ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

லிங்கா ஒரு பகற் கொள்ளை ! பில்டப் மோசடி விநியோகஸ்தர் தலையில் மிளகாய் !

விநியோகஸ்தர்களை பிச்சை எடுக்க வைக்கும் நிலைக்கு தள்ளிய ரஜினிகாந்த் 45 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட படத்தை 157 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டு, வெறும் 33 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாத இதயங்களை நினைத்து அதிர்ச்சியடைந்தோம்.
சென்னை,பிப்.14 (டி.என்.எஸ்) ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் தோல்விப்படமாக அமைந்த 'லிங்கா' படத்தினால், தாங்கள் பெரும் நஷ்ட்டம் அடைந்து விட்டதாகவும், அந்த நஷ்ட்டத்திற்கு இழப்பீடு தரவேண்டும் என்று, அப்படத்தை விநியோகம் செய்த விநியோகஸ்தர்கள் அப்படம் வெளியான நாள் முதல், தற்போது திரையரங்கை விட்டு அப்படம் வெளியேறிய நாள் வரையிலும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதே சமயம், லிங்கா தோல்வியடைந்ததற்கு விநியோகஸ்தர்கள் தான் காரணம் என்று, கூறிய தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், சரியான முறையில் விநியோகஸ்தர்கள் கேட்டிருந்தால், ஒழப்பீட்டை நாங்கள் கொடுத்திருப்போம், ஆனால் ,அவர்கள் அதைவிட்டுவிட்டு, ரஜினிகாந்தை அசிங்கப்படுத்தும் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கூறினார். மாஸ் திரைப்படங்கள் அத்தனையும் வெறும் பில்டப் மோசடியாலேயே ரசிகனின் பணத்தை கொள்ளை அடிக்கின்றன, வன்முறையும்  காமாந்திர கொடுமைகளும் நாட்டில் பெருகியதற்கு இந்த சினிமாக்கார கிரிமினல்கள்தான் காரணம் .


ரஜினிகாந்தை தவறாக பேசியிருந்தால் அதற்கு தாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக, விநியோகஸ்தர்களும் அறிவித்தார்கள். இத்தோடு இந்த பிரச்னைக்கு தீர்வு எட்டப்பட்டுவிட்டது, என்று நிம்மதி பெருமூச்சு விட்ட கோடம்பாக்கத்தை உலக சரித்திரத்தில் இடம்பெற செய்யும் அளவுக்கு 'லிங்கா' மற்றும் ரஜினிகாந்துக்கு எதிராக ஒரு அதிரடியான போராட்டத்தை விநியோகஸ்தர்கள் இன்று அறிவித்துள்ளார்கள்.

லிங்கா படத்தில் தயாரிப்பு தரப்பு பெற்ற பெரும் லாபத்தில் இருந்து தங்களுடைய நஷ்ட்டமான ரூ.33 கோடியை கேட்டதற்கு, வெறும் ரூ.3 கோடி மட்டுமே கொடுக்க முடியும் என்று திட்டவட்டமாக லிங்கா தயாரிப்பு தரப்பு கூறிவிட்டதாம். தங்களது சக்திக்கும் மீறி, ரஜினிகாந்த் என்ற மனிதரை நம்பி குரூட்டுத்தனமாக பல கோடிகளை, முதலீடு செய்து தற்போது நஷ்ட்டப்பட்டிருக்கும் தங்களுக்கு, ஏற்பட்ட நஷ்ட்டத் தொகையில் பாதியை கூட தர மறுக்கும் ரஜினிகாந்துக்கு எதிராக, விநியோகஸ்தர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளார்கள்.

உலக சினிமா வரலாற்றில், ஒரு திரைப்படத்தினால் ஏற்பட்ட நஷ்ட்டத்திற்காக பிச்சை எடுப்பது, தமிழ் சினிமாவில் தான் நடக்கிறது. ரஜினிகாந்தினால் எற்பட்ட இந்த சரித்திரத்தைப் பற்றி, இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில்  விநியோகஸ்தர்கள் கூறியதாவது:

 'லிங்கா' திரைப்படத்தைப் பொறுத்தவரை எங்களுக்குத் தெரிந்த ஒரே நபர் ரஜினிகாந்த் தான். அவரை நம்பித்தான் 'லிங்கா' படத்தை வாங்கினோம். பட புரமோஷனில் பேசிய ரஜினிகாந்த் படத்தைப் பற்றியும், கதையைப் பற்றியும் உயர்வாகப் பேசியதை அடுத்து, இந்தப் படத்தை வாங்க முடிவு செய்தோம். ஆனால், படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. எனவே, விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி இழப்பை ஈடுசெய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தும், சரியான பதில் இல்லாததால் கடந்த ஜனவரி 10-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருந்தோம். அதன்பிறகு எங்களை அழைத்த திருப்பூர் சுப்ரமணி, இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரஜினிகாந்த் விரும்புவதாகவும், கணக்குகளை ஒப்படைக்குமாறு கூறியதையடுத்து வரவு செலவு கணக்குகளை ஒப்படைத்தோம். விரைவில் நஷ்டத்தொகை வழங்கப்படும் என்று கூறியதையடுத்து, அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடாமல் அமைதி காத்தோம்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் எங்களை தொடர்பு கொண்ட ரஜினியின் நண்பர் திருப்பூர் சுப்ரமணி, தயாரிப்பாளர் 10 சதவீத நஷ்ட ஈடு தொகை மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்ததாக கூறினார். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

இரண்டு மாத காலமாக எந்தவித முடிவுமின்றி சென்று கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினையை முடித்து வைக்க ரஜினிகாந்த் முன்வராதது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

45 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட படத்தை 157 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டு, வெறும் 33 கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாத இதயங்களை நினைத்து அதிர்ச்சியடைந்தோம். மனமில்லாத இவர்களை மல்லுக்கட்ட, பணமில்லாத எங்களுக்கு வேறு வழி கொடுக்காமல் அடுத்தகட்ட போராட்டத்திற்கு எங்களை தள்ளியுள்ளனர்.

இதற்கு மேலும் ரஜினிகாந்த் தலையிட்டு இந்தப் பிரச்சினையை தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லாததால் திரையரங்க உரிமையாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க வகை செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மக்களை சந்தித்து உண்மையை விளக்கி 'மெகா பிச்சை' என்ற பெயரில் பிச்சை எடுக்கும் போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம்.

இந்தப் போராட்டம் போயஸ் கார்டனில் அமைந்துள்ள ரஜினிகாந்த் வீட்டு வாசலில் இருந்து துவக்கப்படும். பிரபல அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் முதல் பிச்சையை போட்டு போராட்டத்தை துவக்கி வைக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இனி மேல் ரஜினிகாந்த் நடித்த படத்தை வாங்கி திரையிட்டால் பிச்சை எடுக்கும் நிலைதான் ஏற்படும் என்பதை விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் தெரிவிக்கும் வண்ணமாகவும், ரஜினிகாந்த்தை நம்பினால் நடுத் தெருவில்தான் நிற்கவேண்டும் என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தும் விதமாகவும் இந்த போராட்டம் இருக்கும்.

இந்தப் போராட்டத்தில் விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் கையில் பதாகையும், திருவோடும் ஏந்தி பிச்சை எடுப்பார்கள். போராட்டத்தின் நோக்கம் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும்.

'லிங்கா' படத்தை திரையிட்ட திரையரங்குகளின் வாசலில் பிச்சை எடுக்கும் போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேனர்கள் கட்டி, அதன் அருகில் உண்டியல் வைக்கப்படும். இந்த போராட்டத்தின் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளார்கள்.  tamil.chennaionline.com/

கருத்துகள் இல்லை: