திங்கள், 16 பிப்ரவரி, 2015

பச்சை தமிழகம் ! உதயகுமார் புதிய கட்சி (Green party டொலர் பாட்டி ? )

அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தை அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் வாழ்வாதார அழிப்பு, தொழில் இழப்பு, சுற்றுச்சூழல் வேரறுப்பு, வாழ்வுரிமை மறுப்பு போன்ற பிரச்சினைகளை சமாளிக்க சாதி, மதம், அரசியல் கடந்து எல்லோரையும் ஒருங்கிணைக்கும் வகையில் ஒரு இயக்கத்தை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக தொடங்கினோம். இந்த இயக்கத்தின் சார்பில் நாகர்கோவில், மதுரை, காஞ்சீபுரம், விழுப்புரம், சென்னை, கோவை ஆகிய இடங்களில் கூட்டம் நடத்தினோம். இந்த இயக்கத்திற்கு ‘பச்சைத்தமிழகம்’ என்று திருச்சியில் இன்று(நேற்று) நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பெயர் சூட்டி இருக்கிறோம். இது ஒரு அரசியல் இயக்கம். ஆனால் தேர்தலுக்கு ஆயத்தம் செய்கிற அரசியல் கட்சி அல்ல. இந்த இயக்கத்தில் எந்த அரசியல் கட்சியில் இருப்பவர்களும், எந்த இயக்கத்தில் இருப்பவர்களும், தங்களது அடையாளங்களை இழக்காமல் சேரலாம். ஆனால் பச்சைத்தமிழகம் இயக்கத்தின் கருத்துக்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அதிகார பரவல், பங்கேற்பு ஜனநாயகம், பெண் விடுதலை, இயற்கையை அழிக்காத வளம்குன்றா வளர்ச்சி முறை, இயற்கை வேளாண்மை, சிறு நடுத்தர தொழில், மரபு சார்ந்த மக்கள் அமைப்புகள் ஆகியவைகள்தான் இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

தமிழகத்தில் இன்று ஒரு மடைமாற்று தந்திரம் நடந்து கொண்டு இருக்கிறது. மக்களை குடிகாரர்களாக்கி கையறு நிலைக்கு தள்ளி அவர்களை கையேந்துபவர்களாக, இலவசங்களை கண்டு ஏமாறுபவர்களாக மாற்றி வருகிறார்கள். அதற்கு இந்த இயக்கம் முற்றுப்புள்ளி வைக்கும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இளைஞர் குழுக்கள் அமைத்து அவர்களை புத்தகம் வாசிக்க வைத்து பயிற்சி அளிக்க இருக்கிறோம். இதற்காக இந்த ஆண்டு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். maalaimalar.com

கருத்துகள் இல்லை: