் மறுத்துவிட்டமையும் குறிப்பிட வேண்டும். தமிழினிகாக வாதடிய சிங்கள வழக்கறிஞர் தமிழினிக்கு வழங்கிய சட்ட ஆலோசணைக்கு அமையவே புன்வாழ்வுக்கு செல்வதாக நீதி மன்றில் தெரிவித்து அவர் புனர்வாழ்வுக்கு சென்று விடுலையானார்.
தமிழினி விடுதலையாகி காலம் வடக்கு மாகாண சபை தேர்தல் காலம் என்பதனால் தமிழினியின் விடுதலை அனைவராலும் குறிப்பாக தமிழ் அரசியல் தரப்புக்களால் சந்தேக கண்ணோடு பார்க்கப்பட்டது. அவர் ஆளும் அரசியல் தரப்போடு சேர்ந்து தேர்தலில் போட்டியிடலாம் என பெரும்பாலும் சந்தேகித்தார்கள் விமர்சித்தார்கள். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
அதன் பின்னர் கடந்த 18 ஆம் திகதி வரை தமிழினியை எவரும் நினைத்தும் பார்க்கவில்லை. தமிழினி கொழும்பிலும்,பரந்தனிலும் என தனது வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றார். அவர் குடியிருக்கும் சிவபுரம் கிராமத்தில் தமிழினியின் கொட்டில் போன்றே பெரும்பாலும் எல்லோரதும் இருப்பிடங்களும் காணப்படுகிறது. குறித்த பிரதேசத்தின் காணிகள் மத்திய வகுப்புத்திட்ட காணிகள் என்பதனால் அவர்களுக்கு அரச உதவிகள், வீட்டுத்திட்டம் என்பன எவையும் பெற்றுக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது.
ஆனால் தமிழினியின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்காக பணியாற்றியிருந்திருந்தால் தமிழினியின் கொட்டில் வாழ்க்கைக்கு மட்டுமல்ல பல முன்னாள் போராகளின் கொட்டில் வாழ்ககைக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும். அது நடக்கவில்லை. தமிழினியின் இறுதி நிகழ்வின் போதே பலருக்கு பரந்தன் சிவபுரம் கிராமம் தெரிய வந்தது.
அங்கு மக்கள் படுகின்ற அவலம் தெரியவந்தது. இறந்த உடலுக்கு மலர் மாலை அணிவிப்பதிலும், இரங்கல் உரை ஆற்றுவதற்கும் காட்டிய ஆர்வத்தை இருக்கின்ற போது காட்ட வில்லை என்பதே எல்லோரதும் விமர்சனம்.
அவரது இறுதி நிகழ்வில் கலந்துகொண்டது உரை நிகழ்த்தியது விமர்சனத்திற்குரியது அன்று. ஆனால் இருக்கின்ற போது எவரும் திரும்பி பார்க்கவில்லை என்பதே அனைவரினதும் வருத்தத்திறகுரியது. தமிழினியின் இறுதி நிகழ்வை மண்டபத்தில் நடத்த வேண்டும் அதனை பெரியளவில் செய்ய வேண்டும் என்று பல பிரதிநிதிகள் தமிழினியின் குடும்பத்திடம் கோரியிருக்கின்றனர் ஆனால் அதனை அவரது சகோதரர்கள் மறுத்து விட்டார்கள்.
காரணம் புனர்வாழ்வுக்குப் பின் தமிழினி வாழ்ந்த வாழ்க்கை வெளியில் தெரிய வேண்டும் என்பதற்காகவே. ஒரு மிகப்பெரும் இயக்கத்தின் மகளீர் அரசியல் துறைப்பொறுப்பாளராக இருந்தவரின் நிலைமையே இவ்வாறு என்றால் புனர்வாழ்வுப்பெற்று வந்த ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளின் நிலைமைகளை எண்ணிப்பாருங்கள்.
இறந்த பின்பு ஓடோடி வந்து அவரோடு பழகியிருக்கின்றோம் அவரை சந்தித்திருக்கின்றோம் அவர் அப்படியானவர் இப்படியானவர் என்றெல்லம் பேசி செத்த வீட்டில் தங்களின் அரசியலை செய்கின்றவர்கள் இருக்கின்ற போது எதனையும் செய்யவில்லை என்பதே தமிழினியின் குடும்பத்தினரின் வேதனையாக இருக்கிறது.
இந்த வீடும் தமிழினியின் வாழ்க்கையும் இனியாவது பலரின் மனசாட்சிகளை தட்டியெழுப்புமா? அது பல ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வருமா? அல்லது இந்த செத்த வீட்டு அரசியல்தான் தொடரப் போகிறதா?
இதேவேளை கிளிநொச்சி கந்தசாமி கோவில் திருவிழாக்களில் கடந்த இரு வருடங்களாக தமிழினியின் அம்மா கச்சான் விற்று வாழ்க்கையை ஓட்டியதாக அங்கிருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது. ஜேவிபிநேயுஸ்.com

கருத்துகள் இல்லை: