வியாழன், 19 பிப்ரவரி, 2015

வசந்த மாளிகை தயாரிப்பாளர் ராமா நாயுடு காலமானார்

பிரபல தமிழ், தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் ராமா நாயுடு (79) ஹைதராபாதில் புதன்கிழமை காலமானார்.
இவருக்கு மனைவி ராஜேஸ்வரி, மகன்கள் நடிகர் வெங்கடேஷ், சுரேஷ், மகள் லட்சுமி ஆகியோர் உள்ளனர். தெலுங்கு திரையுலகின் பிரபல இளம் நடிகர் ராணா இவரது பேரன் ஆவார்.
"வசந்தமாளிகை', "தனிக்காட்டு ராஜா' உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களைத் தயாரித்த இவர், சினிமா துறையில் ஆற்றிய சாதனைகளுக்காக தாதாசாஹேப் பால்கே விருது பெற்றவர்.
ராமா நாயுடு ஆந்திரத்தின் பிரகாசம் மாவட்டத்தில் கரம்சேடு என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். கலைத் துறையில் மிகுந்த ஆர்வம் காரணமாக கல்லூரி படிப்பை பாதியிலேயே கைவிட்டார். 1962 இல் சென்னைக்கு குடிபெயர்ந்தார்.
தனது நண்பர் ராஜேந்திர பிரசாத்துடன் இணைந்து தனது மகன் பெயரில் "சுரேஷ் புரொடெக்ஷன்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.
இதன் சார்பில் தயாரித்து வெளியிடப்பட்ட முதல் திரைப்படமான "ராமுடு பீமுடு' வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பிறகு, இந்நிறுவனம் சார்பில் தெலுங்கு, கன்னடம், தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட 13 மொழிகளில் பல திரைப்படங்கள் வெளியாகின. இவர் 150 படங்களுக்கு மேல் தயாரித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
24 இயக்குநர்கள், ஏராளமான நடிகர்கள், சில இசையமைப்பாளர்களை ராமா நாயுடு அறிமுகப்படுத்தியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2009-ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனையாளருக்கான தாதாசாஹேப் பால்கே விருது பெற்றார். 2012 இல் இவருக்கு மத்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கியது. ஒரு தேசிய விருது, 3 முறை பிலிம் பேர் விருது, 5 முறை "நந்தி விருதுகளைப் பெற்றுள்ளார்.
அவரது உடல் ஹைதராபாதில் உள்ள ராமா நாயுடு ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை நடைபெறும் என்று அவரது மகன் நடிகர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
ஆளுநர் ரோசய்யா இரங்கல்: தயாரிப்பாளர் ராமா நாயுடு மறைந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். தெலுங்கு திரைப்பட உலகம் சிறந்த மனிதரை இழந்துவிட்டது. எனக்கு மிகவும் நெருக்கமானவரான அவர், சிறந்த மனிதநேயத்துக்குச் சான்றாக விளங்கியவர்.
தனி நபராக அதிக திரைப்படங்களைத் தயாரித்ததற்காக கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளார்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார். dinamani.com

கருத்துகள் இல்லை: