செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

ஸ்ரீரங்கம் தமிழக பாஜக கணக்கே ஆரம்பிக்கல்லியே?

நடந்து முடிந்த ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக அபார வெற்றி பெற்று மீண்டும் ஒரு தேர்தல் வெற்றியை ருசித்துள்ளது.ஆனால் மத்தியில் ஆளும் கட்சியான பாஜக தமிழகத்தின் மிக முக்கிய ஆன்மீகத் தலமான ஸ்ரீரங்கம் தொகுதியில் தோற்று, மீண்டும் தனது தோல்வி கணக்கை கூட்டிக் கொண்டுள்ளது. 18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததால் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற  ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தியது தேர்தல் ஆணையம்.
தமிழகம் மட்டுமில்லாது இந்திய முழுக்கவும் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது ஜெயலலிதா பதவி இழந்து சிறைக்குச் சென்ற நிகழ்வு. கிட்டத்தட்ட தமிழக அரசு  முடங்கிப் போன நிலையை அடைந்தது என்றே கூறும் அளவிற்கு சொத்துக் குவிப்பு வழக்கின் கிளைமாக்ஸ் அமைந்து போனது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ. பதவியை இழந்த ஜெயலலிதா சிறைத் தண்டனை பெற்று, பின்னர் இடைவிடாத சட்டப் போராட்டத்தால் ஜாமீனில் வெளியே வந்தார். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்து, தற்போது அதன் மீதான வாதங்களும் விசாரணைகளும் நடந்து வருகிறது.
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பால் அதிமுக தனது அரசியல் ஸ்திரத் தன்மை, மக்கள் செல்வாக்கை இழந்துவிடும் என்று கூறிய பாஜக, 2ஜி ஊழல் வழக்கால் திமுகவும் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டதாகவும், எனவே தமிழகத்தில் அடுத்த மாற்று கட்சி தாங்கள்தான் என்றும், தமிழகத்தில் பா.ஜனதா வேகமாக வளர்ந்து வருவதாகவும் சொல்லி வந்தது. 
இதனால் இந்த இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறாவிட்டாலும் திமுக அளவுக்கோ அல்லது இரண்டாம் நிலைக்கோ வரும் அளவுக்காவது கணிசமான வாக்குகளை பெறும் என அக்கட்சியினர்  எதிர்பார்த்திருந்த நிலையில்,  வெறும் 5,015 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட்டை பறி கொடுத்துள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு நடைபெற்ற இடைத் தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்றே வந்துள்ளது அதிமுக. அந்தத் தேர்தல்கள் எல்லாம் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேரடியாக களத்தில் இறங்கி பிரசாரம் செய்து பெற்ற வெற்றியாகும்.ஆனால் இது அவர் நேரடியாகக் களத்தில் இறங்காமல் பெற்றுள்ள வெற்றி என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து 40 நாட்களுக்கு மேல் ஆகியும்,  ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை சட்டபேரவை  செயலாளர் அனுப்பி வைக்கவில்லை. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, கடந்த நவம்பர் 8 ஆம் தேதி ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. தேர்தல் அறிவிப்பிற்கு  முன்பே திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயஸ்ரீ இடமாற்றம் செய்யப்பட்டு, பழனிசாமி ஆட்சியராக  நியமிக்கப்பட்டார். பின்னர் இந்த தொகுதிக்கான தேர்தல் அதிகாரியாக ஸ்ரீரங்கம் ஆர்டிஓ மனோகரனை தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி முதல் வாரம் நியமித்தது. அதன்பின் பிப்ரவரி 13 ஆம்  தேதி தேர்தல் நடைபெறும் என்று கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதியன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதற்கு அடுத்த நாளே இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக ஆனந்த் போட்டியிடுவார் என திமுக தலைமை அறிவித்தது. அதன்பின் ஜனவரி 16ஆம்  தேதி அதிமுக வேட்பாளராக வளர்மதி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பாஜக வேட்பாளர் சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அண்ணாதுரை ஆகியோர் போட்டியாளர்களாகக் களத்தில் இறங்கினர்.

இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பா.ஜனதா, கம்யூனிஸ்ட் உள்பட மொத்தம் 46 பேர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 34 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. தொடர்ந்து 5 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதை தொடர்ந்து 29 பேர் களத்தில் இருந்தனர்.அதன்பின் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது. அதிமுக தேர்தல் பணிகளை கவனிக்க 29 அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், நிர்வாகிகள் என்று 50 க்கும் மேற்பட்டோர் களம் இறங்கினர். அதேபோல் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என 60க்கும் மேற்பட்ட  குழு தேர்தல் பணியை மேற்கொண்டனர். 

இந்த தேர்தலில் அதிமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம், வேட்டி, சேலை வழங்குவதாகவும், யாத்ரி நிவாஸ் உள்ளிட்ட இடங்களில் அதிமுகவினர் அனுமதியின்றி தங்கியுள்ளதாகவும், இதுதொடர்பாக தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் அளித்தாலும்  உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம் சாட்டின.
இதையடுத்து தொகுதி தேர்தல் அதிகாரி மனோகரன், ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் கபிலன் ஆகியோரை  தேர்தல் ஆணையம் நீக்கிவிட்டு, சென்னை மாநகராட்சி துணை கமிஷனராக இருந்த வினய்யை தேர்தல் அதிகாரியாகவும், பாளையங்கோட்டை உதவி கமிஷனர் மாதவனை உதவி கமிஷனராகவும் நியமித்தது. மேலும் சிறப்பு பார்வையாளர்களாக கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அனில்குமார் ஜாவும்  நியமிக்கப்பட்டார்.
இருந்தபோதும் அதிமுக மீதான புகார்கள் குறையவில்லை.அந்தச் சூழலிலேயே தேர்தலும் நடந்து முடிந்து முடிவும் வந்துவிட்டது.திமுக வேட்பாளர் ஆனந்தை விட 96 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வென்றுள்ளார் அதிமுக வேட்பாளர் வளர்மதி.
அதே போல திமுக வேட்பாளருக்கும், அக்கட்சியினர் வாக்குகளைக்  கவர கணிசமாக `தொகையை` கரைத்தனர் என்பது செய்திகள் தரும் உண்மை. இது தொடர்பாக இரண்டு தரப்பினரும் அளித்துக் கொண்ட புகார்களே பண விநியோகத்தை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. ஏனெனில் திமுக  `திருமங்கலம் பார்முலா` என்ற இடைத் தேர்தல் உத்தியை உருவாக்கி இடைத் தேர்தலை நடத்த முன்மாதிரியை கொண்டுவந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அதை இப்போது அதிமுக செயல்படுத்துகிறது, வெற்றிகளைப் பெறுகிறது.
இரண்டு கட்சிகளுக்கும் இடையில் இந்த முறை கணிசமாக வாக்குகளைப் பெறலாம் என்ற கனவோடு களம் கண்டது . ஆனால் டெபாசிட் கூட பெறாமல் படு தோல்வியைச் சந்தித்துள்ளது.அக்கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட சுப்பிரமணியன் 5,015  வாக்குகள் மட்டுமே பெற்று மூன்றாவது இடத்தில் முடங்கிப்போனார்.

ஊழல் கட்சிகள் என்று  பாஜகவால் விமர்சிக்கப்பட்ட அதிமுக, திமுக இந்த முறையும் தங்களால் எட்டமுடியாத உயரத்தில் இருக்கின்றன என்பதை பாஜக தலைமை நன்றாகவே புரிந்துகொண்டிருக்கும்.

இந்த வெற்றிக்கு காரணம் பலமில்லாத எதிர்க்கட்சிகள், அரசு எந்திரத்தின் முழு ஆதரவுடன் கூடிய அதிமுகவின் சளைக்காத களப் பணி ஆகியவற்றை கூறலாம்.  32 அமைச்சர்கள், எம்.எல்.ஏ.கள், எம்பிக்கள், நடிகர் நடிகைகள் உள்ளிட்ட நட்சத்திர பேச்சாளர்கள்  மற்றும் மூத்த தலைவர்கள் என்று அனைவரும் களம் இறங்கி ஸ்ரீரங்கத்தை அதகளப்படுத்தினர்.கடந்த 2 மாதமாக விருந்தும் பிரசாரமும் பொதுக் கூட்டங்களும் கலை நிகழ்ச்சிகளும் என்று வாக்காளர்களுக்கு `இனிதே கழிந்தன`பொழுதுகள். ஒட்டுமொத்த அமைச்சர்கள் கவனமும் ஒரு தொகுதியிலேயே குவிந்துவிட்டதால் மாநிலத்தின் அரசு நிர்வாகம் சுணக்கம் கண்டது என்பது உபரித்தகவல்.        தொடர்ந்து, அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாடாளுமன்றத் தேர்தல்,ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் என்று அனைத்திலும் அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.கள் நட்சத்திரப் பட்டாளங்கள்,மூத்த தலைவர்கள் என்று ஒரு தரப்பினரும் வேலையில் தெரியாத அரசு அதிகாரிகள் கொண்ட ஒரு விசுவாசப் படை என்னும் இன்னொரு  தரப்பினரும்   கலந்து கட்டி வாக்காளர்களை கவர்ந்து வெற்றிக் கனி பறிக்கிறார்கள் என்பது வழக்கமாகிவிட்டது.
இதே நடைமுறை வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில் தொடருமா என்பது சந்தேகமே.ஏன் எனில் ஒரு தொகுதிக்கு அல்லாமல் 234 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ள தேர்தல். அதனால் இது போன்ற உபசரிப்பு உத்திகளை செயல்படுத்திக் காட்ட முடியுமா  என்பது கேள்விக் குறிதான்.
அதே நேரத்தில் தமிழகத்தின் மாற்றுக் கட்சி பாஜக தான் என்று கூறி புளகாங்கிதம் அடைந்து வரும் அக்கட்சியினருக்கும், தலைமைக்கும் ஸ்ரீரங்கம்  தேர்தல் முடிவு சற்று அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வெற்றியை எதிர்பார்க்கவில்லை என்றாலும் டெபாசிட் பெறுவதில் கவனம் செலுத்தி காய்களை நகர்த்திய தமிழக பாஜகவிற்கு, டெல்லித் தேர்தல் முடிவைப் போலவே உள்ளது இந்த ஸ்ரீரங்கம் தேர்தல் முடிவும்.
பாஜக தமிழகத்தில் கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது இன்னும் ஏராளம் உள்ளது.  விகடன்.com

கருத்துகள் இல்லை: